இத்தாலி கார் பந்தயம்: அசத்திய அஜித் குமார் அணி!
இத்தாலி கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாம் இடம்பிடித்துள்ளனர்.
இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளனர்.
துபையில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா சார்பில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன் குழுவினருடன் கலந்துகொண்டார்.
அங்கு நடைபெற்ற 911 ஜிடி3 ஆர் என்கிற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அஜித் அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இத்தாலியில் நடைபெற்ற முகெல்லோ 12ஹெச் ரேஸில் மார்ச் 23 அன்று அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொண்டது.
தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் இந்தப் பந்தயத்தில் ஜிடி992 பிரிவில் களமிறங்கிய அஜித் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இதையும் படிக்க | தனுஷ் - அஜித் கூட்டணி! தயாரிப்பாளர் சொன்னது என்ன?
வெற்றி பெற்ற பின்னர் அஜித் தனது அணியினருடன் இந்திய கொடியை ஏந்திவந்தார். பின்னர், தன்னைக் காண வந்த ரசிகர்களிடம் வெற்றிக் கோப்பையை காட்டிய அஜித் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
துபையைத் தொடர்ந்து மீண்டும் அஜித்குமார் ரேசிங் அணி இத்தாலியில் மூன்றாம் இடம்பிடித்து அசத்தியுள்ள நிலையில் திரைத் துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 வெளியாகவுள்ள நிலையில், கார் பந்தயத்தில் அஜித் அணி வெற்றி பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கியுள்ளது.
கலைத்துறை பங்களிப்புக்காக நடிகர் அஜித்துக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.