நடுப்பக்கக் கட்டுரைகள்

அறிவியலுக்கே அறைகூவல்

சென்னையிலிருந்து கிழக்கே சுமார் 370 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் காணாமல் போய்விட்டது.

உதயை மு. வீரையன்

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 வகை விமானம் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்திலிருந்து அந்தமான் தலைநகருக்கு ஜூலை 22 காலை 8.30-க்குப் புறப்பட்ட இந்த விமானம் 11.30 மணிக்கு போட் பிளேயருக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் விமானம் புறப்பட்டுச் சென்ற 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையிலிருந்து விமானம் மாயமானது. அதாவது, சென்னையிலிருந்து கிழக்கே சுமார் 370 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் காணாமல் போய்விட்டது.

இந்த விமானத்தில் 6 விமானிகள், 11 விமானப் படை வீரர்கள், 9 கடற்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், கடலோரக் காவல்படை வீரர் ஒருவர் என மொத்தம் 29 பேர் பயணம் செய்துள்ளனர்.

மாயமான விமானப்படை விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 13 கடற்படைக் கப்பல்கள், 2 கடலோரக் காவல் படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், 12 விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

விமானம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கடல்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சில பொருள்கள் மிதப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை விமானத்தின் பகுதியென அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

மாயமான ஏஎன்-32 விமானம் ரஷ்யாவில் தயாரானது. இந்திய விமானப் படையில் சுமார் 100 ஏஎன்-32 வகை விமானங்கள் உள்ளன. மிகவும் நம்பகமான விமானம் என்று கருதப்படும் இந்த விமானம் எத்தகைய பருவ நிலையிலும் பறக்கக்கூடியது.

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ந்து நான்கு மணி நேரம் பறக்கக் கூடியது. இது மேல் எழுவதற்கும், தரையிறங்கவும் குறைந்த தூர ஓடு தளமே போதுமானது. ராணுவ வீரர்களையும், அவர்களுக்குத் தேவையான சரக்குகளையும் கொண்டு செல்ல இது பயன்பட்டு வந்தது. சரக்குகளை ஏற்றி, இறக்க நவீன வசதிகளைக் கொண்டது.

"காணாமல் போன ஏஎன்-32 வகை விமானத்தைக் கண்டறிவதற்காக ரிசாட் செயற்கைக் கோளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்தச் செயற்கைக் கோள் இரவு, பகல் நேரங்களில் துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது' என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

ரேடார் செயற்கைக் கோள் மூலம் இரவிலும், பகலிலும் படங்களை எடுக்க முடியும் என்பதால், விமானம் எங்குள்ளது அதன் உடைந்த பாகங்கள் எங்காவது தென்படுகிறதா என்பதைக் கண்டறிய முடியும். இந்த ரேடாரில் உள்ள மைக்ரோ அலைகள் மேகங்களையும் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டவை.

எனவே இந்த செயற்கைக் கோள் உதவியுடன் காணாமல் போன விமானத்தைக் கண்டறிய தீவிர முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளிவந்தது.

விமானத்தைத் தேடும் பணிக்கு தலைமை ஏற்றுள்ள கிழக்குக் கடலோரக் காவல் படை ஐ.ஜி. ராஜன் பர்ஹோத்ரா, "சென்னையிலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தற்போது 200 கடல் மைல் வரை நீடிக்கப்பட்டு தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வான்வழிப் பார்வையில் 60 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவிலும், தரைவழியில் 40 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவிலும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் மூவாயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இருப்பினும் காணாமல் போன விமானத்தின் அவசர கால இருப்பிடம் அறியும் கருவிலிருந்து (உகப - உம்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீஹ் கர்ஸ்ரீஹற்ண்ர்ய் பழ்ஹய்ள்ம்ண்ற்ற்ங்ழ்) எவ்வித சமிக்ஞையும் கிடைக்கவில்லை. மேலும் விமானத்தின் பாகங்களோ, சிதைவுகளோ எங்கும் இதுவரைக் கண்டறியப்படவில்லை.

விமானத்தைத் தேடும் பணிக்கு, இஸ்ரோ, தேசியக் கடலாய்வு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் உதவிகள் பெறப்பட்டு வருகின்றன. இருப்பினும் விமானம் குறித்து எவ்விதத் தகவல்களோ, தடயங்களோ இதுவரை கிடைக்கவில்லை.

கடலின் மேற்பரப்பில் விமானத்தைத் தேடும் பணிகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் கடலின் ஆழத்தில் தேடும் பணிகள் தொடங்க இருக்கின்றன.

விமானம் விழுந்ததாகக் கருதப்படும் கடல் பகுதி 3,500 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் வரை ஆழம் இருப்பதால் தேடும் பணி சவாலாக இருக்கிறது என்று விமானம், கப்பல், கடலோரக் காவல் ஆகிய படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். நிருபக் என்ற கடற்படை கப்பலும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. இனிமேல் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான சாகர் நிதி மற்றும் மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான சமுத்திர ரத்னாகர் ஆகிய இரு ஆராய்ச்சிக் கப்பல்களும் தேடுதல் வேட்டையைத் தொடங்கவுள்ளன.

விமானம் விழுந்ததாகக் கூறப்படும் 20 நாட்டி கல் மைல் சுற்றுவட்டாரப் பகுதியில் சாகர் நிதியையும், வெளிச்சுற்று வட்டாரப் பகுதியில் 30 நாட்டி கல் மைல் பகுதியில் ரத்னாகர் கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மங்களூருவில் இருந்து ரத்னாகர் ஆராய்ச்சிக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்து விட்டது. இதில் ஒரு மாதத்துக்குத் தேவையான எரிபொருள், மீட்புக் குழுவினருக்கான ஒரு மாத உணவு போன்ற மிகத் தேவையான பொருள்களை ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தக் கப்பலில் புவியியல் துறை தலைமை விஞ்ஞானி ஜி.நாகேந்திரன் தலைமையில் எட்டு விஞ்ஞானிகள் செல்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியிலாவது வெற்றி கிடைக்குமா என்று பார்ப்போம்.

கடந்த ஆண்டு நடந்த விமான விபத்தும் இது போன்றதுதான். தாம்பரம் விமானப் படை தளத்திலிருந்து 2015 ஜூன் 8 அன்று டோர்னியர் வகை விமானம் பயிற்சிக்காக புதுச்சேரி சென்று சென்னை திரும்பிய போது காணாமல் போய்விட்டது.

இந்த விமானத்தில் விமானி மற்றும் துணை விமானிகள் இரண்டு பேர் பயணம் செய்தனர். ஒரு மாதத்துக்கும் மேலாகத் தீவிரத் தேடுதல் நடந்தது. கடைசியில் சிதம்பரத்துக்குக் கிழக்கே அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதும், அதில் அந்த மூவரும் பலியானதும் தெரிய வந்தது.

கடலுக்கு அடியில் 950 மீட்டர் ஆழத்திலிருந்து கருப்புப் பெட்டி உள்ளிட்ட விமானத்தின் பாகங்கள், விமானிகளின் கைக் கடிகாரங்கள், எலும்புகள் ஆகியவை மீட்கப்பட்டன.

இதுபோலவே மலேசிய நாட்டின் பயணிகள் விமானம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது இதுவரை அந்த மர்மம் புரியாத புதிராகவே இருக்கிறது. கடந்த 2015 மார்ச் 8 அன்று மலேசிய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச் 370 விமானம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 239 பயணியர் இருந்தனர்.

இந்த விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாயமானது. அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி யிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்கள்கூட கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதே சமயம் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் உயிரிழந்து விட்டதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மலேசிய அரசு அறிவித்தது. அந்தப் பயணிகளின் உறவினர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

இந்நிலையில் இப்போது வந்துள்ள ஒரு புதிய தகவல்: எம்ஹெச் 370 விமானத்தின் விமானி ஜஹாரி அகமது ஷா என்பவர் சதி செய்து விமானத்தைக் கடத்தியிருப்பதாக அந்நாட்டு அரசு 5.7.2016 அன்று முதல் முறையாக அறிவித்துள்ளது.

இதுபற்றி மலேசிய விமானப் போக்குவரத்துத் துறையமைச்சர் லியோவ் தியோங் லாய் கூறியுள்ளார். விமானியின் வீட்டிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட சிமுலேட்டர் கருவியில் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி வழியாக விமானத்தைச் செலுத்துவதற்கான வழித்தடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தக் கருவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களை அவர் பதிவு செய்து வைத்துள்ளார். அதனால் விமானத்தை எந்தத் திசையில் செலுத்தினார் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உலகில் ஆங்காங்கே எப்போதாவது இத்தகைய விபத்துகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றைத் தடுத்திட இயலவில்லை. மனித உயிர்களுக்காக மனம் பதறுகிறது. மனித முயற்சியால் உருவான அறிவியல் சில நேரங்களில் மனித ஆணைகளுக்குக் கட்டுப்படுவது இல்லை; ஆராய்ச்சிக்கும் அடங்குவது இல்லை.

"உலகத்தின் நன்மை கருதியே அறிவியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன. இவ்வுண்மைகள் அழிவு வேலைகளுக்குப் பயனாவதைக் கண்டு அறிவியலைக் குறை கூறலாகாது. மாறாக, அழிவு வேலைகளுக்குக் காரணமான மனிதனின் இழிந்த புத்தியையே தூற்ற வேண்டும்' என்று அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

மனித அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் எட்டாத இத்தகைய புதிர்கள் எப்போதும் விடையில்லாத கேள்வியாகவே அமைகின்றன. இந்தச் சவாலை சமாளிக்க வேண்டும் என்றே அறிவியல் உலகமும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்துக் கொண்டே யிருக்கின்றன. எப்போதே நிகழும் இத்தகைய விமான விபத்துகள் அறிவியலுக்கே ஓர் அறைகூவலாக அமைந்து விடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT