முகப்பு
கட்டுரைகள்

உண்மையான குதூகலம்

அண்மைக்காலமாக திருமணம் போன்ற விழாக்களில் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் இப்படிப் பேசிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது:

Updated On : 7 மார்ச், 2014 at 1:02 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:05 AM

அண்மைக்காலமாக திருமணம் போன்ற விழாக்களில் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் இப்படிப் பேசிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது:

"எனது மகனுக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் எங்களோடு இருந்தான்... இப்போது தனிக் குடித்தனம் போய்விட்டான்...'

"எனக்கு மூன்று பிள்ளைகள்... மூவரும் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் போய்விட்டார்கள்... நானும் எனது வீட்டுக்காரரும் தனியேதான் இருக்கிறோம்...'

Advertisement

ஏன் இந்த அவலநிலை?

கூட்டுக் குடும்பம் என்கிற அமைப்பு பெருமளவு குறைந்து விட்டது. திருமணமாகி வரும் பெண்கள், சுதந்திரமாக இருக்க வேண்டும், கணவர் தங்களது சொல்படி நடக்க வேண்டும், பெரியவர்களுக்கு மரியாதை தந்தால்போதும் என நினைக்கிறார்கள். ஆண்களோ எதற்கு மனைவியுடன் வீணாக தகராறு செய்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறார்கள். இதனை பல பெண்கள், ஆண்களின் பலவீனமாக எடுத்துக் கொள்கிறார்கள். இது குடும்பத்தின் சிதறலுக்கு அடிகோலுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதனை சுமுகமாகத் தீர்த்து, ஒன்று கூடி வாழ வேண்டும் என எண்ணுவதே சரி. ஆனால், அப்படி எண்ணுபவர்கள் மிகவும் குறைவானவர்களே என்பதுதான் மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

எனது நண்பர் ஒருவருக்கு இரு ஆண் பிள்ளைகள். முதல் பையனுக்கு திருமணம் முடிந்தது. சில மாதங்களிலேயே அவர் தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். அடுத்த பையனும் திருமணம் முடிந்து சில மாதங்களில் தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். நண்பரும் அவர் மனைவியும் இப்போது தனியே இருந்து வருகிறார்கள். தங்களின் பேரன், பேத்திகளை அவர்கள் பார்க்க இயலாத நிலையில் உள்ளார்கள். ஏனெனில் மருமகள்கள், தாத்தா, பாட்டியை பார்க்க குழந்தைகளை அனுப்புவதில்லை. அந்த நண்பர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இதனைச் சொல்லிப் புலம்புவார்.

மற்றொரு நண்பரோ தன் பேரன் தன் வீட்டுக்கு வந்து தன்னைப் பார்க்காததால் அவன் படிக்கும் பள்ளிக்கே அவ்வப்போது சென்று பேரனைப் பார்த்து வருகிறார். இது எவ்வளவு வேதனை அளிக்கும் விஷயம்? பிள்ளைகளுக்கு விடுமுறை வந்து விட்டால், பெண்கள் தங்கள் உடன்பிறந்தவர்களின் வீட்டுக்குத்தான் குழந்தைகளை அனுப்பி வைக்கிறார்களே தவிர, தாத்தா, பாட்டி வீட்டுக்கு அனுப்புபவர்கள் மிகவும் குறைவுதான்.

தனிக்குடித்தனம் என்பதையே அறியாமல் எல்லாரும் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக இருந்தபோது பிள்ளைகளை யார் வேண்டுமானாலும் கண்டிக்கலாம். பிள்ளைகளின் பெற்றோர் அதனைத் தவறாக கருத மாட்டார்கள். அது தனது பிள்ளையின் எதிர்காலத்திற்கு நல்லது என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அந்த நிலைமை தற்போது மாறிவிட்டது. பிள்ளைகளை யாராவது கேலியாகப் பேசினாலும் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளும் பெண்களே தற்போது அதிகம்.

"ஈகோ' தான் கூட்டுக் குடும்பத்துக்கு முதல் எதிரி. நான்தான் எல்லாம் என எண்ணுவதால்தான் பிரச்னை உருவாகிறது. எனது நண்பர் ஒருவரின் மருமகள், "நான் இப்படி செய்யலாம் என்று நினைக்கிறேன், சரியா' என தனது மாமியார், மாமனாரிடம் கேட்பார். அவர்களும், "சரி உன் விருப்படி செய்' எனக் கூறுவார்கள். அதனைப் பற்றி அதிகம் விவாதிப்பதில்லை. இதனால் அந்த மருமகள், மாமியார், மாமனார் மீது வெறுப்படைவதில்லை. பெரியவர்களும் தங்களுக்கு மரியாதை கிடைத்து விட்டது என எண்ணி மகிழ்கிறார்கள். மருமகளுக்கும் நல்ல பெயர் கிடைத்து விடுகிறது.

தங்கள் பெற்றோரிடம் விட்டுக் கொடுத்துப் போகும் பெண்கள், மாமியார், மாமனாரிடம் விட்டுக் கொடுத்து நடப்பதில்லை. இதனால்தான் பெரும்பாலும் பிரச்னைகள் உருவாகின்றன.

இந்த நிலை மாற, திருமணம் முடிந்தவுடன் பெற்றோர் தங்கள் பெண்ணிடம், "கணவன்தான் இனி எல்லாம். அவரின் சொல்படி கேட்டு நீ நடந்து கொள்ள வேண்டும், இனி உன் வீடு என்பது மாமியார், மாமனார் இருக்குமிடம்தான்' என எடுத்துக் கூற வேண்டும்.

திரைப்படங்களையும், டி.வி. சீரியல்களையும் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பவர்களே அதிகமாக உள்ளனர். நிஜத்திற்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிராமங்களில் அந்த காலத்தில் அண்ணன், தம்பிகள் தனித்தனி வீடுகளில் வசித்தாலும் அந்த வீடுகளுக்கிடையே தடுப்புச் சுவர் இருக்காது. பலகாரம், தின்பண்டங்கள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் கொடுப்பதும் வாங்குவதும் சகஜம். இதனால் உறவுகள் சிறப்பாக இருந்தன. தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு ஆணும் திருமணம் என்ற புனிதமான பந்தத்தின் மூலம், இது எனது வீடு, எனது குடும்பம் இதனை சீர்குலைக்க மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டால், குடும்பத்தில் உண்மையான குதூகலம் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.