முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

'தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் தொடர் சிகிச்சை' - வாய்ப்புற்றிலிருந்து மீண்ட ராஜேந்திரன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை தளரவிடாமல் சிகிச்சை பெற்று வந்தால் அதிலிருந்து மீண்டு நலமுடன் வாழலாம் என்கிறார் புற்றுநோயிலிருந்து மீண்ட ராஜேந்திரன். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:07 AM
கோப்புப்படம்
பகிர்:

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அ. ராஜேந்திரன் (45). தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் இவர், தனது இளமைக்காலத்தில் 16 வயது முதல் புகையிலை, பீடி, மது உள்ளிட்ட பல்வேறு தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டார்.

இந்த நிலையில், திருமணத்திற்குப் பின்னர் மதுப் பழக்கத்திலிருந்து சற்று விடுபட்ட அவரைப் புற்றுநோய் விடாமல் பின்தொடர்ந்துள்ளது. அவருடைய 37-வது வயதியில் வாயில் சிறிய கட்டி போன்று தோன்றிய வாய்ப்புற்று நோய் நாளடைவில் பலவித இன்னலுக்கு ஆளாக்கியது. தொடர்ந்து, காரைக்காலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது, இடதுபுற தாடைப் பகுதியின் சதையை அகற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர் எனப் பல ஊர்களுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஏறக்குறைய சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகப் புற்றுநோயுடன் சிகிச்சைக்காக அவர் சென்ற ஊர்களும் நாள்களும் தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், கடைசியில் சென்னை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.  

Advertisement

இதன் பிறகு தனக்கு ஏற்பட்ட வாய்ப் புற்றுநோயிலிருந்து விடுபட்டதாகவும், இருப்பினும் வாய்ப்பகுதியிலுள்ள நரம்பு பகுதிகளில் சற்று வலி இருப்பதோடு தன் வாழ்வை நடத்திக்கொண்டு இருப்பதாகவும்  கூறுகிறார் ராஜேந்திரன்.

மேலும், தான் பட்ட இன்னல்களையும், கஷ்டங்களையும் வார்த்தையால் சொல்ல முடியாது, இருந்தபோதிலும், தான் பட்ட துன்பத்தை வாழ்வில் எவரும் சந்திக்கக் கூடாது, இளம் வயது முதலே இளைஞர்கள் மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் சுய கட்டுப்பாடுடன் இருந்து புற்றுநோய்க்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

புற்றுநோய்க்கு போதைப் பொருள்கள் ஒருபுறம் காரணமாக இருந்தாலும்கூட மற்றொரு புறம் சுத்தமில்லாத தண்ணீரும் காரணமாக இருக்கலாம், ஆகவே, புற்றுநோய்க்கான சிறிய அறிகுறி தென்பட்டாலும்கூட உடனடியாக சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற்றால் நோயிலிருந்து விடுபட்டு விடலாம்.

மேலும், நான் இந்த நோயை அலட்சியமாகக் கருதிய காரணத்தினாலே சுமார் எட்டு ஆண்டுகளாக படாதபாடுபட்டு உண்ண முடியாமல், உறங்க முடியாமல் தவித்து, வலிதாங்க முடியாமல் பல முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட நினைத்த போதிலும், என்னுடைய தன்னம்பிக்கைதான், என்னைத்  தளரவிடாமல் சிகிச்சைக்கு உள்படுத்தி மறுஜென்மம் எடுத்து தற்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தால் அதிலிருந்து மீண்டு நலமுடன் வாழலாம் என்றார் தூய்மைப் பணியாளர் ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments