சண்டீகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு குறித்து...
நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கானுக்கு இடையேயான காட்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கேரளம், சென்னை என பல பகுதிகளில் நடைபெற்ற இதன் படிப்பிடிப்பில் இதுவரை பல நட்சத்திர நடிகர்கள் கலந்துகொண்டு நடித்துள்ளனர்.
அண்மையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ரஜினி மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் காட்சியை சண்டீகரிலுள்ள மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றில் படமாக்கவுள்ளதாகவும் இருவரும் சந்தித்துக்கொள்ளும் இக்காட்சி படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கானின் ரா ஒன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, ஜெயிலர் - 2 படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.
ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து அனிருத் இசையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.