ஆயிரத்துத் தொளாயிரத் தேழில் இந்து சீன
அட்மினிஸ்ட்ரேட் டர்சரவா, பாரீசு சென்றார்;
தீயதொரு செய்தியினைக் கேள்வியுற்றார் அங்கே!
திடுக்கிட்டார் புதுவைக்குத் தந்திகொடுத் திட்டார்
தூய்பிரஞ்சிந் தியாவை ஆங் கிலேயர் கொள்ளட்டும்
அதற்காக ஆப்பிரிக்கத் துணைப்பகுதி ஒன்றை
நேயமுறு ப்ராஞ்சியர்கள் கொள்ளட்டும் என்ற
நேர்மையிலாத் தீர்மானம் பாராளும் மன்றில்
வரும்; அங்கும் உறுதிபெறும் என்றுரைத்தார் சரவா!
மனம் துடித்தார் பாரதியார், வாவேசு ஐயர்
அரவிந்தர், சீனிவா சாச்சாரி முதலோர்
அழகு தமிழ் ஏடொன்றைப் பறக்கவிட்டார் கவிஞர்
தெருவெல்லாம் சொற்பெருக்கைப் பாய்ச்சினார் அன்னார்!
"திரண்டெழுவீர் மக்களே, பிரெஞ்சிந்தி யாவைத்
தரப்போகும் பிரஞ்சியர்க்கு மறுப்பொன்று வரைவீர்''
என்றுரைத்தார் பாரதியார்! தந்தி பறந்தனவே!
எட்டாநாள் பிரஞ்சியர்கள் பதில் தந்தி தந்தார்
"இந்து பிராஞ் சுத்தலத்தை விற்கும் நோக்கத்தை
விட்டுவிட்டோம்'' என்பதுதான் அத்தந்திச் செய்தி
விரைவாக அச்செய்தி அரவிந்தர் வீட்டில்
எட்டியதும் பாரதியார் பூரித்தார் இங்கே
எப்போதும் பிரஞ்சிந்தி யாஇருக்க வேண்டும்
அட்டியின்றி இப்போதே ஆங்கிலே யர்கள்
அகன்றுவிட வேண்டும் இந்நாட்டைவிட் டென்றார்.
(தினமணி - 5.9.54)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.