முகப்பு
கட்டுரைகள்

நீதிக் கதைகளை போதிப்போம்

நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இந்த சுதந்திரத்தை உண்மையாக

Updated On : 16 டிசம்பர், 2014 at 3:56 AM
பகிர்:

நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இந்த சுதந்திரத்தை உண்மையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோமா என்றால், இல்லையென்றுதான் கூற வேண்டும்.

நாட்டின் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஊழல் மலிந்து, மற்ற நாடுகள் நம்மை ஏளனமாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் போபர்ஸ் ஊழல், ராணுவ வீரர்கள் குடியிருப்பு கட்டியது ஊழல் என பாதுகாப்புத் துறையே ஊழல் மயமானது.

Advertisement

இதைத் தவிர, தொழில் வளர்ச்சிக்கு முக்கிய துறையான நிலக்கரி ஊழல், தொலைத்தொடர்பு அலைக்கற்றையில் ஊழல் என ஊழல் என்னும் அட்டைப்பூச்சி நாட்டின் வளர்ச்சி என்னும் ரத்தத்தை குடித்துக்கொண்டே இருக்கிறது.

இவை மட்டுமா? எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை போன்ற குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் 33,701 பாலியல் வழக்குகளும், வரதட்சிணைக் கொடுமையால் 8,083 மகளிர் இறந்துள்ளதாகவும் குற்ற ஆவணம் கூறுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் 58,224 பதிவாகியுள்ளன.

இவையெல்லாம் நடைபெற காரணம் என்ன? மனிதனுக்குள் உள்ள ஆசை என்னும் அரக்கன்தான். ஒரு நாடு, இன்னொரு நாட்டை அழிக்க கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளையும், லாஞ்சர்களையும் உருவாக்க அறிவியல் சக்தியை பயன்படுத்தும்.

ஏற்கெனவே, 1914-18 வரை முதல் உலகப் போரையும், 1939-45 வரை இரண்டாம் உலகப் போரையும் கண்டு, எண்ணற்ற உயிர்களை கண் முன்னே இழந்தும், நம் மனம் மாறவில்லையே.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என தனது அரசு ஆடம்பர வாழ்க்கையையே துறந்த புத்தன் பிறந்த இந்த தேசத்தில்தான் குற்றங்கள் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இவையெல்லாம் அதிகரிக்குமேயானால் நாடு எப்படி வல்லரசு ஆகும்?

இவற்றை எப்படித்தான் ஒழிப்பது? காந்தி தேசத்துக்கு அறவழியில் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது போல நாமும் அறவழியை பின்பற்ற வேண்டும்.

பிறக்கும் போது அனைவரும் நல்ல குழந்தைகளே! வளர்ப்பும், சுற்றுப்புறச் சூழ்நிலையும்தான் மனிதனை நல்ல மனிதனாகவோ விலங்கு குணமுள்ளவனாகவோ மாற்றுகின்றன.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது நம் முன்னோர் வாக்கு. எனவே, சிறுவயதிலே நல்ல ஒழுக்கம் கொண்ட குழந்தைகளை நாம் உருவாக்க வேண்டும்.

இதற்கு தொடக்கக் கல்வியில் மாற்றம் தேவை. காலையில் எழுந்து அவசர, அவசரமாக பள்ளிக்கு புறப்பட்டுச் சென்று அங்கு ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை மனப்பாடம் செய்து, பின்னர் அவற்றை தேர்வில் வாந்தி எடுப்பது போல எழுதி நல்ல மதிப்பெண் பெறுவது நமது உண்மையான வெற்றி அல்ல.

கல்விச்சாலைகள் அனைத்தும் நம் முன்னோர் வைத்திருந்த பாடசாலை போல, செய்முறை பயிற்சியுடன் கூடிய கல்வி என்ற நிலைக்கு மாற வேண்டும். இதில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு குறளையும் கூறி அதற்கு விளக்கம் அளிக்கும் குழந்தைகளுக்கு வாரம்தோறும் சிறப்பு பரிசு வழங்கவேண்டும்.

இதற்கு மாநில அரசு கல்வித் துறைக்கு சிறப்பு நிதியை வழங்கி கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களைச் சுற்றுப்புறச் சூழ்நிலையால் குணம் மாறும் மாணவர்களைக் கண்டறிந்து, மனோதத்துவ ஆசிரியர் மூலம் அவர்களின் பிரச்னைகளை களைய முன்வரவேண்டும்.

அன்பு என்றால் தம் உயிர்போல மற்ற உயிர்களையும் நினைப்பது என்பதை ஆரம்பக் கல்வியிலே பசுமரத்தாணி போல குழந்தைகளின் மனதில் பதியவைக்க வேண்டும்.

நல்ல நடத்தையால் உடனே நன்மைகள் கிடைக்காவிட்டாலும், பின்னாளில் நன்மைகள் முளைப்பதற்கு அது விதை விதைப்பது போல என்பதை ஒவ்வாரு தமிழ் பாட வகுப்பில் போதிக்க வேண்டும்.

தமிழ் பாடத்தை இரண்டாகப் பிரித்து திருக்குறள், அவ்வையாரின் நீதிக்கதைகள் கொண்ட தனிப் பாடநூல் உருவாக்கி அதற்கென, மற்ற பாடங்களுக்கு கொடுப்பது போல 100 மதிப்பெண் கொடுக்க வேண்டும்.

சிறந்த ஒழுக்கம் நிறைந்தவர்களாக உருவாகும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மேல் படிப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

சிறு வயதிலேயே பேராசை, பொறாமை போன்ற எண்ணங்களை நீக்கிவிட்டோமேயானால் நிச்சயம் எதிர்காலத்தில் லஞ்சம், ஊழலற்ற, குற்றங்கள் அற்ற சமுதாயம் உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.