கட்டுரைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் இந்திய மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, குருமலை, சாயமலை,

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் இந்திய மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, குருமலை, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோவில், யானைமலை, தெற்கிலிருந்து துவங்கி, கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலையிலிருந்து ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம் வரை நீண்டு நிற்கின்றது.
 கிழக்குத் தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும், மேற்குத் தொடர்ச்சி மலையைப் போல தொடர்ச்சியாக இல்லாமல் துண்டுதுண்டாக காணப்படுகிறது.
 இதன் முக்கிய காரணம், வங்கக் கடலில் கலக்கும் கிழக்கு நோக்கிப் பாயும் நதிகளான மகாநதி, துங்கபத்ரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் காலங்காலமாக ஏற்படுத்தும் நிலஅரிப்புதான். ஆனாலும், இம்மலைகளின் அடித்திட்டுகள் ஒன்றுக்கொன்று இணைந்தே உள்ளன.
 கருங்கல் பாறைகள், படிகப் பாறைகள், சார்னோகைட், தகட்டுப் பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளன. சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்கள் இதில் கிடைக்கின்றன.
 கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்திருக்கும்.
 கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன. இதன் உயரமான சிகரம் ஆந்திராவில் உள்ள ஜிந்தகடா மலையாகும். இதன் உயரம் 1,690 மீட்டர். உயரம் குறைவான பல குன்றுகளும் இங்கு அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் குறிப்பிடத் தகுந்தவை.
 நீலகிரி பகுதியில், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருடன் புவியியல் ரீதியாக ஒன்றை ஒன்று நெருங்குகிறது. தெற்கே, நெல்லைச் சீமையில் துவங்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சேலம் வட்டாரத்தில் சேர்வராயன் மலையிலிருந்து புவியியல் முக்கியத்துவம் பெறுகிறது. சேர்வராயன் மலையில்தான் ஏற்காடு அமைந்துள்ளது. சேர்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4,000 அடி முதல் 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
 வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலைத்தொடர் 262 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. தென்பெண்ணை - பாலாறு நதிகளுக்கு இடையேயுள்ள ஜவ்வாதுமலை சுமார் 1,160 மீட்டர் உயரம் கொண்டது. 80 கி.மீ. நீளம், 32 கி.மீ. அகலத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வரை ஜவ்வாது மலை பரவியுள்ளது. ஏலகிரி இம்மலையின் ஒரு பகுதி.
 ஜவ்வாதுமலை கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீ. உயரம் கொண்டது.÷செய்யாறு, ஆரணியாறு, கமண்டலா நதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகின்றன. பீமன் நீர்வீழ்ச்சி, அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிகள் இங்கு அமைந்துள்ளன.
 ஜவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. இது கள்வர் என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், மேற்குப் பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.
 கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன் மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவக் காற்றின் மூலமாக மழையைப் பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது.
 கர்நாடகா மாநிலம் தென் பகுதியில் கொள்ளேகாலில் அமைந்திருக்கிறது மாதேஸ்வரன் மலை. கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள, தமிழக எல்லையான சத்தியமங்கலம் வனப்பகுதியில் தான் வீரப்பன் சாம்ராஜ்ஜியம் நடந்தது. மைசூரில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இம்மலையில் மாதேஸ்வரன் கோயில் உள்ளது.
 ஆந்திராவின் தென்கிழக்குப் பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே வெளிகொண்டா மலை உள்ளது. திருமலை - திருப்பதி கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் ஏழு மலைக்குன்றுகளாக சூழ்ந்து பரவியுள்ளது.
 சேஷாசலம் - வெளிகொண்டா மலைத்தொடரில் சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருசபத்ரி, நாராயணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி என இந்த ஏழு குன்றுகள் அழைக்கப்படுகின்றன. ஏழாவது குன்றான வெங்கடாத்ரியில் திருவேங்கடத்தான் திருக்கோயில் அமைந்துள்ளது.
 சித்தூரில் உள்ள திருப்பதி சாலையின் இயற்கையான செங்குத்துச் சரிவுகளில் தொன்மையான பாறைக்கூட்ட இடைவெளிகள் காணப்படுகின்றன. கிழக்குத் தொடச்சி மலைகளில் உயரமான மலையான ஆனந்த கிரி இத்தொடரைச் சார்ந்தவையே.
 வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து என்று தொல்காப்பியமும், குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்று நன்னூலும் தமிழகத்தின் வட எல்லையாக இந்த திருமலையினைக் குறிப்பிடுகிறது.
 மாநில எல்லைகள் சீரமைப்பில், தமிழகம் திருப்பதி மட்டுமல்லாமல் சித்தூர், காளகத்தி ஆகிய பகுதிகளை ஆந்திரத்திடம் இழந்துள்ளது. ம.பொ.சி.யின் தியாகத்தால் ஆந்திரத்திற்குச் செல்ல இருந்த திருத்தணியை மட்டும் மீட்டுள்ளோம். இங்கு குறிப்பிட்டுள்ள கொள்ளேகால் மலைப்பகுதியினையும் கர்நாடகத்திடம் இழந்துள்ளோம்.
 கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பாப்பிமலை பரவியுள்ளது. பாப்பி மலையின் தொடர்ச்சியாக விசாகப்பட்டினத்திற்கு வடபகுதியில் மதுரவாடா முகடு அமைந்துள்ளது. விசாகப்பட்டினம் கடற்கரை வரை இதன் தொடர்ச்சி உள்ளது.
 அடுத்ததாக, மாலியா மலைத் தொடர் உள்ளது. இங்குள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1,501 மீட்டர் உயரம் கொண்டது. மாலியா மலைத் தொடரைக் காட்டிலும் மதுகுலகொண்டா மலைத் தொடர் உயரமானது. ஆர்ம கோண்டா (1 680 மீ.), காலிகோண்டா (1,643 மீ.), சிங்கராம்குட்டா (1,620 மீ.) முதலிய மலைச்சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன.
 ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் தொடங்கி, ஒடிஸா மாநிலத்தின் தென் பகுதியான கோராபுட்டில் அமைந்துள்ளது சந்திரகிரி பொட்டங்கி மலைத்தொகுதி. பூகோள, வரலாற்று ரீதியாக முக்கியமான மலையாக இது கருதப்படுகிறது. இங்குள்ள உயரமான மலைச்சிகரம் தியோமாலி (1,672 மீ.) என்றழைக்கப்படுகிறது.
 பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தும் மரச்சட்டம் போட்ட கருநிற சிலேட்டுகள் இம்மலை அடிவாரத்தில் உள்ள மண்ணில்தான் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, இப்பகுதியில் உள்ள மர்காப்பூரில் சிலேட்டு தயாரிப்பு பிரதான தொழில். சிவகாசி தீப்பெட்டித் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுந்த விமர்சனங்களைப்போல மர்காப்பூரிலும் சிலேட்டு தயாரிப்புத் தொழிலில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்னைகள் எழுந்தன.
 1990-இல் மத்திய அரசின் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு வாரியத்தின் உறுப்பினர் என்ற முறையில் அடியேன் இப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு இதுபற்றி அறிக்கைகளை வழங்கினேன்.
 கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளாலே தொடராக இல்லாமல் தடுக்கப்படுகிறது.
 கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் விவசாயமும், இயற்கையாக வளர்கின்ற அரிய மூலிகைகளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள், நறுமணப் பொருள்கள் ஆகியவை இங்கு வாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது.
 மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைக்காலங்களில் வறட்சியாகவும் காணப்படும் இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறைகளும், பழக்க வழக்கங்களும் தொன்மை வாய்ந்தன.
 மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பிலும், வன அடர்த்தியை கண்காணிப்பதிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றன.
 திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப் பகுதிகளில் சுமார் 8,200 ஏக்கர் நிலங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நத்தம் சாலையில் மலைவாழிடமான சிறுமலை அமைந்துள்ளது. இங்குதான் பலரும் விரும்பி உண்ணும் மலை வாழைப்பழம் விளைகிறது.
 மேற்குத் தொடர்ச்சியைவிட உயரத்தில் குறைவாக இருந்தாலும், இம்மலைத்தொடரின் வேர்கள் பூமியின் அடியாழத்தில் இணைந்துள்ளன. கிழக்குத் தொடர்ச்சிமலை தொடங்கும் வல்லநாடு மலையின் அடித்திட்டு தூத்துக்குடி தோணித்துறையில் அமைந்துள்ள மல்லாங்குளம்பாறை வரைக்கும் நீள்கிறது.
 ஆங்கிலேயர் காலத்தில் பொறியாளர் சர் ராபர்ட் பிரிஸ்டோ துறைமுகப்பகுதிகளை ஆழப்படுத்தும்போது இப்பாறைகளுக்கு வெடிகள் வைத்தும் தகர்க்க முடியவில்லை. இதனுடைய அதிர்வு அப்போது குற்றாலம் பாபநாசம் மலைகள் வரை எதிரொலித்ததாகச் செய்திகள்.
 இந்தத் தொடர்பாறைகள் ராமேஸ்வரம் அருகேயுள்ள உத்திரகோசமங்கை வழியாக வங்கக்கடலின் உள்ளே பாய்ந்தோடி, இலங்கையில் உள்ள தலைமன்னார் காங்கேசத்துறை, இலங்கை மத்திய தோட்டப்பகுதி, நுவரேலியா வரை கிழக்குத் தொடர்ச்சி மலையின் அடித்திட்டு தொடர்புகளாக நீண்டுள்ளது என ஆய்வுகளும் செய்யப்படுகின்றன.
 எப்படி மேற்குத் தொடர்ச்சி மலைகள் இயற்கையின் அருட்கொடையோ, அப்படி வங்கத்திலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதியான சோட்டா நாகபுரி பீடபூமி, தக்காண பீடபூமி, தமிழகம், இலங்கை வரை பரவியுள்ள இந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் குறித்து வரலாறு, புவியியல், அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த மலைத் தொடரையும், இதன் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT