31.3.1976: சென்னை - விஜயவாடா மின் ரயில் பாதை திட்டம் 1979-ல் பூர்த்தியடையும்
சென்னை - விஜயவாடா மின் ரயில் பாதை திட்டம் பற்றி...
புதுடில்லி, மார்ச். 30 - சென்னை - விஜயவாடா ரயில் பாதையை மின்சாரமயமாக்கும் திட்ட வேலை முன்னேறி வருகிறது என்றும், இந்தத் திட்டம் 1979-ம் ஆண்டில் பூர்த்தியடையும் என்றும் லோகசபையில் இன்று ரயில்வே துணை அமைச்சர் முகம்மது ஷாபி குரேஷி தெரிவித்தார்.
குண்ட்லா - டில்லி மின்சார ரயில் பாதைத் திட்டம் இவ்வாண்டு இறுதியில் பூர்த்தியடையும் என்றார்.
ஆசிரியர் ஓய்வு வயது: ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை, மார்ச் 30 - ஓய்.ஆர். குருஸ்வாமி தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்றுக் கொண்டு, சென்னை ஹைகோர்ட்டு நீதிபதி வி. ராமஸ்வாமி 1973 (ஆம் ஆண்டு) டிசம்பர் மாதம் 10 (ஆம் தேதி) பள்ளிக்கூட கல்வி டைரக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
Advertisement
Advertisement
மனுதாரர் குருஸ்வாமி 1942ல் பள்ளிக் கூட ஆசிரியராக கல்வித் துறைப் பணியில் சேர்ந்தார். 1963 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் ஓய்வு வயது 55 லிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. 1970 பிப்ரவரி மாதம் மனுதாரர் "தற்காலிகமாக' மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு இருக்கையில், 1970 ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதியன்று அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் 55 வயது நிரம்பியவுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 1969 ஜூன் மாதம் 12 ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின்படி மாவட்டக் கல்வி அலுவலரின் ஓய்வு வயது 58லிருந்து 55ஆகக் குறைக்கப்பட்டிருந்ததால், மனுதாரர் ஓய்வுபெற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுதாரர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்றுக் கொண்டு நீதிபதி ராமஸ்வாமி தீர்ப்பளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் தான் முறைப்படி வைக்கப்படவில்லை என்றும், அப்பதவியை தற்காலிக முறையில் வகித்து வந்ததாகவும், போதனைத் துறையில் ஆசிரியராக அல்லது தலைமை ஆசிரியராக உள்ள தன்னுடைய பதவியைக் கொண்டே ஓய்வு வயது சம்பந்தமான உரிமையை கணிக்கவேண்டுமேயன்றி தன்னுடைய தற்காலிக மாவட்ட கல்வி அலுவலர் பதவியைக் கொண்டு அல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மனுவில் கூட, தன்னை மாவட்ட கல்வி அலுவலராக உயர்த்துமாறு தான் கோரவில்லை என்றும், தலைமை ஆசிரியர் பதவி காலியில்லாததால் கல்வி அலுவலர் பதவிக்கு உயர்த்தப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஒருவர் ஸ்திரமான பதவியை வகிக்கும் போது, அவரது உரிமைகளும், சலுகைகளும் அந்த ஸ்திரமான பதவிக்குரிய விதியைக் கொண்டே நிர்ணயிக்கப்பட வேண்டுமேயன்றி, அவர் தற்காலிகமாக வகிக்கும் பதவியைக் கொண்டு அல்ல. அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னமே தலைமை ஆசிரியர் பதவிக்குப் போக விருப்பம் தெரிவித்து விட்டதால் 58 வயது நிரம்பும் வரையில் உத்தியோகத்தில் இருக்க உரிமை உண்டு. மனுதாரர் கெஜட் பதிவில்லா தலைமை ஆசிரியராக நடத்தப்படுவாரென்பதே நிலை என்று நீதிபதி கூறி பள்ளிக்கூட கல்வி டைரக்டர் உத்தரவை ரத்து செய்தார்.
31.3.1976: The Chennai–Vijayawada electrified railway line project will be completed in 1979.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.