கட்டுரைகள்

"ஹே ராம்'

ஜனவரி 30-ம் நாள் காந்தி மகான் ஒரு மதி கெட்டவனின் குண்டுக்கு இரையான தருணத்தில் கூறிய வார்த்தை "ஹே ராம்'. வெறும் உடம்பு வலியால் எழுந்த வார்த்தைகள் அன்று இது. இந்தியாவின் ஒற்றுமை, மதச்சார்பின்மை அழிகிறதே

ஆர். நட​ராஜ்

ஜனவரி 30-ம் நாள் காந்தி மகான் ஒரு மதி கெட்டவனின் குண்டுக்கு இரையான தருணத்தில் கூறிய வார்த்தை "ஹே ராம்'. வெறும் உடம்பு வலியால் எழுந்த வார்த்தைகள் அன்று இது.

இந்தியாவின் ஒற்றுமை, மதச்சார்பின்மை அழிகிறதே என்ற வருத்தம். மதவெறி, இனவெறி,வன்முறை தலைதூக்குகிறதே என்ற ஆதங்கம் ஆகியவற்றின் எதிரொலி, ஆழ்ந்த உணர்ச்சிகளின் சாரமாக "ஹே ராம்' என்ற சொல் அந்த மகானின் உள்ளத்திலிருந்து ஒலிப்பிழம்பாக வெளிவந்தது.

புத்தாயிரத்தின் முதல் பத்து ஆண்டுகள் கழிந்து 11-ம் ஆண்டின் முதல் மாதம் கடந்துவிட்டது. ஜனவரி மாதம் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்ட புனிதமான மாதம் . புதிது என்றாலே எல்லோருக்கும் மகிழ்ச்சி. புதிய ஆண்டு புதிய நெற்கதிர், இனிக்கும் கரும்பு, சந்தோஷம் பொங்கிவரும் பொங்கல் பண்டிகை, அலங்காரக்

கால்நடைகளின் ஊர்வலம், குதூகல நகர்வலம் என்று அடுக்கடுக்கான திகட்டும் இனிப்புகளின் மத்தியில் தேசியத் தலைவர்களான விவேகானந்தர், நேதாஜி போன்றவர்களின் ஜெயந்தியையும், தேசத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த காந்தியடிகளையும் நினைவு கூர்ந்தவர்கள் சிலராவது இருப்பார்கள்.

தனித்துச் செல், தனித்துவத்தோடு செல், ""ஏக்த சலோ ரே'' என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதையைப் பிரபலமாக்கி அடிமையென்று துவண்டிருந்த இந்திய சமுதாயத்தைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரன் நேதாஜி, சுதந்திர இந்தியா கொடி ஏற்றிச் சுதந்திரம் பெற்றே தீருவோம் என்ற நம்பிக்கை விதைவிதைத்தார்.

விவேகானந்தர், நேதாஜி இருவரும் வங்காளம் பெற்ற மாமனிதர்கள். முரண்பட்ட தோற்றம்தான். ஒருவர் துறவி, மற்றவர் சீருடை அணிந்த வீரத்தளபதி. ஒருவர் ஆன்மிகவாதி, மற்றொருவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போரிட ஐ.என்.ஏ. என்ற இளைஞர்கள் படையை உருவாக்கியவர்.

சுவாமி விவேகானந்தரால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர் நேதாஜி. சுவாமி விவேகானந்தர் பேசியவற்றையும், எழுதியவற்றையும் ஆழ்ந்து படித்ததால் தனது தேசபக்தி ஆயிரம் மடங்கு வளர்ந்துவிட்டது என்று மனமாரப் பாராட்டியவர் தேசப்பிதா காந்தி.

காலங்காலமாக அடிமைப்பட்டதன் காரணமாக வலுவிழந்து தூங்கிக்கிடந்த இந்தியரைத் தமது உபதேசங்களால் விழித்துக்கொள், விழிப்புணர்வுகொள் என்று தட்டி எழுப்பியவர் விவேகானந்தர். எல்லையில்லா தைரியத்தைக் கொண்டவர் விவேகானந்தர் என்கிறார் மகாகவி பாரதி.

நேதாஜி சிறப்பாகப் பட்டப்படிப்பை முடித்து உயரிய அரசுப்பணியான ஐ.சி.எஸ்-ல் தேர்ச்சி பெற்றார். அரசாங்கத்தில் மிகப்பெரிய பதவியை அடைந்திருக்கலாம்.

ஆயினும் காந்தி, விவேகானந்தர் ஆகியோரது உபதேசங்களால் உந்தப்பட்டு பதவியைத் துறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது இளமையை நாட்டுக்காக அர்ப்பணித்தார். இதுதான் உண்மையான தியாகம்.

எவனொருவன் சமுதாயத்துக்காகவும், மக்கள் நலனுக்காகவும் உழைக்கின்றானோ அவன்தான் உண்மையாக உயர்ந்தவன் என்றார் சுவாமி விவேகானந்தர். அந்தவகையில் பண்பின் சிகரம் நேதாஜி. இந்திய தேசியப் படையை மோகன் சிங் என்பவரோடு இணைந்து உருவாக்கி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட முடியும் என்பதை நிரூபித்தார்.

சுதந்திர இந்தியாவைக் காண கனவு கண்ட நேதாஜி, சுதந்திர இந்தியாவைக் காண்பதற்குமுன் மறைந்தார். அவரது மறைவும் ஒளி பிறந்து மின்னலாக மறைந்ததுபோல் பிரமையாக நிற்கிறது.

நல்லுள்ளங்களின் நெஞ்சில் இன்றும் அவர் நிறைந்திருக்கிறார். அவரது வீர வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இலவசங்களை நம்பி சோம்பி இல்லாமல் உழைத்து வீறுநடைபோட்டு சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய வேண்டும்.

உண்மை, வாய்மை, நேர்மை எல்லாவற்றின் உறைவிடமாகிய காந்தியடிகளின் நெறிகள்தான் நமது தேசத்தின் பலமான அடித்தளம். அதற்கு ஓர் உதாரணம் -நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நவம்பர் மாதம் 1947-ம் ஆண்டு காந்தியடிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதுவும் ஒரு சத்தியத்துக்கான போராட்டம். இந்தியா பாகிஸ்தான் பாகப்பிரிவினை உடன்பாட்டின்படி இந்தியா பாகிஸ்தானுக்குரூ. 52 கோடி மதிப்பிட முடியாத சொத்துகளுக்கான ஓவல்டி எனப்படும் ஈட்டுத்தொகை சொத்துரிமை சட்டப்படி கொடுக்க வேண்டும். அதை இந்தியா உடனடியாகக்கொடுக்க வேண்டும். தாமதிக்கக்கூடாது என்பதற்காக அண்ணல் விரதம் மேற்கொண்டார்.

இந்தியா தாமதித்ததற்குக் காரணம் பாகிஸ்தான் இந்தியா மீது காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் தொடுத்தது. அத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசு ஓவல்டி தொகையைக் கொடுக்கக்கூடாது என்ற கருத்து வலுவடைந்தது. அரசுக்குத் தர்மசங்கடமான தருணம். உடல்நலம் குறைந்த நிலையிலும் அண்ணல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். உண்ணாவிரதம் தொடர்ந்தார். வேறுவழியின்றி அரசு கஜானாவிலிருந்து ரூ.52 கோடி எடுக்கப்பட்டு தனிவிமானத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அனுப்பப்பட்ட பிறகே காந்திஜி தனது விரதத்தை முடித்துக் கொண்டார்.

 இத்தகைய உயரிய கொள்கைகளின் அடிப்படையில் நமது தேசம் உருவானது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். ஆனால், இன்று வெளிப்படையான நிர்வாகத்தைக் கணிக்கும் சர்வதேச இயக்கத்தின் ஆண்டு அறிக்கைப்படி அதிக ஊழல் நிறைந்த முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அணிசேரா நாடுகள் அமைப்பில் இந்தியா யூகோஸ்லோவியாவோடு தலைமை வகித்த நாடு எகிப்து.பண்டித நேருவோடு தோள்கொடுத்த தலைவர் ஆப்டல் நாஸர் உருவாக்கிய நாடு இன்று கலவரத்தின் எல்லையில் கொதி நிலையில் தத்தளிக்கிறது. கெய்ரோ நகரின் பிரபலமான தாஉறிர் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளதை தொலைக்காட்சி மூலம் காண முடிகிறது.

சமுதாயச் சீர்குலைவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிர்வாகச் சீர்கேடு, ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல காரணங்கள். அதில் பிரதான காரணம் இளைய ஜனத்தொகையின் வீக்கம் என்று கூறப்படுகிறது. நிபுணர்களின் கருத்துப்படி ஏழ்மை, கல்லாமையால் பாதிக்கப்படும் இளைஞர்களால் ஆபத்து வராது. கல்வி அறிவுடைய வலிமையான திடகாத்திரமான இளைஞர்களது எதிர்பார்ப்புகள் நிராசையானால் விளைவுகள் விபரீதமாகும். இதைத்தான் எகிப்து, டுனீசியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காட்டுகிறது.

இப்போது நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. மிக மகத்தான பணி; அதற்கு நம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு அவசியம். இனம், மொழி, மதம், ஜாதி அடைப்படையில் ஜனத்தொகை எவ்வாறு பெருக்கெடுக்கும், அதன் ஆதாயம் என்ன என்று கணக்கிடாமல் ஒட்டுமொத்த இளைய ஜனத்தொகையினரை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 வேலை செய்யக்கூடிய வயது 15-லிருந்து 60 வரை என்று கணக்கு வைத்தால் இந்திய ஜனத்தொகையில் இது 55.6 சதவீதம். வேலை செய்யக்கூடிய இந்த ஜனத்தொகையினர்தான் நாட்டின் சொத்து. அவர்களது உண்மையான உழைப்பு நாட்டின் வளர்ச்சியைப் பெருக்கும். அவர்களது உழைப்பில் தொய்வு ஏற்படக்கூடாது. நாட்டின் வளர்ச்சியின் பயன்பாடு அவர்களுக்குத் திருப்தியான வகையில் சென்றடைய வேண்டும்.

இந்தியாவை நோக்கிப் பல நாடுகளின் கவனம் திரும்பியிருப்பதன் காரணம் நமது இளமையான சமுதாயம். நமது நாட்டின் இளைஞர்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் சீனாவைவிட அதிகமாக இருக்கும். வயதடைந்து கொண்டிருக்கும் உலகில் வயது குறைந்தவர்கள் கொண்ட வளமான நாடு என்ற வகையில் 15 வயதிலிருந்து 24 வயதுக்கு உள்பட்டவர்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு அடிப்படை தரமான கல்வி, சாலை வசதி, மின்சாரம் போன்ற கட்டமைப்புகள்.தரமான கல்வி இளைஞர்களைச் சென்று அடைவதில்லை, வர்த்தக மொழியான ஆங்கில மொழி புறக்கணிப்பு போன்ற குறைகள் இருக்கின்றன. ஜனத்தொகையில் 20 சதவிகிதம் கொண்ட இந்த இளைஞர்களைத் தயார் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்த அவகாசம் அதிகம் இல்லை. நிபுணர்களின் கணிப்புப்படி இந்த வாய்ப்புகளின் இடைவெளி ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள்தான் உள்ளது. இதைத் தவறவிட்டால் சரிவின் விளைவுகள் நம்மை எதிர்நோக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

 அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டின் பொறுப்புள்ள பெற்றோர் தமது குழந்தைகளைக் கைப்பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யும் கடமை உணர்வு நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் என்று தனது நாட்டுக்கு அளித்த உரையில் புகழ்ந்துள்ளார்.

கடமை உணர்வுள்ள பெற்றோர்கள் இங்கும் இருக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் பொறுப்புள்ள குழந்தைகள், குடித்துவிட்டு தள்ளாடும் தந்தையை கைத்தாங்கலாக வீட்டுக்குக் கூட்டிவரும் காட்சியைத் தினமும்பார்க்கலாம். பரிதாபத்துக்குரிய அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? சிந்திக்க வேண்டும். மகாத்மாகாந்தி அழகாகச் சொன்னார் ஏழைகளின் பெயரில் ஏழைகளுக்காகப் பேசுபவர்களுக்கு ஏழைகளைப் பற்றியும் தெரியாது; அவர்களது வேதனையும் புரியாது. ஏழைகளும் அவர்களை அறியாது ஏழ்மையின் துணையோடு அதில் உழன்றிருப்பர். எவ்வளவு நிதர்சன உண்மை?

நாட்டுக்காக உயிரையும் வாழ்நாளையும் அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் நாள் ஜனவரி 30 தியாகிகள் தினம். காலை பதினோரு மணி அளவில் "சைரன்' ஒலித்ததும் எல்லோரும் அமைதி காத்து அஞ்சலி செலுத்த வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பல நகரங்களில் இந்த 11 மணி "சைரன்' ஒலி எழுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. அன்று மட்டும் இல்லாது என்றும் தியாகிகளுக்கு மனதார வீரஅஞ்சலி செலுத்துவதற்கு ஒரே வழி ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க உண்மையான உழைப்பும் நேர்மையான பணியுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT