பரமக்குடி (தனி)...! நூல் சேமிப்புக் கிடங்கு தேவை!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி தொகுதி பல ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாக உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி 3 முறையும், தமாகா, சுயேச்சை தலா ஒரு முறையும், திமுக 4, அதிமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
பரமக்குடி நகராட்சி கடந்த 1964-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் கரையில் இந்தத் தொகுதி அமைந்திருப்பது சிறப்பு.
இங்கு நெசவு முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
கனவுத் திட்டங்கள்.... பரமக்குடியில்
சாயத் தொழில்சாலையும், நூல் சேமிப்புக் கிடங்கும் அமைக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்ட காலக் கோரிக்கை. இதேபோல, பரமக்குடி நகர் முழுவதும் புதைச்சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அளிக்கும் முக்கிய வாக்குறுதிகளாக இடம் பெறுகின்றன. ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் பரமக்குடி மக்களின் நீண்ட நாள் கனவாகவே உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மு.மலைச்சாமி கூறியதாவது:
பரமக்குடி நகரில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் 27 இடங்களில் வைகை ஆற்றில் கலக்கிறது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் புதை சாக்கடைத் திட்டம் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை.
இதேபோல, சாயத் தொழில்சாலை அமைத்தல், நூல் சேமிப்புக் கிடங்கு அமைத்தல் போன்ற நெசவாளர்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செவிசாய்க்கவில்லை.
நகரின் மையப் பகுதியில் பழைய வேந்தோன்றி கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயை முறையாகச் சீரமைத்து, நகரின் கழிவு நீரை இணைத்து சுத்திகரிப்பு செய்து, மறுசுழற்சி மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. இதையெல்லாம் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக கூறுகின்றனவே தவிர, நிறைவேற்றுவதற்கு முனைப்புக் காட்டுவதில்லை. இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சியாவது இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது பரமக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மந்திவலசை. வைகை ஆற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது சற்று ஆறுதலான விஷயம் என்றார் அவர்.