சென்னை: சென்னையில் இருந்து தெற்கு மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பெட்டிகளின் உள் சுவரில் விளம்பரங்களை அனுமதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையில் இருந்து தென்னக மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள், ரயில் பெட்டிகளுக்குள் வணிக ரீதியிலான விளம்பரங்களை தவிர்க்கவே முடியாத நிலை உருவாகிவிடும்.
முன்னதாக, வைகை மற்றும் லால்பாக் விரைவு ரயில்களின் உள் பக்க சுவர்கள் விளம்பரத்துக்கு வாடகை விடப்பட்டது. ஆனால் அந்த முடிவை மாற்றிக் கொண்டு ரயிலின் வெளிப்பகுதியில் மட்டும் விளம்பரம் செய்ய ரயில்வே அனுமதித்தது.
தற்போது தெற்கு ரயில்வே டிக்கெட் அல்லாத பிற வகைகளில் வருவாயைக் கூட்டும் நடவடிக்கைகளில் ஒன்றாக ரயில் பெட்டிகளுக்குள் விளம்பரம் செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரயில் பெட்டிகளுக்குள் விளம்பரம் செய்ய அனுமதிப்பதன் மூலம் ரூ.1.2 கோடி அல்லது ரூ.1.5 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக மதுரை மண்டலத்தால் பராமரிக்கப்படும் ரயில்களில் இந்த விளம்பரத் திட்டம் அறிமுகமாக உள்ளது. அந்த வகையில் வைகை, பல்லவன், பாண்டியன், நெல்லை, பொதிகை, ராக்ஃபோர்ட், சோழன், மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில்களின் உள் பக்கத்தில் விளம்பரங்கள் இடம்பெற உள்ளது.
இந்த விளம்பரங்களால் ரயில் பெட்டிகளுக்கு புதுப்பொலிவு கிடைக்கும் என்றும் தெற்கு ரயில்வே நம்புகிறது.