சுயநல இடைத்தேர்தல்கள்!
ஆந்திர மாநிலத்தில் கடப்பா மக்களவைத் தொகுதி மற்றும் புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு மே 8-ம் தேதி நடைபெறுகிறது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் எம்.பி.யு
ஆந்திர மாநிலத்தில் கடப்பா மக்களவைத் தொகுதி மற்றும் புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு மே 8-ம் தேதி நடைபெறுகிறது.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டியும், எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமியும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ததற்காக, இந்த இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு, இம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
புலிவெந்துலாவில் வெற்றி பெற்ற காங்கிரûஸச் சேர்ந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பின்னர், புலிவெந்துலாவில் விஜயலட்சுமி எம்.எல்.ஏ.வாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும், முதல்வர் பதவியை எதிர்பார்த்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து, அதிரடி அரசியலால் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட அவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை அண்மையில் தொடங்கியுள்ளார்.
இப்போது இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து, மீண்டும் போட்டியிட உள்ளனர். இத்தேர்தல்களில் வெற்றி பெற்று தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதே ஜெகன்மோகன் ரெட்டியின் எண்ணம்.
இதற்காக செலவு செய்யப்படுவதோ மக்களின் வரிப்பணமும், ஆயிரக்கணக்கான போலீஸôர் மற்றும் அரசு ஊழியர்களின் உழைப்பும்தான்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே சுயநல (இடைத்)தேர்தல்கள் அரசியல் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக, மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் திமுகவில் இணைந்துவிட்டு தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். மீண்டும் அவர்கள் அதே தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர்.
இதேபோல், கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். பின்னர், அதே தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினரை மிரளவைக்கும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம், இடைத்தேர்தல்கள் மூலம் தங்கள் ஆட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்கிறதா என்பதை ஆளும்கட்சியினர் அறிவர்.
எதிர்க்கட்சியினரும் தங்களுக்கும் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்துக்கொள்ள முயல்வர். இப்போதோ இடைத்தேர்தல்களில் வாக்குக்கு ஆயிரக்கணக்கில் விலை பேசப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் தொகுதியில் வாரியிறைக்கப்பட்டு ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் நடைபெறுகின்றன.
இதுமட்டுமன்றி, தங்களது சுயநலத்துக்காக இடைத்தேர்தல்களை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகளும் உள்ளன. இதற்காக அங்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் அங்கு போட்டியிட்டவரே, மீண்டும் போட்டியிடும் நிலை உருவாகிறது.
இவர்களின் சுயநலத்துக்காக மக்களின் வரிப்பணமும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பணிகளும், அமைச்சர்களின் பொன்னான நேரங்களும் வீணாகலாமா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு நடத்தப்படும் இடைத்தேர்தல்களில், அங்கு ராஜிநாமா செய்தவரே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்ய வேண்டும். அவ்வாறு போட்டியிடுவதற்கு அவர் விரும்பினால், தேர்தல் நடத்துவதற்காகத் தேர்தல் ஆணையம் செலவு செய்யும் பணம், அரசுத் துறைகளில் செலவிடும் பணம் ஆகியவற்றை அந்த வேட்பாளர் அல்லது அவர்சார்ந்த அரசியல் கட்சியே ஏற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதிக்கலாம்.
இவ்வாறு செய்யப்படுவதன் மூலம், சுயநலத்துக்காக ஏற்படுத்தப்படும் இடைத்தேர்தல்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம். இடைத்தேர்தலுக்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பதுடன், தேர்தல் ஆணையம் செலவழிக்கும் சில கோடியையும் ஏற்றுக் கொள்வோம் என அரசியல் கட்சிகளும் முன்வரலாம்.
ஆனால், இப்பணம் வேட்பாளரின் செலவுக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்தால், அரசியல் கட்சிகளும் யோசிப்பார்கள் அல்லவா?