சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் டோக்கன்: மோடி எதிர்பார்த்த கேஷ்லெஸ் எகானமி!
சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நான்கு வழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 என தாள்களில் அச்சடிக்கப்பட்ட கூப்பன் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
விராலிமலை: சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நான்கு வழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 என தாள்களில் அச்சடிக்கப்பட்ட கூப்பன் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த நவ. 8-ம் தேதி நள்ளிரவு முதல் இந்திய ரூபாயில் அதிக மதிப்பு கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், நுகர்வோர் வைத்திருக்கும் இருப்பு பணத்தை அந்தந்த பகுதி வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பணப்புழக்கம் வெகுவாக குறைந்ததோடு, தங்கள் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தை எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் ஏடிஎம் வாசல்களில் கால்கடுக்க வரிசையில் காத்திருக்கும் நிலையும், பல்வேறு ஏடிஎம்களில் பணம் இல்லாமல் பூட்டிகிடக்கும் நிலையே தமிழகம் மட்டுமல்லாது தேசத்தின் பிறப்பகுதிகளிலும் தற்போது வரை நிலவி வருகிறது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணப்புழக்கம் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளிடம் சுங்கவரி வசூலிக்கும் போது சில்லறைக்கு பதிலாக ரூ.5 மதிப்புடை கூப்பன்கள் மீதி சில்லறையாக வழங்கப்படுகிறது. அந்த கூப்பன்களில் நான்கு வழிச்சாலை வரைபடமும் பார்கோடும் இந்திய ரூபாயில் உள்ளது போல வரிசை எண்னும், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை(என்எச்ஏஐ) என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இக்கூப்பன் செல்லுபடியாகும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே போல் குறைந்த அளவு மதிப்பு கொண்ட ரூ, 10, ரூ, 20, ரூ, 50 மதிப்பில் கூப்பன்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் அவைகள் சுங்கவரி கட்டணத்திற்கு மீதி சில்லறை பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவலை சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறினார்.
இப்படியாக பெறப்படும் கூப்பன்களை அடுத்த சுங்கச்சாவடியில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாகன ஓட்டிகளிடம் கூறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இது ஒரு வகையில் சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் வழிமுறை என்று நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்நிலை தொடரும் போது பின் வரும் நாட்களில் முதலில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள தேநீர் கடைகளில் டீ, வடை உள்ளிட்ட உணவு பொருள்களுக்கு பணத்திற்கு பதிலாக இந்தக் கூப்பன் ஏற்றுக்கொள்ளப்படும். அதுவே தொடர்ந்து, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்கள் என பிற கடைகளில் சில்லறைத் தட்டுப்பாட்டிற்கு மாற்றாக இந்தக் கூப்பன்கள் பணமாக புழங்கத் துவங்கும் என்பது நிதர்சனமான உண்மை.
கேஷ்லெஸ் எக்கனாமி என்பது மாறி கூப்பன்ஃபுல் எக்கனாமியாக மாறும் சூழல் உறுவாகிவிடும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறி வெளியே மாற்றுப் பணம் உருவாகுவது தேசத்திற்கு நல்லதல்ல.
சில்லறை தட்டுப்பாட்டை போக்க 5 ரூபாய் கூப்பன் வழங்கும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் நடவடிக்கை ரிசர்வ் வங்கிக்கு எதிராக உள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.