தலையங்கம்

பொது மன்னிப்பு கூடாது!

ஜி-20 அமைப்பின் சர்வதேச அளவிலான வங்கிச் சேவை வெளிப்படைத்தன்மை முயற்சி வெற்றி பெறுமானால், கருப்புப் பணத்தை

ஆசிரியர்

அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பிரமுகர்களின் கருப்புப் பணம் இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறது. தங்களது நாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்களை அடையாளம் காட்டுவது என்பது, அந்த வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும், அது ஒரு தனி மனிதரின் அந்தரங்க சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும், சம்பந்தப்பட்ட அரசுகள் இதற்கு விளக்கம் அளிக்கின்றன. கருப்புப் பணமும், திருட்டுப் பணமும் பற்றியத் தகவல்களைத் தெரிவிப்பது எப்படி தனிமனிதச் சுதந்திரத்துக்கு எதிரானது என்பது புரியவில்லை.

இப்படிப்பட்டச் சூழலில், ஆஸ்திரேலியாவிலுள்ள கேய்ர்ன்ஸ் நகரத்தில் கூடிய ஜி-20 அமைப்பு, 2017 முதல் வங்கிக் கணக்குகள் தொடர்பான எல்லாத் தகவல்களையும் உறுப்பினர் நாடுகளின் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வதென முடிவெடுத்திருக்கிறது. சுவிட்சர்லாந்து, மோரீஷஸ் தொடங்கி இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் விரைவிலேயே கையொப்பமிட இருக்கின்றன. 2017 செப்டம்பர் மாதத்திற்குள் 122 நாடுகளை இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என்று ஜி-20 அமைப்பு கருதுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, இது நமக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பு. சுவிட்சர்லாந்தில் மட்டும் ஏறத்தாழ 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 84 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு இந்தியக் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 2012-இல் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி ஏறத்தாழ 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்) பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம், சுவிட்சர்லாந்து அரசு, தனது நாட்டிலுள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை, இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ளச் சம்மதித்தது. இத்தனை காலமும் அதுபோன்ற தகவல் பரிமாற்றம், வாடிக்கையாளர்களுக்குத் தாங்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்று கூறிவந்த சுவிட்சர்லாந்து வங்கிகளின் திடீர் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஒருவேளை, அங்கே கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் அதை வேறு நாடுகளுக்கு மாற்றி இருந்தாலும் வியப்படையத் தேவையில்லை.

ஜி-20 அமைப்பின் சர்வதேச அளவிலான வங்கிச் சேவை வெளிப்படைத்தன்மை முயற்சி வெற்றி பெறுமானால், கருப்புப் பணத்தை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மாற்றுவதன் மூலம் தப்பிக்க முயற்சி செய்பவர்களின் எண்ணம் நிறைவேற வழியில்லை. 2009 தேர்தலின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை உடனடியாக மீட்டு வருவோம் என்று வாக்குறுதிகளை அளித்ததே தவிர, முழு மனதுடன் முயற்சியில் ஈடுபடாததாலோ அல்லது அந்த நாடுகள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்ததாலோ, இன்னமும் இந்தியர்களின் கருப்புப் பணம் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறது.

அன்னிய முதலீடு என்கிற பெயரில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் பணத்தில், வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணமும் கணிசமாகவே இருக்கிறது என்பது தெரிந்த ஒன்று. வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பத்திரப்படுத்தி இருப்பவர்

களின் பட்டியலில் அரசியல் பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், பெரிய தொழிலதிபர்கள், நடிக - நடிகையர் என்று செல்வாக்குள்ள பிரமுகர்கள்தான் இடம் பெறுவார்கள் என்பதாலேயே,  இந்தப் பிரச்னையில் நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது என்று கருத இடமிருக்கிறது.

நரேந்திர மோடி அரசு இந்தப் பிரச்னையில் தீவிர நடவடிக்கையில் இறங்க முற்பட்டிருப்பதும், சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்த ஜி-20 நாடுகள் வரி ஏய்ப்பவர்களுக்கு எதிராகக் களம் இறங்கி இருப்பதும், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்

களின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதில் வியப்பில்லை. தாங்களே முன்வந்து அபராதத் தொகையுடன் வரியையும் கட்ட முன்வரும் வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்

களுக்குப் பொது மன்னிப்பு அளிக்க அரசு திட்டம் அறிவிக்க வேண்டும் என்கிற வர்த்தகப் பிரிவுகளின் அமைப்பின் சார்பிலான வேண்டுகோள் விஷமத்தனமானது. நேர்மையாக வரி கட்டி, பொறுப்பான குடிமக்களாக இருப்பவர்களை அவமானப்படுத்தும் செயலாகத்தான் அது இருக்கும்.

கருப்புப் பணம் பதுக்கி வைப்பது என்பது தேசத்துரோகத்துக்கு இணையான குற்றம். அந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர மன்னிக்கப்படக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT