ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் முழுத் திரைப்படமும் கடந்த வெள்ளிக் கிழமை (ஏப். 10) அதிகாலை இணையத்தில் வெளியானது.
இது குறித்து குசைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 6 பேரை காவல் துறையினர் இன்று (ஏப். 12) கைது செய்தனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவா் நடித்த கடைசிப்படமாக ஜன நாயகன் அமைந்தது. பொங்கல் விடுமுறையை இலக்கு வைத்து, ஜனவரியில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா், இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இணையத்தில் முழுப் படமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டிருந்த கோப்பிலிருந்து படம் வெளியாகியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தங்களுக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவித்துள்ளது.
திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் கேடிஎம் (கீ டெலிவரி மெசேஜ்) எனும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) பாதுகாப்பு முறையை தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. இந்த கடவுச்சொல் இயக்குநர் அல்லது தயாரிப்பாளரிடமே இருக்கும். அந்த கடவுச்சொல் இல்லாமல் படத்தை யாராலும் அணுக முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.