கடந்த காலத்துக்கு நன்றி! பிறந்த நாளில் சின்ன திரை நடிகை ஷோபனா கருத்து!
மீனாட்சி சுந்தரம், பூங்காற்று திரும்புமா ஆகிய இரு தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார் ஷோபனா.
கடந்த காலத்துக்கு நன்றி என சின்ன திரை நடிகை ஷோபனா கருத்து தெரிவித்துள்ளார்.
பிறந்தநாளையொட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், நிகழ்கால முயற்சிகளுக்கும் எதிர்கால பலன்களுக்கும் சேர்த்து நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
சின்ன திரையில் ஒரே நேரத்தில் இரு தொடர்களில் நாயகியாக நடித்துவருபவர் நடிகை ஷோபனா. கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் பூங்காற்று திரும்புமா என்ற தொடரிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த இரு தொடர்களுமே ஒரே நாளில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால், ஒரே நேரத்தில் இரு தொடர்களில், அதுவும் சமகாலகட்டத்தில் இருந்து ஒளிபரப்பாகத் தொடங்கிய தொடரில் நாயகியாக நடிப்பவர் என்ற பெருமையை ஷோபனா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவரைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் விஜய் தொலைக்காட்சி பூங்காற்று திரும்புமா என்ற தொடரை ஒளிபரப்பி வருகிறது.
எனினும், நடிப்புத்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள, மீனாட்சி சுந்தரம் தொடரில் 60 வயதானவருக்கு மனைவியாக நடிக்கும் பாத்திரத்தை தவறவிடக்கூடாது என அத்தொடரிலும் ஷோபனா நடித்து வருகிறார்.
இவ்வாறு மிகவும் பிஸியான சின்ன திரை நடிகையான ஷோபனா, இன்று தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார். தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, சின்ன திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.
பிறந்தநாள் புகைப்படங்களைப் பகிர்ந்து ஷோபனா பதிவிட்டுள்ளதாவது,
வாழ்க்கை மிகவும் சரியானது அல்ல. ஆனால், இதில் நான் சந்திக்கும் மனிதர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். இதில் பாடங்களையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளேன். உயிர் வாழ்வதன் தேவையைத் தேடிய என்னுடைய கடந்த காலத்துக்கும், என்னுடைய நிகழ்கால முயற்சிகளுக்கும், எதிர்கால பலன்களுக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் ஷோபனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | வெற்றிக்கான ரகசியம் என்ன? சிறகடிக்க ஆசை நாயகியின் பதிவு