என் அப்பா மறையவில்லை... கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றி குறித்து பேசியுள்ளார்...
நடிகர் சிவகார்த்திகேயன் தாய் கிழவி திரைப்படத்தின் வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது. இதனால், இதுவரை ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்து நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
இதன் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது, படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன், ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் சொன்னபோதே கண்டிப்பாக இதை தயாரிக்க வேண்டும் என நினைத்தேன். தாய் கிழவியை என் குழந்தையைப் போல் கவனித்தேன். இதுவரை எப்படியும் 12 முறை இப்படத்தைப் பார்த்திருப்பேன். பவுனுத்தாயாக என் அம்மாவும் அக்காவும் மனைவியுமே தெரிகிறார்கள். கனா, அமரன், தாய் கிழவி திரைப்படங்களின் வெற்றிகளின் போது பெரிய நிறைவும் அமைதியும் கிடைக்கிறது.
விளையாட்டில் கூட வெற்றி பெறுவது விளையாட்டல்ல. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அணியாக உழைக்கும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். தாய் கிழவியைப் பார்த்து முடித்ததும் சிவக்குமார் முருகேசனின் தந்தை என்னையும் சிவாவையும் கட்டிப்பிடித்தார். அப்போது, என் அப்பா இன்னும் மறையவில்லை என நினைத்துக்கொண்டேன்” எனக் கண்கலங்கி பேசினார்.