பிரபல விஞ்ஞானியான ஆப்ரஹாம் ஃப்ளெக்ஸனர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வன்ஸ்ட் ஸ்டடியின் டைரக்டராக இருந்தார். அவரைப் பற்றியும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பற்றியும் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இது:
ஒரு முறை ஐன்ஸ்டீன் கையில் ஒரு தடியுடன் இன்ஸ்டிடியூட்டிற்கு வந்தார். முந்தைய நாள் இரவில் அவர் காலில் முன் பகுதியில் காயம் பட்டிருந்தது.
'இது போல ஐந்தாறு முறை ஆகி விட்டது. அறையில் இருட்டில் நடந்ததால் வந்த வினை இது' என்று ஆதங்கத்துடன் ஐன்ஸ்டீன் ஃப்ளெக்ஸனரிடம் கூறினார்.
'இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் காலில் எலும்பு எதுவும் முறியவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள எக்ஸ்ரே வேறு எடுக்க வேண்டியதாய் இருக்கிறது' என்று அங்கலாய்த்தார் ஐன்ஸ்டீன்.
ஃப்ளெக்ஸனர் ஐன்ஸ்டீனை நோக்கி, 'ஆமாம், அறையில் விளக்கைப் போட்டுக் கொள்ள வேண்டியது தானே' என்று சாதாரணமாகக் கேட்டார்.
'அட, இது எனக்குத் தோன்றவில்லையே!' என்று வியப்புடன் கூவினார் ஐன்ஸ்டீன்!
இன்னொரு சம்பவம் :
ஐன்ஸ்டீன் பணியாற்றிய பல்கலைக் கழக அலுவலகத்திற்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அந்த போனில் பேசிய நபர் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் வீட்டு முகவரியை கொடுக்க முடியுமா? அவசரமாக செல்ல வேண்டும்' என்றாராம்.
அதற்கு பல்கலைக் கழக ஊழியர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முகவரியை தர மறுத்துவிட்டு, 'நீங்கள் யார் என்று முதலில் சொல்லுங்கள்’ என்று கேட்டார். பின் போன் செய்த நபர் தயக்கத்துடன், 'யாரிடமும் சொல்லி விடாதீர்கள். நான் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். என் வீட்டு முகவரியையே மறந்து விட்டேன்' என்றாராம் அந்த மாமேதை.