தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
தேர்தல் நடத்தை விதிகளுக்கு மத்தியில் பிரதமரின் அதிகாரத்தை மோடி தவறாகப் பயன்படுத்துவதாக கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் நடத்தை விதிகளுக்கு மத்தியில் பிரதமரின் அதிகாரத்தை மோடி தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, கார்கேவின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கடந்த 12 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்காக எதையும் செய்யாத பிரதமர் மோடி, தனது அதிகாரபூர்வ உரையில் அப்பட்டமான பொய்கள் நிறைந்த ஓர் அரசியல் பேச்சாக மாற்றியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, எதிர்க்கட்சிகளைத் தாக்கும் நோக்கில், தனது அதிகாரத்தை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
Advertisement
இது ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.
உரையில், காங்கிரஸை 59 முறையும், பெண்களை ஒருசில முறை மட்டுமே பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதுவே, அவரது முன்னுரிமை குறித்து விளக்குகிறது.
பாஜகவின் முன்னுரிமை, பெண்கள் அல்ல; காங்கிரஸ்தான். ஏனெனில், காங்கிரஸ் சரியான பக்கம் நிற்கிறது.
காங்கிரஸ், எப்போதும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரித்து வருகிறது. 2010-ல் மாநிலங்களவையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய கட்சி நாங்கள்தான். அந்த மசோதாவை மக்களவையில் பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை.
2023-ல் மற்றொரு மசோதாவை அவர்கள் கொண்டு வந்தனர். அதையும் காங்கிரஸ் ஆதரித்தது. அந்த மசோதா இன்னும் நிலுவையிலேயே உள்ளது.
உண்மையில், மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா விவாதத்தின்போதே இது அறிவிக்கப்பட்டது. இதனைச் செய்ததும் அதே பிரதமர்தான்.
பாஜகவின் சொந்த மசோதாவை அறிவிக்க 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதே, இந்தியாவின் நாரி சக்தி (பெண்கள் சக்தி) மீதான அவர்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. மக்களிடம் பொய் கூறுவதை மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2023 சட்டத்தின்கீழ், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அவர் அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை மறுக்காதீர்கள்.
தொகுதி மறுவரையறை மசோதாவை மகளிர் இடஒதுக்கீட்டு மசோதவையும் ஒன்றோடொன்று குழப்புவதை நிறுத்துங்கள். இது முற்றிலும் தொகுதி மறுவரையறை மசோதாவாகும். இது பிளவுகளை ஏற்படுத்தவும், பாஜகவுக்கு பயனளிக்கும்வகையில் தேர்தல் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் கொண்டுவரப்பட்டது.
140 கோடி இந்தியர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். காங்கிரஸ், எப்போதுமே சீர்திருத்தங்களை ஆதரிக்கும் கட்சியாக இருந்து வருகிறது.
பசுமைப் புரட்சியின் மூலம் நாட்டின் விவசாயத்தை காங்கிரஸ் மாற்றியமைத்தது. வெண்மைப் புரட்சியின் மூலம் பால்வள மேம்பாட்டை வலுப்படுத்தியது, விண்வெளித் துறையை உருவாக்கியது, அணுசக்தி நாடாக மாற்றியது, 1991-ல் பொருளாதாரத்தை உயர்த்தியது.
மோடி பதவியேற்பதற்கு முன்பே, 60 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்ப்ச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றை காங்கிரஸ் நிறைவேற்றியது. ஆனால், இவற்றையெல்லாம் மோடி ரத்து செய்தார்.
இந்திய வரலாற்றில், பெண்களுக்கு ஆதரவளிக்கும் மிக முக்கியமான சில சட்டங்களை காங்கிரஸ் நிறைவேற்றியது. உங்கள் கொள்கை முன்னோர்கள் எதிர்த்த இந்து சட்ட மசோதாக்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சட்டங்கள், குடும்ப வன்முறை மசோதாக்கள், நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் வரையில்.
பாஜகவின் செயல்கள் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. ஹத்ராஸ் பிரச்னைக்கு அவர்களிடம் பதில் இல்லை. உன்னாவோ பிரச்னைக்கு பதில் இல்லை, ஹரியாணாவின் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் குறித்தும் பதில் இல்லை.
பாலியல் வன்கொடுமை செய்தவர்களையே அவர்களின் கட்சிக்குள் வைத்து பாதுகாக்கின்றனர். பில்கிஸ் பானு வழக்கில் பாலியல் குற்றவாளிகளை அவர்கள் விடுவித்தனர். குற்றவாளிகளுக்கும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் மாலை அணிவித்து வரவேற்கின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருப்பதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகள் கூறுகின்றன.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கும்மேல் ஆட்சியில் இருந்தும் - சர்வதேச நெருக்கடி, பணவீக்கம் அதிகரிப்பு, மோசமடையும் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு சரிவு, மக்கள் அவதிப்படும் வரும்நிலையில், மக்களிடம் உரையாற்றுவதற்கு பிரதமருக்கு அரசியல் உரையைத் தவிர வேறெதுவுமில்லை.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோதிலும், பாஜகவின் தோல்வி, துரோகத்தை மறைப்பதற்காக, எதிர்க்கட்சிகளைக் குறைகூறத் தொடங்கிவிட்டார் மோடி.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டைப் பிளவுபடுத்துகிறது. ஆர்எஸ்எஸ், இந்தியர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களை ஆதரித்தது.
மோடியின் அரசியல் முதலாளியான ஆர்எஸ்எஸ், பெண்களுக்கு எதிரானவர்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். அவர்கள் இந்திய அரசியலமைப்பை நம்பாமல், பிரிவினையை ஊக்குவிக்கும் மந்திரத்தைத்தான் நம்புகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.