சீமானால், பாலா முன் அழுத இயக்குநர் பாலு மகேந்திரா!
சீமான் குறித்து பாலா பேசியவை...
இயக்குநர் பாலா தனக்கும் நாதக தலைவர் சீமானுக்கும் இடையேயான உறவு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. சேது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் குறைவான திரைப்படங்களை இயக்கினாலும் இந்தியளவில் தன் காலத்து இயக்குநர்களிடம் நன்மதிப்புடனே இருக்கிறார். பாலாவின் நான் கடவுள், பரதேசி ஆகிய படங்களை வியக்காத திரை விமர்சகர்கள் குறைவுதான்.
இறுதியாக இயக்கிய சில படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் என்றே மதிப்பிடப்படுகிறார்.
Advertisement
இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் பாலா, நாம் தமிழ் கட்சித் தலைவர் சீமானுக்கும் தனக்குமான உறவு குறித்து பேசினார்.
அப்போது, “நானும் அண்ணன் சீமானும் நெருங்கிய உறவில் இருப்பவர்கள். ஆரம்ப காலங்களில் பசி அதிகமாக எடுத்தால் நேராக அவர் வீட்டுக்குதான் செல்வேன். அங்கு, எப்போதும் 20 பேர் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் சேர்த்தே சீமான் சம்பாதித்தார். ஒருமுறை, நான் கோபித்துக்கொண்டு அண்ணன் வீட்டுக்குதான் சென்றேன். அங்கு, மூன்று நாள் இருந்தேன்.
என்னைக் கவனித்தவர், என் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் விஷயத்தைச் சொல்லி அவரை அழைத்து வந்தார். இயக்குநர் என்னைப் பார்த்ததும் அழுதுவிட்டார். பின், கிளம்பிச் சென்றேன். இவரை அழைத்து வந்து என்னை வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாரே என்று சீமானிடம் கோபப்பட்டேன். அன்பாக இருந்தால் சீமான் அண்ணனை ‘கருவாயா’ என்பேன். அவர் அன்பாக இருந்தால், ‘தம்பி’ என்பார். கோபமாக இருந்தால், ‘வாங்க, போங்க’ என்பார். இன்று பெரிய அரசியல் தலைவரான பின் அவரைக் கருவாயா எனக் கூற முடியவில்லை என வருத்தப்படுகிறேன்.” என நெகிழ்ச்சியாக இருவருக்குமான உறவு குறித்து பகிர்ந்துகொண்டார்.