முகப்பு
தலையங்கம்

கைப்புண்ணுக்கு கண்ணாடி!

உலகளாவிய அளவில் இந்திய மாணவர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப, நிர்வாகவியல், வணிகவியல் வல்லுநர்களும் வெற்றி பவனி வருகிறார்கள். ஆனால், அதுவே நமது கல்வித் தரத்திற்கான அடையாளமாகக் கருதிவிட முடியாது.

Updated On : 18 அக்டோபர், 2014 at 1:32 AM
பகிர்:

உலகளாவிய அளவில் இந்திய மாணவர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப, நிர்வாகவியல், வணிகவியல் வல்லுநர்களும் வெற்றி பவனி வருகிறார்கள். ஆனால், அதுவே நமது கல்வித் தரத்திற்கான அடையாளமாகக் கருதிவிட முடியாது.

சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றின் கல்வித் தரம் எப்படி இருக்கிறது போன்ற நுணுக்கமான ஆய்வின் அடிப்படையில் "டைம்ஸ்' இதழ் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடுகிறது. இந்த அறிக்கையுடன் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. 2014 - 15 ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக உயர் கல்வித் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் முதல் 200 இடங்களுக்குள் காணப்படவில்லை.

கடந்த ஆண்டுக்கான அறிக்கையில் பஞ்சாப் பல்கலைக்கழகம் 226 - 250 தரவரிசைப் பட்டியலில் காணப்பட்டது. இந்த ஆண்டுக்கான அறிக்கையில் 276 - 300 தரவரிசைக்குக் கீழே தள்ளப்பட்டுவிட்டது. சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக பஞ்சாப் பல்கலைக்கழகம் தொடர்கிறது. அடுத்தபடியாக முதல் 350 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ்) இடம் பெறுகிறது.

Advertisement

2014 - 15-க்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் 74 பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. கடந்த ஆண்டில் 77 ஆக இருந்த அமெரிக்காவின் எண்ணிக்கை 74-ஆகக் குறைந்திருக்கிறது என்றாலும், சிறந்த 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவில்தான் இருக்கின்றன. கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்திலும், ஹார்வர்ட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆசிய அளவில் எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு 20-ஆக இருந்து, இப்போது 24 பல்கலைக்கழகங்கள், முதல் 200 சிறந்த உயர் கல்விச்சாலைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஜப்பானில் 5, தென் கொரியா, ஹாங்காங் இரண்டிலும் தலா 4, சீனாவில் 3, சிங்கப்பூரில் 2 என்று அந்தப் பட்டியலில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் இடம் பிடித்திருக்கின்றன.

இந்தியாவில் 45 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 321 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 129 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 197 தனியார் பல்கலைக்கழகங்கள் என்று 650-க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளம் தெரிவிக்கிறது. இவை அல்லாமல் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

2014 - 15-க்கான நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.68,728 கோடி. இது கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டைவிட 11.1 சதவீதம் அதிகம். இந்த ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்காக ரூ.51,925 கோடி, கடந்த ஆண்டைவிட 9.9 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உயர் கல்விக்கான ஒதுக்கீடு 14.98 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.16,900 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.7,139.97 கோடி தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகவும் (ஐ.ஐ.டி.), நிர்வாகவியல் நிறுவனங்களுக்காகவும் (ஐ.ஐ.எம்.) ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு } காஷ்மீர், சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஐந்து தொழில்நுட்ப நிறுவனங்களும், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், பிகார், ஒடிசா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் புதிதாக ஐந்து நிர்வாகவியல் நிறுவனங்களும் நிறுவப்பட இருக்கின்றன. இந்தப் பத்து நிறுவனங்களை நிறுவுவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்குவதற்காக அரசு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

உயர் கல்வி நிறுவனங்கள் சர்வதேசத் தர நிர்ணயத்தின் முதல் 200 எண்ணிக்கையில் வரவில்லை என்பதற்கான அடிப்படைக் காரணத்தை நாம் உணர மறுக்கிறோம். அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.28,635 கோடி ஒதுக்குவதாலோ, தேசிய நடுநிலைக் கல்விக்காக ரூ.4,966 கோடி ஒதுக்குவதாலோ கல்வியின் தரம் அதிகரித்து விடாது.

அடிப்படைக் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதும், ஆசிரியர்களின் தரம் அதைவிட மோசமாக இருப்பதும்தான், உயர் கல்வியின் தரம் தாழ்ந்து கொண்டே வருவதற்கான காரணம் என்பதை நாம் உணர்ந்து செயல்படாதவரை, சர்வதேசத் தரப் பட்டியலில் நாம் தாழ்ந்த வண்ணம் இருப்போமே தவிர உயர்வதற்கான வாய்ப்பே இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.