தர்மேந்திரா - சர்பிரைஸ் கொடுத்த பாலிவுட்டின் ஹாலிவுட் அழகன்!
தர்மேந்திரா குறித்து...
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தர்மேந்திரா வீடு திரும்பியுள்ளார்.
இந்திய சினிமா பல சூப்பர் ஸ்டார்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பார்த்துவிட்டது. ஆனால், மிக மிக சிலருக்கு மட்டுமே பெரிய வீழ்ச்சிகளைக் கொடுக்கமால் வெற்றி மீது வெற்றியுடன் கோல்டன் டிக்கெட்டையும் வழங்கியிருக்கிறது.
அப்படியான ஒரு நடிகர் தர்மேந்திர சிங் தியோல். 1935-ல் பிறந்த தர்மேந்திரா சினிமாவில் அறிமுகமாகும்போதே கவர்ச்சியான நாயகன் என்கிற பிம்பத்துடனே திரைக்கு வருகிறார். அழகான தோற்றமும் திரைப்படங்களில் அவர் பேசிய மென்மையான காதல் வசனங்களும் அன்று பெண்களின் உள்ளத்தைக் கொள்ளையடிக்கிறது.
Advertisement
Advertisement
ஆண் என்றாலே அது தர்மேந்திராதான் என்கிற அளவுக்கு வட இந்தியா முழுவதும் தர்மேந்திரா அலைதான். இவர் படங்கள் திரைக்கு வந்தால் அது சூப்பர் டூப்பர் ஹிட்தான் என்கிற அளவிற்கு தர்மேந்திரா வளர்ந்துகொண்டிருந்தார்.
இவரின் இரண்டாவது மனையியும் எம்.பி.யுமான நடிகை ஹேமாலினியுடன் இவர் இணைந்து நடித்த காதல் படங்கள் பட்டிதொட்டியெல்லாம் அசத்தியது. முக்கியமாக, சீதா ஆர் கீதா (Seeta Aur Geeta), ராஜா ராணி (raja rani), ஜக்னு (jagnu) ட்ரீம் கேர்ள் (dream girl) படங்கள் வசூலை வாரி குவித்தவை.
தர்மேந்திராவின் திரைவாழ்வில் மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்த திரைப்படம் சோலே. 1975 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோதும் இன்றும் இந்திய சினிமாவின் மைல்கல் படமாகவே பார்க்கப்படுகிறது. ஆல் இந்தியா ஹிட்டான இப்படத்தில் தர்மேந்திரா நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருப்பார்.
அதுவரை சின்னச் சின்ன ஆக்சன்களைச் செய்து வந்தவருக்கு சோலே ஆக்சன் ஹீரோவாக பெரிய பரிணாமத்தைக் கொடுத்ததும் முழு ஆக்சன் நாயகனாக தர்மேந்திரா நடிக்க ஆரம்பித்தார். காதல்கள் இருந்தாலும் சண்டைக்கும் பஞ்சமில்லாத கதைகள் என்பதால் திரும்பி பக்கமெல்லாம் he - man (தர்மேந்திரா புகழ்ப்பெயர்) மயம்தான்.
1970 - 1980 காலகட்டங்களில் ஆண்டிற்கு 5 படங்கள் வெளியாகி ஐந்தும் வெற்றிப்படங்களான ஆச்சரியத்திற்கும் சொந்தக்காரர் தர்மேந்திரா.
1990-ல் இவர் தயாரித்த கயல் திரைப்படத்துக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்தன. இவை மட்டுமல்லாது வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகள், அங்கீகாரங்கள் என பாலிவுட் சக்ரவர்த்தியாக இருந்த தர்மேந்திரா உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்கிற செய்தி பரவியதும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், அத்தகவல் பொய்யென அவரது மனைவி ஹேமா மாலினி விளக்கமளித்து பதிவொன்றை வெளியிட்டார். சரி, தீவிர பிரிவில்தான் இருக்கிறார். அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளிவரும் என செய்தி நிறுவனங்களும் ரசிகர்களும் காத்திருந்தபோது... ‘ஹாய் செல்லம்’ என மீண்டும் தெம்பாகி ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார் தர்மேந்திரா.
இவரின் மரணச் செய்தி ஒருபக்கம் கிண்டலடிக்கப்பட்டாலும் இன்னொரு புறம் தர்மேந்திராவுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.