லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணையத் தொடரைத் தடைசெய்ய வேண்டும் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் கடிதம்...
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணையத் தொடரைத் தடை செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் கடிதம் எழுதியுள்ளார்.
பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவின் படுகொலை உள்ளிட்ட ஏராளமான குற்றவழக்குகளில் தொடர்புடைய தாதா லாரன்ஸ் பிஷ்னோய்யின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு “லாரன்ஸ் ஆஃப் பஞ்சாப்” எனும் புதிய இணையத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற கொடூரமான நபர்கள் போற்றப்படக் கூடாது எனவும்; இதனால், இந்த இணையத் தொடருக்குத் தடை விதிக்குமாறும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், லூதியானா மக்களவை உறுப்பினருமான அமரிந்தர் சிங் ராஜா வாரிங் இன்று (ஏப். 23) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, அவர் வெளியிட்ட கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
“பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவின் படுகொலை உள்ளிட்ட ஏராளமான கொடூரக் குற்றங்களில் தொடர்புடைய ஒருவர் குறித்து இந்த இணையத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் வரலாறு மற்றும் கலாசாரம் குறித்து உங்களுக்கு அதிகம் தெரியும். அத்தகைய புனிதமிக்க மாநிலம் ஒரு தாதாவினால் அடையாளப்படுத்தப்பட வேண்டுமா? பஞ்சாபை லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற ஒரு குற்றவாளியால் அடையாளப்படுத்துவது பஞ்சாபுக்கு அவமானம். இந்தத் தீமையை நாம் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். எனவே, இந்த தொடரைத் தடை செய்வதற்கு உங்களின் தனிப்பட்ட தலையீட்டை நாங்கள் கோருகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த இணையத் தொடரின் வெளியீட்டைத் தடைசெய்ய மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் மோடியை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தாதா லாரன்ஸ் பிஷ்னோய்யின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆவண இணையத் தொடர் ஜி5 ஓடிடி தளத்தில் வரும் ஏப். 27-ல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.