இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறித்து...
இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப்.8) ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக, ஏப்.16 முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் சிறப்பு அமா்வில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது குறித்த பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இந்த திடீர் முடிவு, அவரது நிர்வாகத்தில் ஏற்பட்ட பெரும் தோல்விகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் மூடிமறைக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2024 தேர்தலிலிருந்தே ‘நாரி சக்தி வந்தன் அதினியம் 2023’ சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை நிராகரித்ததற்காக பிரதமர் மோடி, இந்தியப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.