முகப்பு
கட்டுரைகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 50: இலங்கையின் சீன, பாகிஸ்தான் தொடர்புகள்!

இரண்டாம் உலக யுத்தத்தின்போது இங்கிலாந்தின் யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டன. இது உலகம் அறிந்த செய்தி. காரணம் இதன் துறைமுகத்தின் பரப்பளவு ஆழம். இதன் பிறகு வல்லரசுகளி

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:48 PM
பகிர்:

இரண்டாம் உலக யுத்தத்தின்போது இங்கிலாந்தின் யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டன. இது உலகம் அறிந்த செய்தி. காரணம் இதன் துறைமுகத்தின் பரப்பளவு ஆழம். இதன் பிறகு வல்லரசுகளின் கவனம் திருகோணமலை துறைமுகத்தின்மீது விழுந்தது. இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இதன் வெளிப்பாடு 1980-இல் அமெரிக்கத் தளபதிகள் கூட்டமைப்பு நடத்தும் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் டர்ள்ற்ன்ழ்ங் எனும் சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரை மூலம் தெரிய வந்தது.

திருகோணமலை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்று' என்று ஜெனரல் டேவிட் சி.ஜோன்ஸ் (மநஅஊ) குறிப்பிட்டதை உலகம் கூர்ந்து கவனித்தது. ஆனால் ""இந்த வரி தவறுதலாக இடம் பெற்றுவிட்டது-இது ஒரு பிழை'' என்று அந்த சஞ்சிகை பதில் கூறியது. மழுப்பலாக பதில் கூறினாலும் அது அமெரிக்காவின் விருப்பம் என்பது வெளிப்பட்டது. 1981-இல் அந்நியப் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தங்குவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் போர்க்கப்பல்களின் பல்வேறு காரணங்களைக் கூறி திருகோணமலை துறைமுகம் வருவதும் அதிகரித்தது.

1983-இல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் காஸ்பர் வெய்ன்பேர்கர் கொழும்பு வருகை தந்தார். "தேநீர் விருந்து மட்டுமே. அதுவும் இந்த வழியாகப் போகும் வழியில் சிறு தங்கல்' என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அவ்வாறிருக்க வேண்டுமென்பதில்லை.

Advertisement

ஏனென்றால் காஸ்பர் வருகையைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ ஜெனரல் வெர்னர் வால்டர்ஸ் வருகையும் அமைந்தது. அப்போதும் ராணுவ ஒப்பந்தம் ஏதுமில்லை என்றுதான் மறுக்கப்பட்டது. இந்த மறுப்புகளுக்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுக் குழுத் தலைவர் ஜோசப் ஆட்போ தலைமையில் ஆறு பேர் கொழும்பு வந்தனர். அவர்கள் ""லங்கையின் ராணுவ பாதுகாப்புக்கு 3.5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க சிபாரிசு செய்வோம். இலங்கை கடற்படை வசதி பெறுவதையும், தேவையான பயிற்சி பெறுவதையும் உறுதி செய்வோம்'' என்றும் அறிவித்தனர்.

திருகோணமலை துறைமுகத்தையொட்டி, ராணுவப் பயன்பாட்டுக்காக 10 ஆயிரம் டன் பெட்ரோல் சேமித்து வைக்கும் 100 கிடங்குகள் உள்ளன. 1920-இல் இங்கிலாந்து இந்த கிடங்குகளைக் கட்டியது. தேசிய மயமாக்கப்பட்ட இந்த டாங்குகள் குத்தகைக்கு விடப்பட்டன. இதில் இந்தியாவுக்கு சில டாங்குகள் உண்டு. அமெரிக்காவும் இந்த டாங்குகளைப் பயன்படுத்த விரும்புகிறது. திருகோணமலை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைக்கென அமெரிக்கா நிறுவனத்திடம் 2500 ஏக்கர் வழங்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் போட்ட 1951 மற்றும் 1985 ஒப்பந்தங்கள் உள்ளன. இதற்காக இலங்கையில் மேற்குக் கரையோரமுள்ள கிராமங்கள் நூற்றுக்கணக்கில் காலி செய்து தரப்பட்டுள்ளன. இந்த ஒலிபரப்பு மூலம் செயற்கைக்கோள் சாதனங்களுடனும் தொடர்பு கொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள சாதனங்களுக்கும் தகவல் அனுப்பலாம்; மறிக்கலாம்.

பாகிஸ்தான் இலங்கைத் தொடர்பு என்பது, பங்களாதேஷ் பிரச்னையை ஒட்டி உருவானது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், இந்திய வான் எல்லை வழியாக பாக் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது வருவாயைக் காரணம் காட்டி பாகிஸ்தானின் விமானங்கள், இலங்கையின் விமான நிலைய வசதிகளை பயன்படுத்திக் கொண்டன.

இந்தியாவுடன் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்ட திருமதி பண்டாரநாயக்காவின் செயல் சந்தேகங்களை எழுப்பியது. அது மட்டுமன்றி கிழக்கு பாகிஸ்தானில் என்ன நடைபெற்றாலும் அந்தச் செய்திகளை அரசு சார்ந்த செய்தி நிறுவனங்கள் மூலம் தடைசெய்து, பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்று தொடங்கிய பாகிஸ்தான் நட்பு, 1983-க்குப் பிறகு அதிமாகியுள்ளது. 1984-இல் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது மற்றும் ராணுவத்தினர் பாகிஸ்தான் சென்று வந்தனர். அதே ஆண்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மாலத்தீவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு பாகிஸ்தான் திரும்பியபோது கொழும்பு வழியாக சென்றார்.

இதனைத் தொடர்ந்து 1985-இல் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பாகிஸ்தான் சென்றார். பதிலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஜியா வுல் ஹக் இலங்கை வந்தார். அப்போது ஜியா வுல் ஹக் 20 கோடி டாலருக்கு பாகிஸ்தான் - இலங்கை இடையே வர்த்தகம் நடந்துள்ளது என குறிப்பிட்டார்.

இவையெல்லாம் வெளிப்படையான செய்திகள். ஆனால் பாகிஸ்தானில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு 1986-இல் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது ரகசியம். இந்தப் பயிற்சி அனைத்தும் கிளர்ச்சியை முறியடிக்கும் விதமான பயிற்சிகள் ஆகும். ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கியமானவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்தது. இவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு கருப்பு உடை சீருடையாக அளிக்கப்பட்டது. அவர்களின் அணுகுமுறை கொடுமையானது; வித்தியாசமானது.

""இலங்கையின் இறையாண்மையில் அதன் ஆதிபத்திய உரிமையில் அந்நியர் தலையீடு கூடாது. இவ்வகையான தலையீட்டை ஏற்கவோ, அந்நாட்டைப் பிரிக்கவோ கூடாது'' என்று சீனா ஒருமுறை அதாவது 1983 வாக்கில் கருத்து தெரிவித்தது. இதன் பொருள் வெளிப்படையானது. இந்தியாவை முன்னிறுத்திச் சொன்ன கருத்துதான் அது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த சீனா விரும்புகிறது.

1983-இல் ஆயுத உதவி கோரி இலங்கை கோரிக்கை வைத்த நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனையொட்டி, சீனம் அதிக அளவில் ஆயுதத் தளவாடங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜெயவர்த்தனாவின் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தன சீனா சென்று பரிவர்த்தனைக்கு அடித்தளமிட்டார். தொடர்ந்து ஜெயவர்த்தனாவும் சீனா சென்றார்.

சீனா விமானப்படைக்குழு கொழும்பு சென்றது (1984). அதே ஆண்டில் தகவல் தொடர்புக்குப் பொறுப்பு ஏற்கும் தளபதி ஜெனரல் வீரசிங்காவுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலியும் சீனா சென்றார்.

சீன அதிபர் லீசின் கொழும்பு வந்தார். இலங்கையின் இறையாண்மை மக்களின் ஒற்றுமை குறித்து மட்டுமே அவர் பேசினார். ஆயுத உதவி குறித்து பேசவில்லை. ஆனால் அவை செயலில் நடைபெற்றன.

இது தவிர இதாலி, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தனிப்பட்ட ஆயுத வியாபாரிகளிடமிருந்து ஹெலிகாப்டர், விமானங்கள், கவச விமானங்கள், அதிவிரைவுப் படகுகள் முதலியவை வாங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments