ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்த எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்த எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று தில்லியில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சாத்தாவும், சந்தீப் பதக்கும் தாங்கள் பாஜகவில் இணைவதாக அறிவித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் கட்சியை விட்டு விலகி, ஒரு தனிப் பிரிவாக பாஜகவில் இணைவார்கள் என்றும் சாத்தா கூறினார்.
கட்சியை விட்டு விலகிய ஏழு பேரில் சுவாதி மாலிவாலும், ஹர்பஜன் சிங்கும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நெதர்லாந்து மற்றும் பின்லாந்துக்கு ஒரு வார கால பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை பஞ்சாப் திரும்பினார்.
Advertisement
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்த எம்.பி.க்களை கடுமையாகச் சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகவும், பஞ்சாப் மக்களுக்கு எம்.பி.க்கள் துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பஞ்சாப் மக்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் இருக்கிறார்கள், தொடர்ந்து கட்சியுடன் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். கட்சி என்பது ஒரு தனிநபரை விடப் பெரியது, வெளியேறிய 6-7 பேர் மட்டுமே பஞ்சாப் ஆகிவிடமாட்டார்கள். இவ்வாறு குறிப்பிட்டார்.