லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றான லட்சுமிகாந்தன் கொலை வழக்கு இன்றும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. காரணம், இக்கொலை வழக்குக்குப் பின் தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் போக்கையும் மாற்றியது.
லட்சுமி காந்தன் இந்துநேசன் என்கிற அவதூறு இதழை நடத்தி வந்தார். அதில், அன்றைய நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்க அவதூறுகளை தொடர்ந்து எழுதி வந்தார். அப்படி, தமிழ் சினிமாவின் வணிகத்திலும் திறமையிலும் உச்சத்தில் இருந்த நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரையும் மோசமாகத் தாக்கி எழுதி வந்ததால் அவர்கள் இருவரும் கூலிப்படையினரை ஏவி லட்சுமி காந்தனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இவ்வழக்கில் பாகதவருக்கும் என்எஸ்கேகும் ஆயுள் தண்டனை கிடைத்தது. இது, தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இவர்கள் இருவரும் 4 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பின் லண்டன் பிரிவி கவுன்சில் மூலம் மேல்முறையீட்டில் விடுதலை அடைந்தனர்.
ஆனால், விடுதலை அடைந்தும் சர்ச்சைகள் தீராததால் சரியான வாய்ப்புகளும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை மிக மோசமான முடிவை நோக்கியே சென்றது. இன்னொரு பக்கம் என். எஸ்.கிருஷ்ணன் தொடர்ந்து நடித்தாலும் அவருக்கும் சில பாதிப்புகளையே கொடுத்தது.
இந்த நிலையில், லஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்கிற பெயரில் புதிய திரைப்படம் உருவாகிறது. கொன்றால் பாவம் திரைப்படத்தை இயக்கிய, தயாள் பத்மநாபன் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. 2எம் சினிமாஸ் தயாரிக்கிறது. இதன் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம், துல்கர் சல்மான் நடிப்பில் தியாகராஜ பாகதவரின் வாழ்க்கைக் கதையாக உருவான காந்தா திரைப்படத்திலும் இந்த வழக்கு இடம்பெறலாம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: காந்தா புதிய வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.