பாடகர் வேடன் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தைப்பல் என ஆய்வில் உறுதி! விரைவில் வழக்கு?
பிரபல ராப் பாடகர் வேடன் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தைப்பல் என உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து...
பிரபல ராப் பாடகர் வேடன் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தைப்பல் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் மீது வழக்குத் தொடரப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் முன்னணி ராப் பாடகராக அறியப்படும் வேடன் மற்றும் அவரின் நண்பர்கள் 8 பேர் போதைப் பொருள் விவகாரத்தில் கடந்த 2025 ஏப்ரலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, வேடன் சிறுத்தைப்பல்லுடன் கூடிய செயினை அணிந்திருப்பதாகக் கூறி அவர் மீது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொடநாடு வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
Advertisement
அப்போது, அந்த செயினை ரசிகர் ஒருவர் தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும், அதிலிருப்பது உண்மையான சிறுத்தைப்பல்தானா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் வேடன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுத்தைப்பல்லின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய கொல்கத்தாவில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். மேலும், அதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவராததால் பாடகர் வேடனுக்கு பிணை வழங்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கொல்கத்தா ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாடகர் வேடன் அணிந்திருந்ததது உண்மையான சிறுத்தைப்பல்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வனத்துறை தரப்பில் விரைவில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.