சிறப்புக் கட்டுரைகள்

புத்தமொழி

தினமணி

'புத்தா' என்றால் என்ன அர்த்தம்? புத்தா என்றால் 'விழிப்புணர்வு கூடிய மதிநுட்பம்'. புத்தி இருக்கிறதா என்று கோபத்தில் எரிந்து விழுகிறோம். புத்தா உனக்குள் இருக்கிறதா என்று கேட்டால், திட்டப்படுகிறவரும் அமைதியாகி புன்சிரிப்பை உதிர்க்கலாம்.

மூலவார்த்தையான 'புத்' என்பதற்கு பல பரிமாணங்கள் இருக்கிறது. அது ஒரு கவித்துவமான சம்ஸ்கிருத வார்த்தை. குறைந்தபட்சமாக ஐந்து பொருள்களையாவது 'புத்' என்னும் சொல்லுக்கு உணரலாம்.

முதலாவதாக தன்னைத் தானே விழித்தெழ செய்வது; தூங்காமல் இருந்தால் விழிப்புணர்வை அடைந்து விட்டதாக எண்ணும் கற்பனையை உடைத்தெறிவது என்று கொள்ளலாம். பதினேழு வயதில் என்னிடம் ஒருவர் 'உனக்கு மெட்சூரிடி போதாது' என்றபோது கோபம் வந்தது. இன்று யாராவது சொன்னால், பரிபக்குவம் இன்னும் எய்தவில்லை போலிருக்கிறது என்பதை அறிந்து வைத்திருப்பது 'புத்'.

நான் கண்களை திறந்து வைத்துக் கொண்டு, பரந்த மனதுடன் அனைத்தையும் பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டாலும், அவ்வாறுதான் விழிப்புணர்வுடன் இருக்கிறேன் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. காலையில் வேலைக்காக எழுந்துவிட்டு, குளித்து, உடைமாற்றி, நடக்கும்போது புத்தி விழித்துதான் இருப்பது போல் தோன்றுகிறது. புத்தரை பொருத்தமட்டிலும் இல்லை.

மனத்திற்குள் ஆயிரக்கணக்கான கணக்குகளையும் கனவுகளையும் எண்ணிக்கொண்டிருக்கும் வரை நான் விழிப்படையவில்லை.

எதிர் ப்ளாட்·பாரமில் ரயிலுக்காக நிற்பவள் கிடைத்தால் எப்படியிருக்கும்? இன்று மேனேஜர் என்னுடைய வேலையை பாராட்டினால் நன்றாக இருக்குமே! அடுத்த வாரம் எழுதப்போகும் பரீட்சையில் தெரிந்த கேள்விகளாக வரவேண்டுமே?

கண்கள் திறந்திருக்கிறது. உள்ளளியோ தூக்கத்தில் புதைந்திருக்கிறது. மனக்கண் திறந்திருக்கவில்லை. தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவன் போல் நடந்து கொள்கிறேன் என்கிறார் புத்தர்.

'நான் யார்' என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. மெய்ம்மை நிலையை தரிசிக்க முடியவில்லை. சிந்தனைகள் நிறைந்த புத்தி எவ்வாறு நிர்மலமாக விழிப்புணர்வை அடையமுடியும் என்று வினா எழுப்புகிறார்.

மேகமூட்டம் நிறைந்திருந்தால் சூரியனின் வெப்பத்தை உணர முடியாது. கடுங்குளிரில் கூட மேகமூட்டமான தினம் என்றால் குளிர் மிதமாக இருப்பதை உணரலாம். மூளையில் சூழ்ந்திருக்கும் கருத்துக்களையும் நினைவுகளையும் விலக்கினால்தான் சூரியன் தெரிந்து சுட ஆரம்பிப்பார். நிகழ்வதை உணர்வதே புத்திகூர்மை. கடந்தகாலத்தின் சுவாரசியங்களில் உலாவுவதும், எதிர்காலங்களின் பயங்களைத் துழாவுவதுமே என்னுடைய எண்ணங்களை ரொப்பியிருக்கக் கூடாது.

இறந்தகாலங்களிலும், எதிர் கால நிகழ்வுகளிலும் திளைப்பவன் 'புத்' ஆக முடியாது. இங்கே, இப்பொழுது, இந்த நிமிடத்தை உணர்பவனே யதார்த்தவாதி.

சன் செய்திகளை இரவு ஒன்பது மணிக்கு வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அணைக்க மறந்த அடுப்பு, பற்றிக் கொண்டு வீடு தீப்பிடிக்கிறது. மகளுக்கு ஆபத்து. அனைவரும் வெளியேற வேண்டும். தீயணைப்புப் படையை கூப்பிட வேண்டும்.

நான் முழுவதுமாக விழித்திருக்கிறேன்.

அந்த ஷணத்தில் பழைய திண்ணை அனுபவங்கள் மறந்து போகிறது. முதன் முதலாக காரோட்ட கற்றுக் கொடுத்தபோது 'என்ன வண்டி ஓட்டுகிறாய்' என்று மனைவியை செல்லமாய் சலித்துக் கொண்டது, ஹ¥டர்ஸ் உணவகத்தில் நண்டுகளை விண்டு சுவைக்க கிட்டத்தட்ட மடியில் உட்கார்ந்து கொண்டு கற்றுக் கொடுத்த பரிமாறுபவளையும் மனம் நினைக்க மறுக்கிறது.

வீடு பற்றிக் கொண்டு எரியும்போது, வேறு கனவுகள் இடையூறு செய்வதில்லை. அடுத்த நாள் கொடுக்க வேண்டிய டி.பி.ஆர். ரிபோர்ட், மதிய உணவுக்கு செல்லப்போகும் சைனீஸ் உணவகம் என்பதெல்லாம் பொருட்டாகவே தெரியவில்லை. இந்த விநாடி செய்யவேண்டியவை மட்டுமே முக்கியமாகிப் போனது.

'புத்' என்பதன் முதல் அர்த்தம் இதுதான்.

ஒவ்வொரு மணித்துளியையும் பேராபத்தில் கழிக்கும் தருணமாகக் கருவது. துயிலைக் கலைத்துக் கொள்வது. யதார்த்தத்தை அறிவது.

நெருப்பின் பிடியில் சிக்கியிருப்பதை போல், உத்வேகத்துடன் உண்மைநிலையை நோக்கவேண்டும். விழிப்புடன் நோக்குவதால் நுட்பம் விளங்கும். நுண்ணிய பார்வை விடுதலையை நல்கிறது. நுண்ணிய தரிசனம் பொய்யாபிரஞ்ஞையை புத்தனுக்கு தருகிறது.

'புத்' என்னும் சொலின் அடுத்த பொருள் கவனித்தல், தெரிந்து கொள்ளுதல், அறிந்ததை அடையாளம் காணுதல். பொய்யை பொய் என்று கண்டு கொண்டவன் புத்தர். அகத்தில் இருந்து சொல்வதை உண்மை என்றும் பகுத்து அறிபவன். பொய்யை கட்டுடைத்து, கண்டுபிடிப்பதன் மூலமே, உண்மைப்பொருளை அறியமுடியும்.

எனது நம்பிக்கைகளுடனேயே கண்மூடியாக வாழ்வை கடத்தக் கூடாது. என்னுடைய மாயை சூழலிலேயே ரசித்து லயித்து விடக்கூடாது. முன்முடிவுகளைத் தீர்மானித்தபின் பற்றற்ற தீர்ப்புகளுக்கான பயணங்களில் ஈடுபடக் கூடாது.

இதுதான் 'புத்' என்னும் வார்த்தைக்கான இரண்டாவது அர்த்தம். போலிகளை கண்டு ஏமாறாமலும், உண்மையானதை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வதும் 'புத்'.

புறத்தே இருக்கும் மெய்ம்மை எளிதில் உணரப்படுகிறது. உண்மையில், இப்பொருளிலேயே தற்போது இதை நான் பயன்படுத்துகிறேன். இரண்டும் இரண்டும் நான்கு என்று எனக்குத் தெரியுமானால், இவ்வறிவு எல்லா தருணங்களிலும் பொருத்தமானதாக இருக்கிறது. ஒரு முறை நான் அறிந்துவிட்டால், அதை நான் மூளையின் ஆழத்தில் போட்டு வைத்திருக்கிறேன். மீண்டும் இந்தக் கணக்குகளை போட்டுப் பார்த்து நேரத்தை வீணடிக்க முயற்சிப்பதில்லை. மனதில் அது ஒரு நம்பத்தக்க பொருளாகிறது. எப்பொழுது தேவையோ, அப்பொழுதெல்லாம் அதை எடுத்து நான் கையாளலாம்.

ஆனால் சமயம் சார்ந்த மெய்ப்பொருள் அத்தகையது அல்ல. மெய்ஞானத்தை ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கைக்கேற்ப புதிப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. என்னுடைய அனுபவங்களை ஊடுருவி சென்று மனப்போராட்டங்களை மீறி உண்மை நிலைநாட்ட வேண்டும்.

ஒரு கற்றறிந்த இறைமையியல் வல்லுநர், அறிவு சார்ந்த இறைமையியலில் உள்ள மெய்ம்மைகல் எனக் கூறப்படும் அமைத்தையும் அறிந்திருக்கலாம். இருப்பினும் இறைவன் அவருள்ளே இறந்து விட்டிருக்கலாம் அல்லது என்றுமே வாழ்ந்திராது இருக்கலாம். ஆனால் பொதுவான இறைமையியலைப் பற்றி ஒன்றுமே தெரியாத கல்வி அறிவற்ற ஒரு குடியானவர், தன்னுடைய கோட்பாடுகளின் தத்துவக் கூறுகளைப் பற்றி கோர்வையாக வாதிட முடியாதவராக, விளக்க முடியாதவராக இருக்கலாம். இருப்பினும் தான் சமயப்பற்றுடன் இருப்பதில் வெற்றி பெற்றவராக இருக்கலாம்.

தனிப்பட்ட மனிதனுக்கு, இறுதியில், மார்க்கம் என்பது சமயத்தோடு ஒன்றி இருத்தலே ஆகும். அவன் மெய்ம்மையில் வாழ்கிறான். மெய்ம்மை காண்பது அடிப்படையில் அறிவோடு தொடர்புடையது அல்ல என்பதாய் இருப்பதால், நடைமுறைகளினாலும், வாழ்க்கைமுறைகளினாலும், ஞானம் அடைந்திருக்கிறானா இல்லையா என்பதைக் காணலாம். சூத்திரங்களைப் பற்றி சாமர்த்தியமாக வாதிப்பதால் அறிவின்பாற்பட்ட மெய்ம்மை மட்டுமே அறியமுடியும்.

'உண்மை என்பது என்ன?' இந்தக் கேள்வி முதல் முறையாக புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டது. இன்றுவரையில் இதற்கு பதில் இல்லை. நாம் காணும் அனைத்தும் உண்மை. ஆனால், 'கண்ணால் காண்பது பொய்' போல் எதுவுமே திட்டவட்டமானதல்ல.

நிகழ்காலம் என்பது மிகமிகத் துல்லியமான ஒரு புள்ளி. அதன் மீது கடந்த காலமும், எதிர்காலமும் முட்டுகிறது. பிறக்காதவரையில் ஒருவருடைய வாழ்க்கை குறைவற்றதாகவும், நிரம்பியும் முழுமையாகவும் இருக்கிறது. வாழ்நாள் என்னும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டவுடன் குறைந்து போகத் தொடங்குகிறது.

எது உண்மை? 'அவர் உயிரோடிருக்கும் மனிதர்' அல்லது 'அவர் இறந்து கொண்டிருக்கும் மனிதர்'?

மனிதனின் புலன்களாலும் அறிவாலும் அடையும் முன்னேற்றத்தைப் பொருத்தே உண்மை அமைந்திருக்கிறது. உண்மை என்று மாறாமல் இருக்கும்... இறைவனைப் போலவே! மாறுவது நாம்தான்.

அறிவின் அடிப்படை புலன் என்பதை ப்ளாட்டோ ஒதுக்கினார். உண்மையின் அடிப்படையாக அறிவை முன்வைத்தார். அதனை ஒப்புக்கொண்ட அரிஸ்டாட்டிலும் தர்க்கவாதத்தை முன்னுக்குக் கொண்டு வந்தார்.

இரண்டு மெய்க்கோள்கள். ஒரு வாத முடிவு. மூன்று கூறுகள். அறிவின் வாதமுடிவுகள் நிச்சயமற்றவைகளாக இருக்கின்றன. அறிவு மனிதனை உண்மைக்கு இட்டுச் செல்லும் என்பது ஐயத்திற்குரியது. தெளிந்த அறிவின் திட்டவட்டத் தன்மையை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார் டெஸ்கார்டஸ்.

என்றும் நிலைத்திருக்கும் எங்கும் வியாபித்திருக்கும் பரவலாக பயன்பாட்டுக்குரிய செயல்பாடுகளே உண்மையாகும். என்றும், எப்பொழுதும், எங்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய, உபயோகப்படுத்தக்கூடிய ஐடியா என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அறுதியிட்டு நிச்சயமாக சொல்லமுடியாது. முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால், உண்மை என்பது நிகழக்கூடிய ஒன்று.

சமூகம் கொண்டிருந்த நம்பிக்கையினால் 'அந்தக் காலத்தில்' உண்மையாக இருந்தது என்று சொல்வது கற்றறிந்த அபத்தமாகும். அது பயனுள்ள தவறு. உண்மை அல்ல.

நாம் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மையானது, நமக்குத் தெரிந்தவற்றுள் எல்லாம் 'மிகப் பயனுடைய தவறுகளின் வடிவம்' என்கிறார் நீட்ஷே.

கடந்த கால தீர்ப்புகளை முன்னுதாரனமாகக் கொண்டு நீதிபதிகள் தங்களின் நியாயங்களை தீர்ப்பெழுதுவார்கள். ஆனால், எல்லா வழக்குகளிலும் இவ்வாறே பின்பற்றாமல், முதல்முறையாக மாற்றியும் எழுதுவார்கள். இறந்த காலத்தில் ஒழுங்கு முறையாக நடந்தவை எதிர்காலத்திலும் அப்படியே தொடரும் என்ற சாத்தியக்கூறை நான் நம்பி இடர்ப்பாட்டில் நம்மை சிக்க வைத்துக் கொள்ள முடியாது.

உலகம் முழுக்கு பல்வேறு தரப்புகளையும் பல்சுவை மனிதர்களையும் கொண்டது. நதியின் ஓட்டம் போல் நொடிப்பொழுதில் மாற்றங்களை நிகழ்த்துகிறது. உண்மை மாறுபடும் தன்மையுடையதல்ல. இதனால், நம்முடைய தீர்மானிக்கப்பட்ட உண்மைகள் ஒருதலைபட்சமாகவும் நிலையுறுதியற்றதாகவும் இருக்கும்.

புத்தன் உண்மையானவன். மனிதன் சூழ்நிலைக்கைதியாகவும், காலத்திற்கு அடிமையாகவும் இருப்பான். காலத்திற்கு அப்பாற்பட்ட time-travelக்கோ, வெளிக்கும் அப்பாற்பட்ட அண்டநிலைக்கோ இன்னும் மனிதனால் பயணிக்க முடியவில்லை. எல்லைகளுக்கு அப்பால் உண்மை இருக்கிறது.

உருப்படியான பிழைகளைக் கொண்டு அவன் மனநிறைவு கொள்ள வேண்டும். காலம், வெளி, உணர்வு, புலன், அறிவு ஆகியவைகளைக் கடந்த இறைவன் என்னும் இயல் கடந்த மெய்ம்மையை புத்தன் அறிவான்.

நன்றி - பாஸ்டன் பாலாஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT