முகப்பு
கட்டுரைகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 30: புத்தளம் இனப்படுகொலை

1977-ஆம் ஆண்டு பிறந்தது. அவ்வாண்டுத் தேர்தலில் அமிர்தலிங்கத்தின் தலைமையில் தமிழ் ஈழம் என்ற கோஷம் முன் வைக்கப்பட்டுத் தமிழர் ...

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:31 PM
பகிர்:

அதுவரை நடந்த தாக்குதல்கள் எல்லாமே சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுத் தமிழர்கள்மீது மட்டும்தான் அதிகமாக நிகழ்த்தி இருந்தது. மற்ற மதச் சிறுபான்மையினர் மீது தமிழர் மீது நடத்திய வெறித் தாக்குதல் இன்றி சட்டரீதியான ஒடுக்குமுறைகளை மட்டுமே நிகழ்த்தி வந்தது.

ஆனால் "தனி ஈழம்' என்கிற கோஷம் எழுந்த அதேநேரத்தில் நாடு தழுவிய தேசிய உணர்வு எழுச்சியினால் சிங்கள அரசுக்கு எதிராக மதச்சிறுபான்மையினரும் ஒன்று சேரக்கூடிய போக்கு உருவானது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள இனவெறியரும், அரசும் அவர்கள்மீது கடுமையான ஆத்திரத்துடன் தாக்குதல் தொடங்க திட்டமிட்டனர்.

Advertisement

இதன் விளைவே புத்தளத்தில் நடந்த படுகொலை நிகழ்ச்சிகளாகும்.

புத்தளத்தில் தமிழ் மொழி உணர்வும், மதச் சிறுபான்மையினர் நசுக்கப்படுவதால் விளைந்த எதிர்ப்பு உணர்வும் அப்பகுதி மக்களின் இதயத்தில் குமுறலை ஏற்படுத்தியது.

இதையொட்டி, மசூதியில் பிரார்த்தனை நடத்திக்கொண்டிருக்கும்போது போலீஸôர் மசூதியைத் தாக்க ஆரம்பித்தனர்.

மசூதிக்குள் ராணுவம் நுழைந்தது. எதிர்ப்படும் இஸ்லாமிய மக்கள் தாக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. ஏராளமான பேர் உயிர் இழந்தனர். புத்தளத்தில் நடந்த படுகொலை பற்றிய செய்தி உடனடியாக நாடு முழுவதும் பரவியது. இஸ்லாமிய மக்களின் உணர்வுகள் பீறிட்டு வெளிக் கிளம்பின.

அதேசமயம் நாடு முழுவதும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது பயங்கரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 1915 இனக் கலவரத்தில் தாக்கப்பட்டதைப்போல, மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களுடைய ரத்தம் ஆறாக ஓடியது.

1977-ஆம் ஆண்டு பிறந்தது. அவ்வாண்டுத் தேர்தலில் அமிர்தலிங்கத்தின் தலைமையில் தமிழ் ஈழம் என்ற கோஷம் முன் வைக்கப்பட்டுத் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் பங்கு பெற்றது.

தமிழ் மக்கள் பிரிவினை ரீதியான தேசியப் போராட்டத்தை நடத்த மக்களிடம் அங்கீகாரம் பெறக்கூடிய வகையில் ஒரு பரிசோதனைக் களமாகத் தேர்தலில் போட்டியிட்டது தமிழர் விடுதலைக் கூட்டணி.

ஏற்கெனவே மரபு வழியாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒரு சுதந்திரமான மதச் சார்பற்ற "தமிழ் ஈழ சோஷலிஸ நாடாக' உருவாக்கவும், மாற்றி அமைக்கவும் கூடிய ஒரு அறிக்கையை அந்தப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்தது.

மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து, தனி ஈழம் என்ற தங்களது தாகத்தை அங்கீகரித்து தமிழர் கூட்டணியைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பினர்.

1970-ஆம் ஆண்டு தேர்தலில் பிரிவினைக் கோஷத்தை முன் வைத்துத் தோற்றுப்போன அதே இடங்களில் 1977-ஆம் ஆண்டு அதே கோஷம் தமிழ் மக்களால் பெருவாரியாக அங்கீகரிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட 18 தொகுதிகளையும் கைப்பற்றி பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.

இந்த நிலையில், இலங்கை ஆட்சியை ஜெயவர்த்தனா கைப்பற்றினார். தமிழர்களின் எழுச்சியால் வெகுண்ட சிங்கள இன வெறியாளர்கள் அந்த ஆண்டின் ஆவணியில் மிகப்பெரிய இனப் படுகொலைக்கு வித்திட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments