நடுப்பக்கக் கட்டுரைகள்

மக்களாட்சியின் அழகு

க. பழனித்துரை

 அரசியல் கட்சியில் உயர்பதவி வகித்த ஒருவர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "என்னை இந்தப் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் என் தலைவர்' என்று மேடையிலிருந்த தலைவருக்குப் புகழாரம் சூட்டினார். அடுத்ததாகப் பேசிய அந்தத் தலைவர் "எந்தப் பதவிக்கும் ஓர் அழகு இருக்கிறது. அந்தப் பதவியின் அழகை மெருகூட்டும் ஒருவரை அப்பதவியில் நியமிக்க வேண்டும். அதுதான் ஒரு கட்சியின் தலைவனுக்குள்ள திறமை. அதைத்தான் நான் செய்தேன்' என்று குறிப்பிட்டார்.
 "பதவிக்கு என்ன அழகு? பதவிக்கு அதிகாரங்கள், பொறுப்புகள், கடமைகள்தான் இருக்க வேண்டும். இந்தத் தலைவர் அழகு என்று குறிப்பிடுகின்றாரே' என்று நான் அப்போது எண்ணியதுண்டு. ராபர்ட் டால் என்ற அரசியல் அறிவியலாளர் "மக்களாட்சியின் அழகு' என்று தன்னுடைய கட்டுரைகளில் அடிக்கடிக் குறிப்பிடுவதை படித்து விட்டு அதன் மூலத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் மக்களாட்சியின் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த வரலாற்றைப் படிக்கும்போது தான் மக்களாட்சியை நிலைநாட்ட, மானுடம் எவ்வளவு பெரிய விலை கொடுத்துள்ளது என்பது தெரிந்தது.
 மக்களாட்சிக்கான மக்கள் எழுச்சி, ஓங்குவதும் ஒடுங்குவதுமாக செயல்பட்டு அது மானுட சமூகத்தில் இன்று நீக்கமற நிறைந்துள்ளது. ஜனநாயகப்படுத்துதல் என்பது முதல் அலையாக கிரேக்கத்திலும் ரோமிலும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்தது. இரண்டாவது அலையாக 10 - 11-ஆம் நூற்றாண்டுகளில் வட இத்தாலியில் வீசத் தொடங்கியது. இந்த இரண்டு முறையுமே மிகச் சிறந்த செயல்பாட்டைத் தரக்கூடியதாக அந்த மக்களாட்சி விளங்கியது. இந்த இரண்டிலுமே மக்களாட்சி, சிறிய நகரங்களில் மட்டுமே செயல்பட்டு மக்களைக் கவர்ந்தது.
 ஆனால் அதே மக்களாட்சி, மூன்றாவது முறை பேரலையாக அமெரிக்காவிலும், பிரான்சிலும் பெரிய அரசாங்கத்தை கட்டமைத்து மாபெரும் மக்கள் சக்தியாக 18-ஆம் நூற்றாண்டில் உருவானது. இந்த மக்களாட்சிப்படுத்தும் உலக நிகழ்வு ஒரு நேர்க்கோட்டில் நடைபெற்றதல்ல. மக்கள் போராட்டங்கள், உலகத்தில் எத்தனையோ வகையான மக்களாட்சி முறைகளை உருவாக்கியுள்ளன. இதன் மையப்புள்ளி அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவது என்பதே.
 "மக்களை மக்களே ஆள்வது', "அதிகாரத்தை மக்கள் கையாள்வது' என்றெல்லாம் மக்களாட்சியைப் பற்றி விளக்கினாலும், அது உலகத்தில் எடுத்த அவதாரங்கள் அதிகம். பலவகையான மக்களாட்சிகளை மானுடம் கண்டுள்ளது. இதில் மிக முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மக்களாட்சிக்கான போராட்டங்கள் பற்றியே. மனித சமூகம் மிகப் பெரிய விலை கொடுத்துத்தான் மக்களாட்சியைப் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் அது சிதிலமடைய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
 அடிக்கடி பலரும் "சும்மா வரவில்லை சுதந்திரம்' என்று கூறுவார்கள். அது உண்மைதான். நாம் அதை ஒரு விலை கொடுத்து வாங்கி இருக்கின்றோம். சுதந்திரப் போராட்ட வரலாற்றை விளக்குவதுபோல் மக்களாட்சிப்படுத்த போராடிய வரலாற்றை யாரும் விளக்குவதில்லை. எனவேதான் மக்களுக்கு சுதந்திரம் பற்றிய புரிதல் வந்தது போல் மக்களாட்சி பற்றிய புரிதல் இன்றும் வரவில்லை.
 அரசியல் அறிஞர் ராபர்ட் டால், "ஒரு சமூகத்தில் மக்களுக்கு எந்த அளவு மக்களாட்சி பற்றிய புரிதல் உருவாகின்றதோ அந்த அளவுக்கு அந்த சமூகத்தில் மக்களாட்சி மாட்சிமை பெறும்' என்கிறார். ஒரு சிறிய நகரத்தில் ஆரம்பித்த மக்களாட்சி, இன்றைக்கு 138 கோடி மக்கள்தொகை கொண்ட பெரிய தேசத்தில் பிரதிநிதித்துவ ஜனநாயகமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த முறையில் எவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும் மக்களின் எண்ணத்திற்கேற்ப ஓர் ஆட்சி அமைக்கப்பட்டு விடுகிறது. அது, சாதாரண மனிதனுக்கு "என் வாக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்' என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது.
 அத்துடன் அது நின்று விட்டால், அது தேர்தலை மட்டுமே மையப்படுத்திய ஒரு மக்களாட்சியாகத் தேங்கி நிற்கிறது என்று பொருள். இன்று உலகில் மிகப்பெரிய சக்தியாக விளங்கக்கூடிய பல இயக்கங்களில் மக்களாட்சிக்கான இயக்கங்கள்தான் முன்னிலை பெற்றுள்ளன. காரணம் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் என்ற மந்திரச் செயல்பாடுதான். மூன்றாவது அலையில் உருவான மக்களாட்சிக்கு வித்திட்டவர்களின் மக்களாட்சி பற்றிய பார்வையைப் பார்த்தால், மக்களாட்சியில் மானுடம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பது புரியும்.
 எனவேதான், மக்களாட்சி குறித்த சிந்தனையாளர்கள், "மக்களுக்கு மக்களாட்சி பற்றி முழுமையான புரிதலை ஏற்படுத்தவில்லை என்றால், தலைவர்கள் மக்களை மேய்க்க ஆரம்பித்து விடுவார்கள். மக்களுடன் பயணித்து, மக்களுக்கான ஆட்சியைத் தந்து மக்களை அவர்களின் பங்களிப்போடு மேம்படுத்தாமல், மக்கள் மீது அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள்' என்று கூறினர்.
 இந்த விளக்கங்களையெல்லாம் தாண்டிய ஓர் உன்னத அமைப்பைத்தான் பிரான்ஸ் நாட்டுச் சிந்தனையாளரான ரூசோ, தான் எழுதிய "சமூக ஒப்பந்தம்' என்ற நூலில் விவரித்துள்ளார். இந்த விளக்கத்தை அந்தப் புத்தகத்தில் கூறியமைக்காக அந்தப் புத்தகத்தை எரித்தார்கள்; ரூசோவையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கொதித்தனர். நேரடி ஜனநாயகம்தான் உன்னத மக்களாட்சி. அதற்கு நிகராக எந்த ஓர் அமைப்பும் இல்லை என்ற கருத்தை முன் வைத்தார் ரூசோ.
 அது மட்டுமல்ல, பிரதிநிதித்துவ மக்களாட்சியில் இன்று கூறப்படும் குறைகளை அவர் அன்றே கூறிவிட்டார். தேர்தலின்போதுதான் மக்களை மதிப்பார்கள், அதன் பிறகு மக்கள் பிரதிநிதிகளே முதன்மைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்களின் பிரச்னைகளை எந்தப் பிரதிநிதியாலும் பொதுமக்கள்போல் எடுத்துரைக்க முடியாது என்பதை ஆழமாக விளக்குகிறார். அன்று அவர் கண்ட கனவுதான் இன்று நாம் காணும் புதிய உள்ளாட்சி அரசாங்கமும், கிராமசபையும்.
 1960-களிலே "புதிய இடது' என்ற அமைப்பினர், "பங்கேற்பு ஜனநாயகம்' மட்டுமே இன்றைய பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும் என்று கூறினர். இந்தியாவில், மகாத்மா காந்திதான் பிரதிநிதித்துவ மக்களாட்சிக்கு மாற்றாக பங்கேற்பு மக்களாட்சியை நிறுவ முனைந்தார். அந்த மக்களாட்சியில் "மக்கள்' என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கமாக "கடையன்' என்ற சொல்லை வரையறுத்துக் கொண்டார்.
 "கடையனை உள்ளடக்கிய மக்களாட்சி, மக்களுக்கு அருகில் இருக்க வேண்டும். அதுதான் வலிமை பெற்றதாக இருக்கும்' என்று வலியுறுத்தினார். "மக்கள்' என்ற சொல்லுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான விளக்கத்தைத் தந்துள்ளனர் சிந்தனையாளர்கள்.
 ஒரு காலத்தில் சொத்து என்பது முதன்மைப்படுத்தப்பட்டது. அடுத்த நிலையில் கல்வி முதன்மை ஆனது. இப்படி பல்வேறு தகுதிகளை வைத்துத்தான் மக்களை அடையாளப்படுத்தினர். எனவேதான் மக்கள் பங்கேற்பு என்றால் எந்த மக்கள் பங்கேற்பு என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இன்றும்கூட அந்தக் கேள்வி எழுப்பப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
 இன்று சமூகம் அடைந்துள்ள மாற்றங்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் நம்மை வியக்க வைக்கின்றன. மனிதர்கள் சமூகம் என்ற கட்டமைப்பிலிருந்து, தன்சுகம் தேடும் மனிதர்களாக இயங்க ஆரம்பித்து விட்டனர்; நுகர்வு கலாசாரத்தில் தோய்ந்து விட்டனர். அரசாங்கத்தை, உயர்ந்த இடத்தில் இருக்கும் எஜமானனாக எண்ணிக்கொண்டு, அரசாங்கத்தின் குடிமக்களாக வாழ்வதில் ஒரு சுகத்தைக் கண்டனர்.
 இதைக் கலைத்து, பொறுப்பு மிக்க குடிமக்களாக மாற்றி, ஆளுகையிலும் மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் மக்களைப் பங்கேற்கச் செய்து, அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக உருவாக்க வந்த உள்ளாட்சிதான் இன்று நாம் பார்க்கும் உள்ளாட்சி அமைப்புகள்.
 இந்தியச் சூழல் இன்று நமக்குக் கூறும் பாடம் என்னவென்றால், மக்களாட்சிக்கான மக்கள் தயாரிப்பு பெருமளவு செய்திட வேண்டும். அதாவது, தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா எப்படி அரசியல் சாசனச் சட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று அவர்களிடையே புரிதலை ஏற்படுத்தினாரோ அப்படிச் செய்ய வேண்டும்.
 நம் நாட்டில் உள்ளாட்சிக்கு இருக்கும் சக்தி, ஆற்றல் பற்றி மக்களிடம் முழுப் புரிதல் இருந்தால் மிகப் பெரும் மாற்றங்களை, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடித்தட்டு மக்கள் பெற்றிருக்கக் கூடும். அன்றைய புரிதல் பெற்ற தலைவர்கள் செய்திருக்கக்கூடிய மாற்றங்கள்தான், இன்று "உள்ளாட்சியை வலுப்படுத்துங்கள்' என்ற முழக்கம் மேலோங்கக் காரணமாக இருக்கின்றன.
 இவர்கள் நடத்துகின்ற கிராமசபைகளில் ஒரு அறிவார்ந்த விவாதத்தைக் காண முடிகிறது. ஒருவருக்கொருவர் கலந்து பேசி பிரச்னைகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து முடிவுகள் எடுக்கின்றார்கள். இவர்கள்தான் மக்கள் கூடலை ஆத்ம சந்திப்புக்களாக மாற்றி பொதுமக்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றுகின்றார்கள். அவர்கள் பேசுகின்ற மொழியில் வன்மம் இல்லை; பொய் இல்லை; புரட்டு இல்லை; வசவு இல்லை. ஆனால், அதில் அன்பு இருக்கிறது; கருணை இருக்கிறது; உணர்வு இருக்கிறது; ஒற்றுமை இருக்கிறது; பண்பு இருக்கிறது; பாசம் இருக்கிறது.
 அங்கு கடைநிலையில் வாழும் மனிதனின் கேள்விக்கு மரியாதையுடன் பதில் அளிக்கப்பட்டு அந்த மனிதன் மதிக்கப்படுவது என்பதுதான் அடித்தட்டு ஜனநாயகத்தின் அழகு. இங்கு பொதுமக்கள் பொறுப்புணர்ந்த குடிமக்களாக வாழ்கிறார்கள். இவர்கள் தாங்கள் வாழும் இடங்களில் இணக்கமான சமூக உறவைக் கட்டமைக்கின்றார்கள். அதேபோல் இவர்கள் இயற்கையின்மேல் மாறா அன்பு கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர்.
 இவர்களின் கூட்டுக்கனவுதான் இவர்கள் வசிக்கின்ற இடங்களின் மேம்பாட்டுச் செயல்பாடுகள். உள்ளாட்சி என்பது மக்களுக்கும் தனக்கும் உயிரோட்டமுள்ள தாய்- மகன் உறவுமுறை. இதுதான் மக்களாட்சியின் அழகு; இதுதான் மக்களாட்சியின் உன்னதம். எனவே மக்களாட்சியின் அழகு என்பது நம் நாட்டின் மரபுப்படி ஆன்மாவில் செயல்படுவது.
 மக்களாட்சியின் அழகு என்பது மக்களின் குரலுக்கு செவிமடுத்துச் செயல்படுவது. இந்தச் செயல்பாடுதான் ஒரு சமுதாயம் உன்னதமாக விளங்க உதவியாக இருக்கும். அதுதான் மக்களாட்சியின் அழகு.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT