கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியளவில் பிரபலமான கலை இயக்குநர் தோட்டா தரணி. ஓவியரான இவர் கலை இயக்குநராக பல சாதனைகளையும் ஆச்சரியப்படுத்தும் செட் அமைப்புகளையும் செய்தவர்.
தோட்டா தரணி செட் என்றால் உண்மையைவிட தத்ரூபமாக இருக்கும் என்கிற அளவிற்கு பல மொழிகளிலும் கலை வடிவமைப்பை மேற்கொண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார்.
முக்கியமாக, நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற தாராவி காட்சிகளெல்லாம் சென்னையில் அமைக்கப்பட்டவைதான். மேலும், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திர போராட்டக் காட்சிகள் உள்பட பலவற்றை தத்ரூபமாக செட் போட்டு அசத்தியவர் தோட்டா தரணி. சிவாஜியில் இடம்பெற்ற, ‘வாஜி.. வாஜி..’ பாடலை மறக்க முடியுமா?
காதலர் தினம், தசாவதாரம், பொன்னியின் செல்வன் என காலகட்டத்திற்கு ஏற்ற திரைப்படங்களுக்கான கலை இயக்குநர் பட்டியலில் முதல் தேர்வாக இன்றும் தோட்டா தரணியே முன்னணியில் இருக்கிறார். இறுதியாக, குபேரா, ஹரிஹர வீர மல்லு, காட்டி ஆகிய படங்களுக்கு கலை வடிவமைப்பு செய்திருந்தார்.
மிகச்சிறந்த வடிவமைப்பு திறனும் வரலாற்று அறிவும் உள்ளவர் என்பதாலேயே பல இயக்குநர்கள் கதை, உருவாக்க விவாதங்களிலும் தோட்டா தரணியிடம் ஆலோனைகளையும் பெறுகின்றனர்.
இந்த நிலையில், பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் மூலம் திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ. 13 அன்று சென்னையிலுள்ள பிரான்ஸ் அலையன்ஸ் வளாகத்தில் பிரான்ஸ் தூதர் இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்கவுள்ளார். அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
பிரான்ஸின் இந்த செவாலியே விருதை தமிழில் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.