கட்டுரைகள்

தோற்கப்போவது எந்தக் கூட்டணி?

மேலும் ஒரு தேர்தல் திருவிழாவுக்குத்(?) தயாராகி வருகிறது தமிழகம். ஆட்சியின் சாதனைகளால் தேர்தலைத் தெம்புடன் சந்திப்பதாக ஆளுங்கட்சியினரும், ஆட்சியின் சோதனைகளால் மக்கள் வேதனையில் இருப்பதால், வெற்றி எங்களு

எஸ். ராஜாராம்

மேலும் ஒரு தேர்தல் திருவிழாவுக்குத்(?) தயாராகி வருகிறது தமிழகம். ஆட்சியின் சாதனைகளால் தேர்தலைத் தெம்புடன் சந்திப்பதாக ஆளுங்கட்சியினரும், ஆட்சியின் சோதனைகளால் மக்கள் வேதனையில் இருப்பதால், வெற்றி எங்களுக்கே என எதிர்க்கட்சியினரும் மேடைகளில் இப்போதே முழங்கத் தொடங்கிவிட்டனர்.

 கூட்டணி பற்றி முடிவு செய்யக் கட்சித் தலைவருக்கு முறைப்படி அதிகாரம் கொடுத்து, நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி முதல், ஆளுங்கட்சிவரை தீர்மானம் நிறைவேற்றியுள்ளன (உள்கட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார்களாம்). கூட்டணியைத் தலைவர் அல்லாமல் தொண்டர்களா முடிவு செய்வார்கள் எனக் குறுக்குக் கேள்வி கேட்காமல் கவனித்துக் கொண்டிருப்பது ஒன்றுதான் நடுநிலை வாக்காளர்களின் பணி(!).

 திமுக அணியில் பாமக சேருமா? அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற வினாக்களுக்கெல்லாம் படிப்படியாக விடை கிடைக்கத் தொடங்கிவிட்டது. காங்கிரஸýடன் கூட்டணி இல்லை என ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். மக்களுடன்தான் கூட்டணி என்று கட்சி ஆரம்பித்ததிலிருந்தே கூறிவந்த விஜயகாந்தும், இந்த முறை கூட்டணி அமைப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். (8 முதல் 10 சதவீதம் வரை தேமுதிகவுக்குக் கிடைக்கும் வாக்குகளில் பெரும்பாலானவை, அவர் தைரியமாகத் தனித்து நிற்பதைப் பார்த்துத்தான் என்பதை கேப்டனுக்கு யாராவது எடுத்துச்சொன்னால் நன்றாக இருக்கும்.)

 கொள்கைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ""கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; வெற்றிக்காக அயராது பாடுபடுங்கள்'' என நம் கட்சித் தலைவர்கள் தொண்டர்களைப் பார்த்து எப்படித்தான் வசனம் பேசுகிறார்களோ என்று அநியாயத்துக்கு ஆச்சரியப்படாதீர்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.

 கடந்த தேர்தல் முடிந்ததிலிருந்து எலியும் பூனையுமாக அறிக்கைப் போர் நடத்தியவர்கள், பேட்டிகளில் சவால் சண்டை போட்டவர்கள் எல்லாம், தேர்தல் நெருங்க நெருங்க அடக்கி வாசிக்கிறார்கள் என்றால், ஒன்று அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் அல்லது எதற்கும் இருக்கட்டுமே என்ற அரசியல் தந்திரமாக இருக்கும்.

 இந்தப் பொதுத்தேர்தலில் இடம்பெறப் போவது பென்னாகரம் ஃபார்முலாவா, திருமங்கலம் ஃபார்முலாவா என்று யோசித்து அதற்கேற்பத் தந்திரத்துடன் தயாராவதுதான் வாக்காளர்களின் கடமை.

 தேர்தல்தான் சிறந்த ஜனநாயக முறை என்கிறோம். ஆனால், அதிலும் ஒரு ஜனநாயக விரோதச் செயல் உண்டு என்றால் அது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாகத்தான் இருக்கும். 4 கட்சிகள் கூட்டுச் சேர்ந்து 2 கட்சிகள் கொண்ட ஓர் அணியைத் தோற்கடிப்பதா, ஜனநாயகம்?

 ஒரு லட்சம் வாக்குகள் பெற்ற வேட்பாளரைவிட ஒரு வாக்கு கூடுதல் பெற்றவர் வெற்றி பெறுகிறார் என்றால், தேர்தல் என்ன ஓட்டப்பந்தயமா? அப்படி தோற்கும் வேட்பாளருக்கு வாக்களித்த ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குகளுக்கு என்னதான் மதிப்பு?

 முன்பெல்லாம் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள் எனப் பிரசாரம் செய்தோம். இப்போது அனைவரும் பணம் பெற்றுக் கொள்ளாமல் வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

 இதற்கு ஒருபடி மேலே சென்று, பணத்தை அவர்களிடம் வாங்கிக் கொண்டு வாக்கை எங்களுக்கு அளியுங்கள் எனச் சில "ஏழைக் கட்சிகள்' விவரம் தெரியாமல் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றன. நம்பிக்கை மோசம் செய்வது எல்லாம் அரசியல்வாதிகளின் வேலை. வாக்காளப் பெருமக்களிடம் அது நடக்காது. இந்தக் கையில காசு, அந்தக் கையில ஓட்டு என்று "வாங்கிய' விசுவாசம் மாறாமல் ஓட்டைக் "கொடுத்து' விடுகிறார்கள்.

 முன்பெல்லாம் தேர்தல் வெற்றி என்பது நடுநிலை வாக்காளர்களின் கையில் இருந்தது. ஆனால், இப்போது, கட்சி சார்ந்த வாக்காளர்களால்தான் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

 ஏதாவது ஒரு கட்சி சார்பாகச் செயல்படும் வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்துவிடுகிறார்கள். நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலானோர் வாக்களிப்பதே இல்லை. அந்த அளவுக்கு அவர்களை விரக்திக்குக் கொண்டு சென்றுவிட்டன அரசியல் கட்சிகள்.

 இந்த வேளையில்தான் கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு இணங்க விகிதாசார அடிப்படையில் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.

 மொத்த வாக்குகளில் இத்தனை சதவீதத்துக்கு இத்தனை இடம் எனப் பிரித்துக் கொடுத்தால்தான், வாக்களித்த அனைவரின் உரிமையும் காக்கப்படுவதாக அர்த்தம். அப்போதுதான் ஏதாவது புதிது புதிதாக ஃபார்முலாவைக் கண்டுபிடித்து, "சைக்கிள் கேப்பிலாவது' ஜெயித்துவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் எதையும் செய்யும் முயற்சியைக் கைவிடக் கூடும்.

 இந்த முறையால் சுயேச்சைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதமும் இருக்கிறது. ஆனால், அதற்கும் யோசித்தால் நியாயமான ஒரு வழியைக் கண்டறியலாம்.

 அந்த முறை எப்போது அமலுக்கு வருமோ? இந்த முறையும் ஏதாவது ஒரு கூட்டணி ஜெயிக்கத்தான் போகிறது. தோற்கப்போவது என்னவோ மக்கள் கூட்டணிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT