குட் பேட் அக்லி மிகப்பெரிய லாபமில்லை: தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் குறித்து...
குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் லாபம் தரவில்லை என தயாரிப்பு நிறுவனம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.
இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் மற்றவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப் என பலர் நடித்திருந்தனர்.
ரூ.270 கோடி பொருள் செலவில் உருவான இந்தப் படத்தின் வசூல் ரூ.212 கோடி என தவல்கள் தெரிவித்தன. சுமார், ரூ.60 கோடி இழப்பு என்றும் சொல்லப்பட்டது.
பின்னர், இந்தப் படத்தின் இசைக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் இது குறித்து பேசியதாக தெலுங்கு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குட் பேட் அக்லி படத்திற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அஜித் படத்திலேயே அதிகமாக வசூலித்தது. மிகப்பெரிய லாபம் பெறவில்லை, அதேசமயம் நஷ்டமும் அடையவில்லை.
தமிழில் முதல் படமே நல்ல வரவேற்பு கிடைத்தது. அஜித்துடன் வருங்காலங்களில் அதிகமான படங்களில் பணியாற்றுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையா, போலியானதா என்ற குழப்பத்திற்கு மத்தியில் அஜித் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் படங்களுக்கு வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருப்பது அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாவதும் குறிப்பிடத்தக்கது.