தானியங்கி என்று நம்பப்பட்ட கார்; இருக்கையைப் போல் வேடமணிந்த ஒருவரால் இயக்கப்பட்டது கேலிக்குள்ளாகி உள்ளது!
தானியங்கி கார் என்று நம்பப்பட்ட காரை, ஓட்டுநர் ஒருவர் காரின் இருக்கையைப் போன்று வேடமணிந்து மறைந்து அமர்ந்தவாறு காரை இயக்கியது சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகி உள்ளது.
கடந்த வாரம் ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார் ஒன்று அமெரிக்காவில் உள்ள ஆர்லிங்டன் நகரில் வளம் வந்து கொண்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், ஆனால், உண்மையில் ஓட்டுநர் ஒருவர் காரின் இருக்கையைப் போன்று வேடமணிந்து மறைந்து அமர்ந்தவாறு காரை இயக்கியது பின்னர் தெரிய வந்துள்ளது.
மனிதர்கள் இயக்காத போக்குவரத்து விதிகளுக்கேற்ப ஓடக்கூடிய தானியங்கி கார் ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் பல வருடங்களாக முயற்சித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள ஆர்லிங்டன் நகரில் ஒரு கார் இவ்வாறு வளம் வந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மக்களிடையே இது குறித்து ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக பல செய்தி ஊடகங்கள் இதைப்பற்றி விவரங்களைச் சேகரிக்க முயன்றனர்.
அந்த முயற்சியில்தான் இந்தத் தானியங்கி காரில் நடைபெற்ற மோசடி நிருபர் ஒருவரால் கண்டறியப்பட்டது. ‘என்பிசி வாஷிங்டன்’ என்கிற ஊடகத்தின் செய்தி சேகரிப்பாளரான ஆடம் டஸ் இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது 3500-க்கும் அதிகமானவர்களால் லைக் செய்யப்பட்டதோடு அதிகம் பேசப்பட்டும் வந்துள்ளது.
Advertisement
ஆடம் டஸ் கூறியுள்ளதாவது “கார் ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்குவதைப் படம் பிடிக்க அந்த காரின் அருகில் சென்றபோதுதான் தெரிந்த காரின் இருக்கையின் அடியில் மறைந்து அமர்ந்தவாறு ஒருவர் அந்தக் காரை இயக்குவது, அதைக்கண்டு முதலில் நான் அதிர்ந்து போனாலும் அந்த ஓட்டுநரிடம் கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே சில கேள்விகளை கேட்டேன், ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் சாலை சிக்னலையும் பொருட் படுத்தாமல் காரை அந்த நபர் அதி விரைவாக இயக்கிச்சென்று விட்டார்”. ஆனால், ஓட்டுநர் இருப்பதை காரின் கண்ணாடி வழியாக இவர் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.
இதுகுறித்து விர்ஜினியா டெக் போக்குவரத்து நிறுவனத்திடம் கேட்டதற்கு, கார் சோதனை ஓட்டத்தில் இருந்ததாகவும், அதை இயக்கிய ஓட்டுநர் அவர் அணிய வேண்டிய சீருடையையே அணிந்திருந்ததாகவும் பதிலளித்துள்ளனர்.