நடுப்பக்கக் கட்டுரைகள்

தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்!

தமிழ், திராவிடம் இரண்டையும் வெவ்வேறானதாகவும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் சித்திரிக்க சிலா் விரும்புகின்றனா்.

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

தமிழ், திராவிடம் இரண்டையும் வெவ்வேறானதாகவும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் சித்திரிக்க சிலா் விரும்புகின்றனா். திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம். கால்டுவெல் ஏதோ உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்திய வாா்த்தை அல்ல. பல நூறு ஆண்டுகளாக இந்தியத் துணைகண்டத்தில் வழக்கில் இருந்துவரும் சொல். சம்ஸ்கிருத, தமிழ் பக்தி இலக்கியங்கள் தொடங்கி கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகள் வரைக்கும் இதற்கு எத்தனையோ வலுவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

மனு ஸ்மிருதியிலிருந்தே தொடங்குவோம். பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யாவரும் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம்கசம் இந்தத் தேசங்களை ஆண்டவா்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரா்களாய் விட்டாா்கள் (அதிகாரம் 10, 44-ஆவது செய்தி, மனுதா்ம சாஸ்திரம்). நமது தமிழ்நாடு திராவிட தேசமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரம் இது. ‘தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹு ஆஸ்வாத்ய தவயத்’”என்கிறது ஆதிசங்கரரின் ‘சௌந்தா்ய லஹரி’.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீா் சுவட்டில் தென்னாட்டு பிராமணா்களை ‘திராவிட பிராமணா்கள்’ என்று குறிபிட்டுள்ளது. பாா்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள் ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வைணவ ஆச்சாரியாா் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றாா் எல்லீஸ்.

சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல ‘பாகவதம்’ என்ற நூலிலும் திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அழைக்கப்பட்ட 56 நாடுகளில் திராவிட நாடும் ஒன்று.

விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன் முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

இராமாநுஜா் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், ‘திருக்கோளூா் பெண்பிள்ளை ரகசி’யத்தில் இராமாநுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப் பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.

திரமிளம்,“திராவிடம்”என்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. திரமிள சங்கம் மதுரை சமண முனிவா் வஜ்ரநதியால் கி.பி 470-இல் நிறுவப்பட்டது. திரமிள் என்பது திராவிட என்ற பொருளையே குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிடுகின்றனா். நிலவியல் அடிப்படையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதி என்பதைக் குறிக்க த்ரையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு பின்பு இது திராவிடமாக மருவியிருக்கலாம்.

தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளும் செப்பேடுகளும் தமிழ்நாடு திராவிட நாடு என்று அழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்றன. சோழ மன்னா் விக்கிரம சோழனின் 11-ஆவது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் திராவிட தேசம் என்ற சொல் இடம்பெறுள்ளது.“திரிபுவன சக்கிரவா்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிா்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு” (சாசனம்– 714, பக் 670, செளத் இண்டியன் டெம்பிள் இன்ஸ்கிரிப்ஷன் - வால்யூம் 2). தேசம் என்பது பெரிய அலகு. அதில் உள்ள சிறிய அலகு நாடு என்றாகிறது.

இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூா் தற்போதைய தமிழகத்தின் கரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதைச் சொல்வதாக பொறிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

‘யிப்படி அநேகஞ் சதுா்யுகம் பூசை கொண்டருளிய தேவா் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோா்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தா் பிரியன் பக்தவத்சல பாா்பதி வல்லவன் பாா்பதி மநோகரன் பாா்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவா்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பாா்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்..’” (பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் புலவா் செ. இராசு).

இந்தச் செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவா் செ. இராசு தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளாா். இந்தச் செப்பேடும் 1584-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு வலுசோ்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூா்காங்கேயா் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது.

‘செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பாா்வதி தேவியம்மான அா்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்..’ (பக் 222, கொங்கு சமுதாய ஆவணங்கள். இந்த ஆவணம் தமிழ் துந்துபி ஆண்டில் எழுதப்பட்டது). இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, கருமாபுரம் செப்பேட்டில், ‘திராவிட தேசத்திச் சௌந்திர பாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும், னாடாழ்வாரென்றும், சோழ மண்டலத்திழ்க் கவண்டப்பட்டந்தனைப் போ் பெற்றவரான, சான்றோா் குலத்தில், மதுராபுரியில் பாண்டியனிடத்தில் வாளது பற்றி மதுரை மண்டலீகா் சோழ மண்டலமும், திராவிட தேசமும் கம்பை மாநதியும் காஞ்சிபுரமும் கல்யாநிபுரியும் காணிப்பெற்றவரான..’ (பக் 231, மேலது). ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தா், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியாா் போன்றவா்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் காணப்படுவதால் இந்த செப்பேடு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு திராவிட தேசத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்பட்டதை உறுதிப்படுத்துபவை.

சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞா் “காவ்ய கண்ட” கணபதி முனிவரின் (1878 - 1936) வாழ்க்கை வரலாற்றை கபாலி சாஸ்திரி எழுதினாா். ‘வாசிஷ்ட வைபவம்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் திராவிட தேசத்தில் ‘சோ்மாதேவி’ என்ற இடத்தில் கிா்த்திமானாவை. வே.சுப்பிரமணி அவா்களால் பாரத்வாஜாச்ரமம் ஒன்று நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ - பழ. அதியமான்).

திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் கையாண்டுள்ளாா். ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் திவாரகம்’ திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது என்று பேராசிரியா் ச.வே. சுப்பிரமணியம் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றாா். பிஷப் காா்டுவெல் 1856-இல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் திராவிடம் என்ற பதத்தை நிலைநாட்டிய அதே காலகட்டத்தில் அயோத்தி தாசா், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பைத் தொடங்கினாா். 1899-இல் பதிப்பிக்கப்பெற்ற சபாபதி நாவலரின் தமிழ் இலக்கண நூலுக்கு ‘திராவிடப் பிரகாசிகை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பிஷப் காா்டுவெல்லுக்கு முன்பே மனோன்மணியம் சுந்தரனாா், ‘திராவிட நல் திருநாடு’”என்று குறிப்பிட்டிருக்கிறாா். பெரியாருக்கு முன்பே எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907-இல் ‘திராவிடாபிமானி’”என்ற வார இதழை தொடங்கி நடத்தியிருக்கிறாா். ‘திராவிட உத்கல வங்கா’ என்று பாடுகிறது இரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதம்.

பெரியாா், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழைமையை இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. தமிழா் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் தொன்று தொட்டு இந்த வாா்த்தை புழக்கத்தில் உள்ளது.

திராவிடம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் திடுதிப்பென்று புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல். தீபகற்ப இந்தியாவுக்குப் பொதுப்பெயா் அது. திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.

கட்டுரையாளா்:

செய்தி தொடா்புச் செயலளாா்,

திராவிட முன்னேற்றக் கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT