வெற்றிக்கு விலை
உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெற்றவர்கள் இன்று (அக்.25) பதவியேற்கவுள்ளனர். மாநகராட்சி, நகராட்சிகளில் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழுக்களில் உறுப்பினர்கள், ஊராட்சி மன்றங்களில்
உள்ளாட்சித் தேர்தலில், வெற்றி பெற்றவர்கள் இன்று (அக்.25) பதவியேற்கவுள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சிகளில் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழுக்களில் உறுப்பினர்கள், ஊராட்சி மன்றங்களில் தலைவர், உறுப்பினர்கள் என மொத்தம் 1,32,402 பதவியிடங்களில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் மக்கள் பணியாற்றுவதற்கான பணியையும் விரைவில் தொடங்கவுள்ளனர். இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் அக். 29-ம் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தியவர்களே இத்தேர்தலை நடத்தவுள்ளனர்.
மாநகராட்சிகளில் துணை மேயர், நகராட்சிகளில் துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழுக்களில் தலைவர், துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவர்கள் என 14,019 பதவிகளுக்கு இத்தேர்தல் நடக்கிறது.
வாக்காளர்களைக் கவர பணம், பரிசு உள்ளிட்டவற்றை வழங்கி, பகீரதப் பிரயத்தனம் செய்து பல்லாயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை செலவழித்து வெற்றிபெற்ற வேட்பாளர்களே இத்தேர்தலில் கதாநாயகர்கள்(!) இவர்களுக்கு இப்போது மவுசு கிடைத்துவிட்டது.
பதவியேற்பதற்கு முன்னரே இவர்களில் பலர் தங்களது முதல் பணியாக, ஆதாயம் கிடைக்கும் வகையில் ஏதாவது கிடைக்குமா என்பதையும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
ஏதாவது ஓர் அரசியல் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துவிட்ட உள்ளாட்சி அமைப்புகளில்கூட, தங்களது சொந்தக் கட்சிக்கு வாக்களிக்க ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் உள்ளாட்சிப் பிரதிநிதியும் உண்டு. காரணம், தேர்தலில் அவர்கள் செலவழித்த தொகைதான்.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளாட்சிகளில், குதிரை பேரமும் நடக்கும் வாய்ப்பு உண்டு. துணை மேயர், நகர்மன்றங்களில் துணைத் தலைவர், ஒன்றியக் குழுக்களில் தலைவராகுதல் போன்றவற்றுக்கு கூடுதலாகவே போட்டி.
இப்போது சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களுக்கு சற்று அதிகமாகவே மவுசு உள்ளது. "இவ்வளவு செலவழித்துவிட்டோம், பார்த்துச் செய்யுங்கள்' என்று வெளிப்படையாகவே கேட்கும் நிலையும் உருவாகிவிட்டது. எந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் இல்லாத ஒரு தகுதி, ஊராட்சி மன்றத் தலைவருக்கு உண்டு. அதாவது, காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம்தான். இதற்கு துணைத் தலைவரும் ஒப்பம் இட வேண்டும்.
"தங்களுக்குச் சாதகமான துணைத் தலைவர் வந்துவிட்டால் 5 ஆண்டுகளுக்குப் பிரச்னை இல்லை' என்பதை மனதில் கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர்களும் தங்களுக்கு ஆதரவானவர்களைப் பதவியில் அமர்த்திவிட களத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரங்களில் வாக்காளர்களுக்குப் பணம், பரிசு வழங்கிய வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்களின் காட்டில் இப்போது பணம், பரிசு மழை பொழியும் வேளை வந்துவிட்டது எனலாம்.