கட்டுரைகள்

அறிவியல் இன்றி அமையாது உலகு

அண்மைக்காலமாக "நரம்புச் சில்லுகள் தொழில்நுட்பம்' (நியுரோ-சிப் டெக்னாலஜி) பற்றிய ஆராய்ச்சி பிரபலமாகி வருகிறது. உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற இயந்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய உறவு இது.

நெல்லை சு. முத்து

அண்மைக்காலமாக "நரம்புச் சில்லுகள் தொழில்நுட்பம்' (நியுரோ-சிப் டெக்னாலஜி) பற்றிய ஆராய்ச்சி பிரபலமாகி வருகிறது. உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற இயந்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய உறவு இது.

அதி நவீன உலகில் புதிய தொழில்நுட்பங்கள் மனித மூளையையே இயல் மாற்றி வருகிறது.

ஒருவர் கை இழந்தவர் என்றால், அவருக்கு வெறுமனே மரக் கை பொருத்தினால் குறை வெளியே தெரியாது. வேண்டுமானால், இலகுவான வலு மிகுந்த பாலி-யூரித்தேன் கைகளும் பொருத்தலாம். அது இயங்காத "மெக்கானிக்கல்' (இயந்திரவியல்) கரம். அதில் மரையாணி பூட்டி, கையை நீட்டி மடக்கச் செய்யலாம்.

மின்னணு சுவிட்ச் பொருத்தி இயக்கவும் வைக்கலாம். இது "மெக்கட்ரானிக்ஸ்' என்ற "இயந்திரநுட்பவியல்'. சுவிட்சை மறு கையினால் அழுத்தி இயக்காமல், பொய்க் கையின் அருகிலுள்ள தசையைத் துடிக்கச் செய்தால் போதும்.

இந்த "உயிரி மெக்கட்ரானிக்ஸ்' முறையில் போலிக் கை அசையும். தசை அசைவால் அன்றி, மனதில் நினைக்கும்போதே மின்னணு சுவிட்ச் அந்தப் போலிக் கையை அசைத்தால், அதுதானே நிஜமான கை. இதற்கு "சைபர்னிக்ஸ்' (உயிரூட்ட இயந்திரநுட்பம்) என்று பெயர். உள்ளபடியே, பக்கவாதத்தில் முடங்கியவர்களுக்கும் இத்தகைய தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்.

அதுசரி, மரக் கை எதற்கு? செயற்கையான தசைக் கை, "ஸ்டெம் செல்' முறையில் தயாரித்து, உடலோடு ஒட்ட வைத்தால் போயிற்று. மனிதக் கை தயார். என்ன, அறிவியல் புனைகதை மாதிரி இருக்கிறதா? நாளைய அறிவியல் பரிசோதனைக் கூடத்தில், கார், தொலைக்காட்சிப் பெட்டி போல, செயற்கை மனிதனையும் ஒவ்வொரு உறுப்பாகத் தொகுத்து உருவாக்கலாம்.

மனித உறுப்புகள் தயாரிக்கும் முயற்சிகள்வேறு ஆரம்பமாகி விட்டன. ஜப்பானில் சில மருத்துவ மேதாவிகள் மனிதத் தோல் செல்களில் இருந்து கல்லீரல் திசுக்களைக் குடுவைக்குள் செலுத்தித் தயாரித்துவிட்டார்கள். அடுத்தக் கட்டமாக, சிறுநீரகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

மூளை ஒன்றுதான் பாக்கி. அதுவும் ஏற்கெனவே சொன்ன வகையில், உயிரியல் ஆணைப்படி உருவாக்கிய மினி மூளை ஆராய்ச்சிக் கடையில் கிடைக்கும். மூளையே இல்லாத சில அப்பாவித் தொண்டர்களுக்கு இதை இலவசமாகவும் வழங்கலாம்.

மந்த புத்தி, திருட்டுப் புத்தி, தீவிரவாத புத்தி, ஊழல் புத்தி, கல்விப் புத்தி, கலவிப் புத்தி என்று எந்த பிராண்ட் மூளை வேண்டுமோ, அது தள்ளுபடி விலைக்கும் கிடைக்கலாம். அதைக் கணினி மென்பொருள் மாதிரி விலைக்கு வாங்கி வைத்து கொண்டால், நமக்குத் தேவைப்படும் எந்தக் குணத்துடனும் மனிதன் தயார்.

மனத்தளர்ச்சி நோய்க்கு "புரோசாக்', கூச்ச சுபாவம் மாற்ற "பாக்சில்', குழந்தைகளின் கவனக்கூர்மையை அதிகப்படுத்த "ரிட்டாலின்' என்னென்னவோ மருந்துகள் இருக்கிறனவே. அவற்றில் தேவையான ஒன்றை தினம் விழுங்கினால் செயற்கை மனிதனால் பிரச்னை இன்றி வாழ முடியுமாம். ஆனாலும், நாம் நல்லவர்களை மட்டுமே உருவாக்குவோம்.

அவர்கள் புனிதர்களை விடவும் அதி சிறந்த மனிதர்களாக மாறிவிட்டால் அதுவும் சங்கடம் தானே என்று அஞ்சுகிறார் ஜார்ஜ் ஆர்வெல் என்கிற மேனாட்டு மருத்துவர். நவீனத் தொழில்நுட்பங்களால் மூளையின் செயல்பாடே மாறிவருவதாகத் தெரிவிக்கிறார் சூசன் கிரீன்ஃபீல்டு எனும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பெண் விஞ்ஞானி.

டிசம்பர் 1, 1783 அன்று உலகின் முதலாவது ஹைடிரஜன் பலூன் பறக்க விட்டதைப் பார்த்து எரிச்சல்பட்டவர்கள் பலர். பேராசிரியர் ஜாக்கியு சார்லஸ் மற்றும் நிக்கோலஸ்-லூயி ராபர்ட் ஆகிய விஞ்ஞானிகளை பிரான்ஸ் நாட்டில் கொன்னஸி கிராம ஜனங்கள் நாய்களை ஏவி விரட்டி அடித்ததுதான் வரலாறு. இன்றைக்கு அதிகுளிர் "கிரையோஜெனிக்' பொறியின் பலன் அறிவோம்.

1831-ஆம் ஆண்டு மைக்கேல் ஃபாரடே, மின்சாரத்தின் ஆதாரமான மின்தூண்டல் தத்துவத்தைப் பரிசோதனையாக செய்து காட்டினார். மின்சார உற்பத்தியின் முதல் விதை இது.

1892-ஆம் ஆண்டு நியுயார்க் - சிகாகோ இடையே முதல் தொலைபேசி இயங்கிற்று. 1915-ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிரஹாம் பெல் முதன்முதலில் கண்டம் விட்டு கண்டம் தொலைபேசியில் பேசினார்.

ஜனவரி 7, 1894 அன்று தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த சினிமா கருவியில் பதிவான முதல் திரைப்படம் வெறும் ஐந்து வினாடிதான் ஓடியது. முதலில் அவரது சக ஊழியர் ஃபிரெட் ஓட், மூக்குப் பொடி போட்டு உதறும் காட்சி.

கெட்ட சகுனமோ என்னவோ, அதனால்தான் இன்றைக்குப் பெரிய திரை, சின்னத்திரை, உள்ளங்கைத் திரை, நகக் கண் திரை என்று படங்கள்தோறும் அருவருப்புகள். ராக்கெட் அறிவியல் புரிகிறது.

மார்க்கோனி குக்லியெல்மோ மார்க்கோனி 1895-ஆம் ஆண்டு வெறும் 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு வானொலி அலைபரப்பினார். 1901-இல் கடல் கடந்து கம்பியில்லாத் தந்தி அனுப்பும் உத்தியை அறிமுகப்படுத்தினார்.

டிசம்பர் 17, 1903 அன்று அமெரிக்காவில் வட கரோலினாவில் ஆர்வில் ரைட் 12 நொடிகளில் 37 மீட்டர் தூரம் பறந்தார். இன்றைய விமானங்கள் பல மணி நேரம் கண்டங்கள் தாவிப் பறக்கின்றன.

புதிய கண்டுபிடிப்புகளும்கூட பக்கவிளைவுகள், பின்விளைவுகளுக்கு உள்பட்டவையே. இன்றையத் தொழில்நுட்ப உலகத்தோடு ஒட்ட இயலாதவர்கள் எவ்வளவுதான் படித்து இருந்தாலும் முட்டாள்கள்தாம்.

செயற்கை மருந்துகள், வேதிம உரங்கள், கழிவுநீர்ச் சுத்திகரிப்புக் கூடங்கள், பல வகை மின் நிலையங்கள், உடனடித் தகவல் தொடர்புகள், பொழுதுபோக்கு தொழில்நுட்பங்கள், புகை உமிழும் நில வாகனங்கள், குளோரோ-ஃபுளூரோ கார்பன்களால் இயங்கும் குளுகுளு வசதிகள் எல்லாம் அறிவியல் தொழில்நுட்பத்தால் எழுந்த அவசரத் தேவைகள்.

இந்த நாட்டில் 30 கோடி பேருக்கு உருவானதை 120 கோடி பேர் பயன்படுத்துவது சாத்தியமா? அதிலும் 30 மொழிகள். குறைந்தது 10 மதங்கள்.

ஒரு எலியின் மூளையை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் படம் பிடித்திருக்கிறார்கள். நரம்புகள் தேங்காய் நாறாய்க் கொத்துகொத்தாகக் குறுக்கு மறுக்காக இழையோடிச் செல்லுகின்றன. அந்தப் பின்னல் சதைக் கொழுப்பு அமைப்பினை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்கள்.

இன்றைக்கு மெல்லிய கம்பி இழையைச் செருகிக் குடைந்து, சாக்கடை அடைப்பினை அகற்றுவது மாதிரி, மூளையில் எந்தப் பகுதியில் தடை என்றாலும் அதனைப் பழுது பார்த்தால் போதும்.

பார்வை நரம்பில் குறுக்கீடா, சரி செய்யலாம் என்று வந்தால் நல்லது தானே. சிலரோ மண்டைக்குள் பூட்டுப்போட்டுப் பழங்கால சிந்தனைகளை அடைகாத்து வருபவர்கள். அவர்களுக்கு புதிய சிந்தனை பிறக்கவும் இது வகை செய்யலாம்.

மின்கம்பியில் மின்னணுக்கள் இயக்கத்தை ஆராய்வது போல, நரம்பு அணுக்கள் தகவல் கடத்தும் திறனை ஆராயும் அதிசயத்தை படமாகப் பதிவு செய்யலாம்.

அப்படி வந்தால், மூளையின் தவறுதலான வேதிமங்கள் குறுக்கீடு இருந்தால் அதையும் அப்புறப்படுத்தலாம். மருத்துவத் துறையும் மேம்படும். ஆட்டிசம் முதல் அல்சீமர் வரை பல உடலியல் புதிர்கள் அவிழ்க்கப்படலாம்.

உயிரினத்தின் தோற்றத்தை அறியவும் இத்தகைய நுட்பம் உதவக் கூடும். இது மட்டும் சாத்தியம் என்றால் மனிதனின் சிந்திக்கும் திறனைச் செயற்கையாகவே தயாரித்துப் புதுச் சிந்தனை மனிதனை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த 100 ஆண்டுகளில் நம் மூளை, நிச்சயம் யாரும் சிந்திக்காத புது வடிவில் இயல்மாறி விடக்கூடும். டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மரபணுக் கிடங்குகளில் தகவல் சேகரிக்கப்பட்டு வருவது தெரியும். டி.என்.ஏ. எனும் டி-ஆக்சி-ரிபோ நியுக்ளிக் அமில மூலக்கூறு சுருள் ஏணி வடிவம். அதனை நீளவாட்டில் "சிப்' மாதிரி வகிர்ந்தால் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம்.

வெப்பத்தினால் இடது பாதி, வலது பாதி இரண்டையும் வேறொரு மூலக்கூறின் பாதிகளுடன் இடம் மாற்றிப் பொருத்தினால் புது மூலக்கூறு தோன்றும். இந்த மூலக்கூறினால் சிக்கலான உயிரியல் கணிப்பொறிகள் உருவாக்க முடியும்.

இன்றைக்குப் புதிதாக ஒரு வேதிம மூலக்கூறு செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு "எக்ஸ்.என்.ஏ.' என்று பெயரிட்டனர் விட்டர் பின்ஹெயரோ, பிலிப் ஹாலிக்கர் ஆகிய ஐரோப்பிய உயிரியல் விஞ்ஞானிகள். இவர்கள் இங்கிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சி அறிஞர்கள்.

வழக்கமான டி.என்.ஏ. மாதிரி அல்லாமல், அதில் சேகரித்து வைக்கும் தகவல்களை அவ்வப்போது புதுப்பிக்கவும் திருத்தி அமைக்கவும் முடியும். பிறகென்ன, மருத்துவத் துறையிலும், தொழிற்சாலைகளிலும் இதன் பயன்பாடு குறித்த அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதற்கு மத்தியில் "மரபணு வேண்டாம்' என்று ஒரு கோஷம். "ஸ்டெம் செல் உத்திகள் ஆண்டவனுக்கே அடுக்காது' என்று இன்னொரு ஆக்ரோஷம். இயற்கைத் தத்துவ விதிப்படி மாறிகொண்டே இருப்பது தானே இயற்கை!

கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT