சூப்பர் மாரி! பைசனைப் பாராட்டிய ரஜினி!
மாரி செல்வராஜுக்கு பாராட்டுகளைத் தெரிவித்த ரஜினி...
நடிகர் ரஜினிகாந்த் பைசன் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜைத் தொடர்புகொண்டு, ”சூப்பர் மாரி... சூப்பர்.. பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது. மாரி வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்ட மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.