கட்டுரைகள்

மாற்றத்தின் கதை கேளீர்!

தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களின் பெயர்களை மாற்றவும், புதிய அண்ணா பல்கலைக்கழகங்களை உருவாக்கவும் வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, கோவை, திருந

ப. இசக்கி

தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களின் பெயர்களை மாற்றவும், புதிய அண்ணா பல்கலைக்கழகங்களை உருவாக்கவும் வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள், இனிமேல் "அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்' என்பதுடன் அந்தந்த ஊரின் பெயரையும் சேர்த்து அவற்றின் பெயர் அமையும்.

இவை தவிர, புகழ் பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகமானது, இனிமேல் ஒருமைப் பல்கலைக்கழகமாக இயங்கும். அத்துடன், இதுவரையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளாக இருந்து வந்த பொறியியல் கல்லூரிகளுக்குத் தனியாக ஒரு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சென்னையிலேயே உருவாக்கப்பட உள்ளது. அத்துடன் மதுரையில் ஒரு புதிய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் உருவாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் என்றாலே எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது சென்னை அண்ணா பல்கலைக்கழகமாகத்தான் இருக்கும். சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த உயர்கல்வி நிறுவனம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் சர்வதேசப் புகழ் பெற்றுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு வரையில் ஒருமைப் பல்கலைக்கழகமாக இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகத்துடன் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்பட்டன. இணைப்புக்குப் பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பணிச் சுமைகள் அதிகரித்தன. அதனால் கற்பித்தல் பணியும், ஆராய்ச்சிப் பணியும் பழைய வீச்சில் நடைபெறவில்லை. காரணம், 400-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளை மேற்பார்வை செய்தல், மாணவர் சேர்க்கை, தேர்வுகளை நடத்துதல் போன்ற நிர்வாகச் சுமைகள்தான்.

இந்த நிர்வாகப் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டுதான் கடந்த 2007-ல் திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 3 புதிய அண்ணா பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகங்களுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. இதனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிச்சுமை பிரித்து அளிக்கப்பட்டதே தவிர அறவே நீக்கப்படவில்லை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 136 பொறியியல் கல்லூரிகள் இருந்து வருகின்றன. எனவே, நிர்வாகப் பணி என்பது தொடரவே செய்தது. ஆதலால், அண்ணா பல்கலைக்கழகம் தனது பழைய வேகத்தில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலையே இருந்தது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிர்வாகச் சுமை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், 21-வது நூற்றாண்டின் இந்த முதல் பத்து ஆண்டுகளில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், காப்புரிமை மற்றும் வெளியீடுகளில் அண்ணா பல்கலைக்கழகம் மேலும் பல புதிய மைல் கற்களை எட்டிப் பிடித்திருக்கும். அந்த இழப்புக்கு ஈடாக மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் சற்று உயர்ந்தது என்பதுதான் கிடைத்த பலன். இப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்துள்ள "விடுதலை' மூலம் மீண்டும் அதன் செயல் வேகம் அதிகரிக்கும் என நம்பலாம். அதனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் குழாமில் ஒரு பகுதியினர் மத்தியில், மகிழ்ச்சி தாண்டவம் ஆடினாலும், சிலருக்கு வருத்தமும் இருக்கத்தான் செய்யும்.

பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புக் கல்லூரிகள் இருந்தால் அதன் மூலம் உருவாகும் சில பதவிகள், ஆய்வுக் குழுக்கள், விசாரணைக் குழுக்கள் போன்றவற்றால் கிடைக்கும் 'நன்மை'கள் இனிமேல் கிடைக்காது என்பது வருத்தத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

சரி, அது இருக்கட்டும். புகழ்பெற்ற ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் பெயரை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியம்தானா? இப்படிப் பெயரை அடிக்கடி மாற்றுவதால் சர்வதேச அளவில் அண்ணா பல்கலைக்கழகம் குறித்து குழப்பம் ஏற்படாதா?

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற இருப்பதாலும், இணைப்புக் கல்லூரிகளுக்கு புதிய அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டியது இருப்பதாலும் அவை இரண்டையும் வேறுபடுத்த மற்றவற்றை "அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள்' என அழைக்க வேண்டியது அவசியம் என அரசு கூறுமானால், "அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-சென்னை'யை சென்னைக்கு வெளியே, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலேயே அமைக்கலாமே. அதன் கீழ் இணைய உள்ள பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை சென்னைக்கு வெளியில்தானே உள்ளன.

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் இந்தப் "பிரித்தல்', "உருவாக்குதல்' வேலை தேவைதானா? என கேட்கத் தோன்றுகிறதா?

இந்தப் "பிரித்தல்', "உருவாக்குதல்' வேலைகளுக்குப் பின்னால், கல்வி மேம்பாடு, மாணவர் நலன் என வெளியே கூறிக் கொண்டாலும், அவற்றையெல்லாம் தாண்டி வேறு சில காரணங்கள் இருப்பதாகக் கல்வியாளர்கள் மத்தியில் தகவல் கசிகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆண்டுதோறும் உருவாகும் புதிய பொறியியல் கல்லூரிகள், பழைய கல்லூரிகளில் புதிய பாடத் திட்டம் தொடக்கம் போன்றவற்றின் "ஆதாயம்' வரும் பாதையானது மடைமாறிச் செல்வதைத் தடுக்கவே இந்த அதிரடித் திட்டங்கள் என்பதுதான் உயர்கல்வி வட்டாரத்தில் கூறப்படும் செய்தி. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT