கூலியில் நடித்தது தவறு... ஆமிர் கான் சொன்னது உண்மையா?
இணையத்தில் பரவும் ஆமிர் கான் செய்தி....
நடிகர் ஆமிர் கான் கூறியதாக பரவும் செய்தி போலியானது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற கூலி படம் தற்போது அமோசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் உள்பட பலரின் கதாபாத்திரமும் விமர்சனத்திற்கு உள்ளானது. முக்கியமாக, இந்தியாவின் சிறந்த நடிகரான ஆமிர் கானை வீணடித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
Advertisement
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் நடிகர் ஆமிர் கான், “சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே கூலியில் நடித்தேன். ஆனால், இப்போது வரை என் கதாபாத்திரம் என்னவென்று தெரியவில்லை. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது ஏன் எனப் புரிகிறது. இனிமேல், இது மாதிரியான திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். கூலியில் நடித்து பெரிய தவறு செய்துவிட்டேன்.” எனக் கூறியதாக பல நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டன.
சமூக வலைதளங்களிலும் பலர் ஆமிர் கான் சொன்னதாக இவற்றை பரப்பி வந்தனர். ஆனால், ஆமிர் கான் இப்படி எதுவும் சொல்லவில்லை என்றும் இவை அனைத்தும் போலியான செய்தி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆமிர் கான் பேசியதாகச் சொல்லப்படும் கருத்துகள் எந்த நேர்காணல்களிலும் பதிவாகவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க: கருப்பு வெளியீட்டில் மாற்றம்?