தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!
தமிழக அமைச்சர்களை பிரபல ராப் பாடகர் வேடன் சந்தித்துள்ளது குறித்து...
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை பிரபல ராப் பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடகரில் ஒருவராக அறியப்படும் பாடகர் வேடன், சமூக நீதியை மையமாகக் கொண்டு ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த நிலையில், தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை இன்று (ஜூன் 10) தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகங்களில் மரியாதை நிமித்தமாக பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
Advertisement
Advertisement
அமைச்சர் வன்னி அரசு உடனான சந்திப்பில், இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் குறித்து பாடியதற்காக ராப் பாடகர் சங்கீதன் என்பவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து இருவரும் உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக சமூகநீதித்துறை வெளியிட்டுள்ள பதிவில்,
”ராப் இசை உலகில் தனக்கென தனி அடையாளத்தையும் - இடத்தையும் பெற்றுள்ள ராப் பாடகர் வேடன் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்தார். சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு தனது வாழ்த்துகளைக் கூறினார்.
தமிழீழத்தில் ராப் பாடகர் சங்கீதன், தனது பாடலுக்காக இலங்கை அரசால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தான் அடுத்து திட்டமிட்டுள்ள முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசியல், சமூக நீதி ஆகியவைக் குறித்து தொடர்ந்து தனது பாடல்களை வெளியிட்டு வரும் பாடகர் வேடன் கடந்த மார்ச் மாதம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்தது பெரும் பேசுபொருளானது.