கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஊழலால் மக்கள் அதிருப்தி: பிரதமர் மோடி
கேரளத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஊழலைப் பரப்பி வருவதால், மக்களிடையே அதிருப்தி நிலவி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
கேரளத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஊழலைப் பரப்பி வருவதால், மக்களிடையே அதிருப்தி நிலவி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நமோ செயலி வாயிலாக பாஜக உறுப்பினர்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், "இந்த முறை கேரளத்தில் புதிய அரசை மட்டுமல்ல, புதிய நிர்வாக அமைப்பையும் மாநிலம் விரும்புகிறது. இந்தத் தேர்தலில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது.
கேரளத்தில் திருவனந்தபுரம் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. இதுவரையில், எவ்வளவு தவறாக ஆட்சி செய்தாலும், நிர்வாகம் செய்தாலும் மாறிமாறி ஆட்சிக்கு வரலாம் என்று இடதுசாரிகளும் காங்கிரஸும் நம்பி வந்தனர். ஆனால், அந்த எண்ணத்தை திருவனந்தபுரம் தகர்த்துள்ளது.
இதன் விளைவாக, எப்போதும் தங்களுக்குள்ளாகவே தாக்கிக் கொள்ளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தற்போது பாஜகவை குறிவைத்து வருகின்றன.
அவர்கள் ஐயப்ப பக்தர்களை எப்படி நடத்துகிறார்கள்? அவர்கள் சபரிமலை தங்க விவகாரத்தில் நேர்மையற்று செயல்படுகின்றனர். நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தையும் கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் வீணடிக்கின்றனர். ஆனால், இவையனைத்தையும் மக்கள் கவனித்து வருகின்றனர்.
கேரளத்தில் காங்கிரஸும் கம்யூனிட் கட்சியும் கம்யூனிசத்தையும் ஊழலையும் பரப்பி வருவதால், அவர்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
இன்றைய காங்கிரஸ், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் வழிநடத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மாறாக, அது மாவோயிஸ்ட் லீக் காங்கிரஸ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு உருமாறியுள்ளது.
எங்கெல்லாம் பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதோ, அங்கெல்லாம் அவர்கள் சமூகத்துக்கு விடாமுயற்சியுடனும் திறம்படவும் சேவையாற்றுவதாக மக்களுக்கு நம்பிக்கையுடன் தெரியப்படுத்துங்கள்.
என்னைப் பொருத்தவரையில், நீங்கள் அனைவரும் மோடிதான். கேரளத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் மோடிதான்" என்று தெரிவித்தார்.