நடுப்பக்கக் கட்டுரைகள்

மாவோயிஸ்ட்டுகளே, மனம் திருந்துங்களேன்!

தி. இராசகோபாலன்

 சத்தீஸ்கரில் 22 இந்திய இராணுவ வீரர்கள், ஏப்ரல் 3 அன்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்; மத்திய ரிசர்வ் போலீசின் அதிரடிப்பிரிவைச் சார்ந்த 31 வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
 அன்று மாவோயிஸ்ட்டுகள் ஒரு வஞ்சக வலை விரித்தனர். சுக்மா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தங்களது பொதுக்குழு கூடுவதாக ஒரு செய்தியை, மத்திய இராணுவப் படைக்கும், ஜார்க்கண்ட் காவல்துறைக்கும் கசியவிட்டனர். அந்த வஞ்சகம் குறித்துத் தெரியாத இராணுவமும் கோப்ரா படையும் அவர்களைச் சிறைபிடிப்பதற்காக வனப்பகுதியுள் நுழைந்தனர்.
 மேலும் இராணுவத்தினர் நம்பும்படியாக "ஜீராகான் - டெகுலுகுடா' ஆகிய இரண்டு கிராமங்களையும் காலியாக்கி வைத்தனர். இராணுவத்தினரை வனப்பகுதியில் நுழையவிட்டுச் சுட்டுத் தள்ளினார்கள். கோப்ரா படையினர் வைத்திருந்த வலிமையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் கவர்ந்து சென்றனர்.
 மாவோயிஸ்ட்டுகள் படுகொலை நடத்தியது முதன்முறையன்று. 2010-ஆம் ஆண்டு தந்தேவாடா பகுதியிலுள்ள "டெட்மெட்லா' எனுமிடத்தில், 76 சி.ஆர்.பி.எஃப். படை வீரர்களை அநியாயமாகச் சுட்டுக் கொன்றனர்.
 கோலா யாதவ் என்ற மாவோயிஸ்ட் 2007-ஆம் ஆண்டு, மனித உயிர்களை மிருகங்களைப் போல் வேட்டையாடியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிரிடி மாவட்டத்தில் சில்காரி கிராமத்தில், கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப்பையும் 20 கிராமவாசிகளையும், கோலா யாதவ் தலைமையில் வந்த மாவோயிஸ்ட்டுகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
 ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நக்சல்பாரிகளும் மாவோயிஸ்ட்டுகளும் தோன்றுவதற்கு நியாயங்கள் இருந்தன. வட மாநிலங்களில், மேற்கு வங்காளம், பிகார், ஒடிஸா, உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்த விவசாயிகள் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். விவசாயிகளுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, பண்ணைகளில் வேலை செய்ய மட்டும் நிர்பந்திக்கப்பட்டனர். மறுத்துப்பேசினால் பண்ணைக்குள்ளேயே வெட்டிப் புதைத்துவிடுவார்கள்!
 வட மாநிலங்களில் பெரும் மிராசுதாரர்களிடமும் பண்ணை முதலாளிகளிடமும் விவசாயிகள் படும் நரக வேதனைகளைப்பார்த்து, மேற்கு வங்காள கம்யூனிஸ்ட்டாகிய சாரு மஜும்தார் கொதித்து எழுந்தார். பொதுவுடமை இயக்கத்தின் தீவிரம் போதாது என்று எண்ணிய சில புரட்சியாளர்கள் "தெபாகா' எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து ஆயுதம் ஏந்தினர். கொத்தடிமைகளாக நடத்தப்படும் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க "தெபாகா' இயக்கத்தைப் பயன்படுத்தத் துணிந்தார் சாரு மஜும்தார்.
 அந்நேரத்தில் இமயமலையின் அடிவாரத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த "நக்சல்பாரி' எனும் கிராமத்தில் விவசாயிகள் குறைந்த கூலி, அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், கடுந்தண்டனை போன்ற சித்ரவதைகளுக்குள்ளாகியிருப்பதை அறிந்து சாரு மஜும்தார் தம் நண்பர் "கானு சன்யால்' துணையோடு நக்சல்பாரிக்கு விரைந்தார். "அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மூலமே புரட்சியை ஏற்படுத்த முடியும்' என்ற முடிவுக்கு வந்தார்
 நக்சல்பாரி விவசாயிகளை ஒன்று திரட்டி, அவர்களிடம், "நாடாளுமன்ற சனநாயகம் நயாபைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை. பண்ணையார்களிடத்தும் ஜமீன்தார்களிடத்தும் வேலை பார்த்தது போதும். அவர்களிடம் இருக்கும் நிலங்களை நீங்களே பிடுங்கிக் கொள்ளுங்கள். உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதால், நீங்களே நிலங்களைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்.
 இனிப் பண்ணையார்கள் இருந்து ஆகப்போவது ஒன்றுமில்லை; அவர்களை நீங்கள் கொன்று விடலாம். உங்கள் படையை நீங்களே உருவாக்குங்கள்! இதுவரையில் உங்கள் உழைப்பைச் சுரண்டித் தின்ற நிலவுடமையாளர்களுக்கு நீங்களே தீர்ப்பு வழங்குங்கள். அரசாங்க நீதிமன்றங்களை நம்பிப் பலனில்லை; மக்கள் நீதிமன்றங்களை (ஜன் அதாலத்) நிறுவுங்கள்' என முழங்கினார் சாரு மஜும்தார்.
 சாரு மஜும்தாரின் முழக்கங்கள் கிராமந்தோறும் எதிரொலித்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி, சாரு மஜும்தாரின் முழக்கத்தை, "வசந்தத்தின் இடி முழக்கம்' என வருணித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிரான யுத்தத்தை நக்சல்பாரி விவசாயிகள் தொடங்கினர். எங்கும் தீவைப்புகள், கொலைகள், மரண ஓலங்கள். பண்ணையாளர்களின் நிலப்பத்திரங்கள் கொளுத்தப்பட்டன.
 விவசாயிகள் பெற்றிருந்த கடன் பத்திரங்கள் மீட்கப்பட்டுக் கிழித்தெறியப்பட்டன. நில முதலாளிகள் குடும்பத்தோடு கூண்டில் ஏற்றப்பட்டனர். ஊருக்கொரு விதமாகத் தண்டனைகளை வழங்கினார்கள். பல இடங்களில் மிராசுதாரர்களுக்கு மரணதண்டனை விதித்து, அதனை நிறைவேற்றவும் செய்தனர். இதுதான் நக்சலைட்டுகளின் தொடக்கப்பணி. நக்சல்பாரி எனும் கிராமத்தில் தோன்றியதால், புரட்சியாளர்கள் நக்சல்பாரிகள் என அழைக்கப்பட்டனர்.
 மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரிகளின் கொலைவெறி அத்துமீறிப் போகவே மாநில அரசு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. நக்சலைட் இயக்கத்தின் பிதாமகராகிய சாரு மஜும்தாரை 16.7.1972 அன்று கைது செய்து, அலிப்பூர் சிறையில் அடைத்தது. சிறையிலே அவரை சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி, ஜூலை 28 ஆம் நாள் சுட்டுக் கொன்றனர்.
 1971-இல் மேற்கு வங்கத்தில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பயன்படுத்தி, பிரதமர் இந்திராகாந்தி மத்திய இராணுவத்தையும், துணை இராணுவத்தையும், அதிரடிப் படையினரையும் அனுப்பி "ஆப்ரேசன் ஸ்டீபிள் சேஸ்' எனும் திட்டத்தின்கீழ் நக்சலைட்டுகளைக் கண்ட இடத்தில் சுடச் சொன்னார். அன்றைய பிரதமரின் தீவிர நடவடிக்கை, நக்சலைட்டுகளின் ஆணிவேரை அசைத்தது.
 சத்தீஸ்கர் மாநிலம் பிரிந்தவுடன், மாவோயிஸ்ட்டுகள் புத்துயிர் பெற்று எழுந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் ஆதிவாசிகள் வாழும் காடுகளாக அமைந்துவிட்டன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 40 விழுக்காட்டுக்கு அதிகமான இடங்கள் அடர்த்தியான, அபாயகரமான காடுகள் நிறைந்தவை.
 காடுகளுக்கு நடுவேயுள்ள நூற்றுக்கணக்கான குக்கிராமங்களில் என்ன நடக்கிறது, எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அரசுக்குக் கூடத் தெரியாது. கிராமங்களுக்கு இடையே சாலைகள் கிடையாது; தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விளக்குகள் எதுவும் கிடையாது. இந்தக் காடுகள்தாம் இப்பொழுது மாவோயிஸ்ட்டுகளின் சரணாலயங்கள் ஆகிவிட்டன.
 வனங்களை ஆக்கிரமித்த மாவோயிஸ்ட்டுகள் தெருக்களை இணைக்கச் சாலைகளையோ, தெரு விளக்குகளையோ வர அனுமதிப்பதில்லை. ஏப்ரல் மூன்றாம் தேதி கொலை வெறிக்குக் காரணமே, நெடுஞ்சாலைத்துறை ஒரு சாலை போட முயன்றதுதான். சில்ஜரில் இருந்து ஜாகர்குண்டாவுக்கு சாலை போடும் பணியைப் பொதுப்பணித்துறை தொடங்கியபொழுது, அதனை மாவோயிஸ்ட்டுகள் வன்முறையால் தடுத்து நிறுத்தி விட்டனர். மாநில அரசும், மத்திய அரசும் நிறைவேற்ற நினைக்கும் நலப்பணிளை மாவோயிஸ்ட்டுகள் அனுமதிப்பதில்லை.
 வனத்துக்குள் வாழும் மக்கள், கிராமவாசிகள் மாவோயிஸ்ட்டுகளின் அடக்குமுறைக்கு பயந்தே வாழ்ந்து வருகின்றனர். மாவோயிஸ்ட்டுகளுக்குப் பயந்து, இராணுவத்தினரோ, அரசு அதிகாரிகளோ கேட்கும் எந்தக் கேள்விக்கும், வன மக்கள் பதில் தருவதில்லை. வனப்பகுதிகளில் மருத்துவமனைகளோ பள்ளிக்கூடங்களோ கிடையாது. பேருந்துகளையே பார்க்காதவர்கள் ஆதிவாசிகள்; மலைவாழ் மக்கள். சிறுவர்கள் மாவோயிஸ்ட்டுகள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்குத்தான் செல்ல முடியுமே தவிர, பள்ளிக்கூடம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.
 இராணுவத்தாலும், அரசாலும் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு முடிவு கட்டாமல் போகவே, தனி நபர்கள் "சல்வா ஜுடும்' எனும் இயக்கத்தைத் தொடங்கினர். "சல்வா ஜுடும்' என்பதற்குக் கோண்டி மொழியில் "அமைதிப்படை' எனப் பொருள். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராகச் சல்வா ஜுடும் இயக்கத்தவர் நடத்தும் பிரச்சாரம், ஆவேச நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தன.
 மாநில அரசு சல்வா ஜுடுமை அரவணைத்து அங்கீகரித்தது. என்றாலும், ஊர் மக்களுடைய ஒத்துழைப்பு, சல்வாஜுடும் இயக்கத்திற்குக் கிடைக்கவில்லை. இதனால் அரசு மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களின் தலைக்கு விலை வைத்தது.
 மாவோயிஸ்ட்டுகளின் கொலைவெறி அடங்காததால், வட மாநிலங்கள் இப்பொழுது தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பீஜப்பூர் சம்பவத்துக்குத் தலைமை வகித்த, "மத்வி ஹித்மா' எனும் மாவோயிஸ்ட் இருக்கின்ற இடம் குறித்துத் தகவல் தந்தாலோ, கைது செய்து ஒப்படைத்தாலோ, அவர்களுக்கு 7 இலட்சம் ரூபாய் வழங்குவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவித்திருக்கிறது.
 சத்தீஸ்கர் மாநிலம் அந்தத் தலைவனைப் பற்றித் தகவல் தந்தால், 10 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. வட மாநிலங்களில் கொலைவெறிச் செயலை நிகழ்த்தும் மாவோயிஸ்ட்டுகளின் தலைவன் பசவராஜு (மற்றொரு பெயர் நம்பாலா கேசவ ராவ்) இருப்பிடம் குறித்துத் தகவல் தந்தால், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிஸா ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து 1 கோடியே 85 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கின்றன.
 ஒரு காலத்தில் ஜமீன்தார்களும், பண்ணையார்களும், இனாம்தார்களும் விவசாயிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்ததால், நக்சலைட்டுகள் தோன்ற வேண்டிய அவசியம் இருந்தது. இன்றைக்கு எந்த ஜமீன்தாரும், பண்ணையாரும், விவசாயிகளுடைய நிலங்களை அபகரிப்பதில்லை; அடிமையாக நடத்துவதில்லை.
 அப்படியிருக்கும்பொழுது மாவோயிஸ்ட்டுகளே, நீங்கள் ஏன் துப்பாக்கி ஏந்துகிறீர்கள்? ஆதிவாசிகளை அடிமைகளாகவே வைத்திருக்கிறீர்கள்? ஒரு தலைமுறை சிறார்களைத் தற்குறிகளாகவே வைத்திருக்கிறீர்கள். சாலை வசதிகளைத் தடுத்து, மின்வசதி தராமல் செய்து, பாமர மக்களை ஏன் இருட்டறையில் வைத்திருக்கிறீர்கள்?
 நீங்கள் எப்போது மனந்திருந்தப் போகிறீர்கள்? சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்கள்கூட, கர்மயோகி ஜெயப்பிரகாஷ் நாராயணனால் மனந்திருந்திவிட்டார்களே! நீங்கள் ஏன் மனந்திருந்த மறுக்கிறீர்கள்?
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT