தற்போது சரித்திர கதைகளை மையமாகக் கொண்டு இயக்குநர்கள் திரைக்கதைகளை அமைத்து வருகின்றனர். சுந்தர்.சி சங்கமித்திரா என்ற பெயரில் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது. தேர்வான நடிகர்களுக்கு வாள் பயிற்சி, வில் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. விஜய் நடித்த "கத்தி' படத்தை தெலுங்கில் "கைதி நம்பர் 150' என்ற பெயரில் ரீமேக் செய்து சிரஞ்சீவி நடித்தார். இந்த படத்தை வி.வி.நாயக் இயக்கினார். அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படமாக சிரஞ்சீவி ஒரு சரித்திரக் கதையை தேர்வு செய்துள்ளார். சரித்திரக் கதையில் சிரஞ்சிவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார். இந்த படம் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரமசிம்ம ரெட்டியின் வாழ்க்கைத் தழுவலாக உருவாகவுள்ளது. ஆங்கிலேய ஆட்சி ஆந்திரத்தில் கால் ஊன்றிய விதம் தொடங்கி, அதன் ஆட்சி, அதிகாரம் முடிவுக்கு வந்தது முதலான விவரங்கள் இக்கதையில் இடம் பெற்றுள்ளன. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.