பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி மரணம்' காலையில் அலுவலகம் வந்து முகப்புப் பக்கத்தை திறந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவில் இருந்த ஜோதிலட்சுமி இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரது வயது 68, இன்று பிற்பகல் 4 மணி அளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது தகனம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பெரிய இடத்துப் பெண்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜோதிலட்சுமி தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனது நடனம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகையானார்.
எழுபதுகளில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தொடர்ந்து ஜோதிலக்ஷ்மிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பல ஹிட் பாடல்கள் அவரது நடனத்துடன் வெளிவந்தன. நடிப்பு மட்டுமன்றி இவர் தனது சகோதரியும் நடிகையுமான விட்டலாச்சார்யா படப் புகழ் ஜெயமாலினியுடன் இணைந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். இவரது நடிப்பில் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருக்கும் சில பாடல்களில் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் வரும் ’கட்டொடு குழலாட ஆட’ பாடலும், அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம் பெறும் ’காலத்தை வென்றவன் நீ’ பாடலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் முதலில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானாலும் பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாக மாறும் சூழல் வந்த போதும் மனம் கலங்காது தைரியமாக தனது வாழ்வின் சவாலை ஏற்றுக் கொண்டு செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கிணங்க வெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. நடிப்பு தவிர தங்களது தன்னம்பிக்கை மற்றும் திறமைக்காக ஜோதிலட்சுமி, ஜெயமாலினி சகோதரிகளைத் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் பலர் பல சூழல்களில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது படங்களில் பெரும்பாலானவற்றில் ஐட்டம் டான்சராக தோன்றினாலும் நடிகை 'சில்க் ஸ்மிதா' போல ஜோதிலக்ஷ்மியும் பெண்களுக்கும் பிடித்த நடிகையாகவே நீடித்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்கைக் கதை ‘டர்ட்டி பிக்ச்ஸர்’ என்ற பெயரில் இந்தியில் வெளியானதைப் போல தெலுங்கில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை ஷார்மி நடிக்கும் 'ஜோதிலட்சுமி' எனும் திரைப்படம் ஜோதிலக்ஷ்மியின் வாழ்க்கை சம்பவங்கள் சிலவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. எழுபது, எண்பது கால கட்டங்களில் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக கோலோச்சி விட்டு பின்னர் சில காலம் தமிழில் அவரை காணமுடிந்ததில்லை.
மறுபடியும் அவரை திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாலா. அவரது 'சேது' திரைப்படத்தில் ஜோதிலக்ஷ்மியின் நடனத்துடன் கூடிய "கானாக் கருங்குயிலே' எனும் பாடல் இப்போதும் சூப்பர் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. ஜோதிலட்சுமி பழம் பெரும் நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் உறவினர் என்பதும் நடிகை ஜோதிமீனா ஜோதிலக்ஷ்மியின் மகள் என்பதும் உபரித் தகவல்கள். சமீப காலமாக சன் தொலைக்காட்சியில் பிற்பகலில் ஒளிபரப்பப்படும் "வள்ளி' தொடரில் ஜோதிலட்சுமி நடித்துக் கொண்டிருந்தார். திரையுலகில் அறிமுகமான காலத்தில் இருந்து இன்று அவரது இறப்பு வரையிலும் ஒரே விதமான தோற்றப் பொலிவில் இருந்ததால் வயதான பின்னரும் அவரது சுறு சுறுப்பான நடிப்பு அனைவரையும் கவர்வதாகவே இருந்தது. இந்த நிலையில் அவரது திடீர் மரணம் ஜோதிலட்சுமி ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.