தலையங்கம்

தேவையற்ற கொண்டாட்டம்!

அரை நூற்றாண்டுக்கு முன்னால், ஆகஸ்ட் 28, 1965-இல் இந்திய ராணுவ வீரர்கள் ஹாஜி பிர் கணவாயைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது சுதந்திர இந்திய சரித்திரத்தில் பெருமைக்குரிய நன்னாள். சுதந்திர இந்திய ராணுவத்தின் முதல் வெற்றி அது என்பதால்,

ஆசிரியர்

அரை நூற்றாண்டுக்கு முன்னால், ஆகஸ்ட் 28, 1965-இல் இந்திய ராணுவ வீரர்கள் ஹாஜி பிர் கணவாயைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது சுதந்திர இந்திய சரித்திரத்தில் பெருமைக்குரிய நன்னாள். சுதந்திர இந்திய ராணுவத்தின் முதல் வெற்றி அது என்பதால், நரேந்திர மோடி அரசு 1965 ராணுவ வெற்றியின் பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
 1965 பாகிஸ்தான் போரைப் பொருத்தவரை, அந்தப் போருக்குக் காரணம் இந்தியா அல்ல. அன்றையப் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி பலவீனமானவர் என்று பாகிஸ்தான் கருதியதால் நம் மீது திணிக்கப்பட்ட அந்தப் போரில், நாம் அடைந்த வெற்றியை தார்மிக ரீதியாகவும் குறை சொல்ல முடியாது.
 "கீழே விழுந்தோமே தவிர, மீசையில் மண் ஒட்டவில்லை' என்பதுபோல, தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத பாகிஸ்தான், செப்டம்பர் 6-ஆம் நாளை "யோம் - இ - திஃபா' அல்லது ராணுவ நாள் என்று கொண்டாடுகிறது. பாகிஸ்தான் முழுமையாகப் பிடிபட்டுவிடவில்லை என்கிற ஆறுதலின் அடையாளம் அது என்றுதான் அதை நாம் கருத வேண்டும்.
 1965 இந்தியா - பாகிஸ்தான் போரில் கடற்படைக்கும், விமானப் படைக்கும் அதிகம் வேலை இருக்கவில்லை. பாகிஸ்தான் ஒரு சில பகுதிகளில் வெற்றி பெற்றது என்றாலும்கூட, அதைவிட நான்கைந்து மடங்கு அதிக இடங்களை இந்திய ராணுவம் கைப்பற்றி விட்டிருந்தது. லாகூரை இந்திய ராணுவம் நெருங்கி விட்டிருந்த நிலைமை.
 கட்ச் பகுதியிலும், ஜம்மு - காஷ்மீர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் மிகப் பெரிய தோல்வியையும், உயிரிழப்பையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்திய ராணுவத்தின் டாங்குகள் பஞ்சாப் பகுதியில் முன்னேறி லாகூரைக் கைப்பற்றும் நிலையில் இருந்தன. போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்ளாமல், அதே வேகத்தில் தொடர்ந்திருந்தால், ஒருவேளை பாகிஸ்தான் வசமிருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக்கூட இந்திய ராணுவம் மீட்டிருக்கக் கூடும்.
 அமெரிக்க நூலகக் காங்கிரஸ் என்கிற அமைப்பின் ஆய்வு "1965 இந்திய, பாகிஸ்தான் போர் தொடர்ந்து நடைபெற்றிருக்குமேயானால், பாகிஸ்தானின் தோல்வியில் முடிந்திருக்கும்' என்று கூறுகிறது. போர் நிறுத்தத்துக்கு சர்வதேச நிர்பந்தம் மட்டுமே காரணமல்ல என்பதுதான் 1965 இந்திய, பாகிஸ்தான் போரைப் பற்றி அதிகம் பேசப்படாத உண்மை.
 ஒருபுறம் இந்திய ராணுவம் தான் இழந்திருந்த பகுதிகளை மீட்கத் தொடங்கியதுடன், பாகிஸ்தானுக்குள் கணிசமாக முன்னேறவும் தொடங்கி விட்டிருந்த நிலைமை. கட்ச், பஞ்சாப் பகுதிகளில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் தங்களது ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையத் தொடங்கி விட்டிருந்தனர். அப்போது, இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த ஜெயந்தோ நாத் சௌத்ரி ஒரு தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.
 அவருக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, இந்திய ராணுவத்திடம் இருந்த வெடிமருந்துக் கையிருப்பின் அளவு குறைந்து விட்டிருந்தது. அதைப் போல, தாக்குதலில் பழுதுபட்ட, சிதைக்கப்பட்ட டாங்குகளின் எண்ணிக்கையும் உண்மையை விட அதிகமானதாகத் தெரிவிக்கப்பட்டது. தனக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்களை, மறு ஆய்வு செய்யாமல், தலைமைத் தளபதி பதற்றமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
 வெற்றிமுகத்தில் ராணுவம் இருக்கும்போதே, நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால், வெற்றியடைந்து விட்டதாகவே கருதலாம் என்று அன்றையப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு அவர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. விளைவு, செப்டம்பர் 22, 1965-இல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
 அந்தப் போரில் என்ன நடந்தது, எது உண்மை என்பது ராணுவ ரகசியம். 1965 போர் தொடர்பான ராணுவ ஆவணங்கள் வெளியிடப்பட்டால்தான் உண்மை வெளிப்படும். ஒன்று மட்டும் நிச்சயம். 1962 தோல்வியின் அவமானத்தில் சோர்ந்து கிடந்த இந்தியாவை மீண்டும் வீறுகொண்டு எழச் செய்த, நமக்கு சுய மரியாதையை மீட்டுத் தந்த நிகழ்வு 1965-இல் நடந்த இந்திய, பாகிஸ்தான் போர்.
 1971-இல் நடந்த இந்திய, பாகிஸ்தான் போரின் விளைவாக, பாகிஸ்தான் பிளவுபட்டு வங்கதேசம் என்கிற நாடு உருவானது. இந்தியாவுக்கு அது மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி என்பதில் சந்தேகமில்லை. 1965 போரில், காஷ்மீரை இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் நடத்திய முயற்சியை நாம் முறியடித்தோம் என்பதைத் தவிர, வெற்றி என்று கொண்டாட எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. லால் பகதூர் சாஸ்திரி என்கிற பிரதமரின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
 போர் வெற்றிகளைக் கொண்டாடுவது என்பது நமது தன்னம்பிக்கையை வளர்க்கவும், வீரத்தை வெளிப்படுத்தவும் உதவும் என்கிற கோட்பாடு, இன்றைய மாறிவிட்ட சூழலில் ஏற்புடையதல்ல. பல நகரங்களும், கிராமங்களும் அழிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்களின் மரணத்தின் மீதும், அழிவின் மீதும் எழுப்பப்படும் வெற்றியைக் கொண்டாடுவது சரியாகப் படவில்லை. இது விழா எடுத்துக் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல.
 தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னம் எழுப்புவது பற்றிக் கூறியிருந்தார். தனது முதலாவது நிதிநிலை அறிக்கையில் அருண் ஜேட்லி அதற்காக ரூ.100 கோடியை ஒதுக்கி இருந்தார். பயன்படுத்தப்படாததால், அந்த ஒதுக்கீடு காலாவதியாகிவிட்டது. இந்த ஆண்டு அரசு அதை மறந்தே விட்டது. இந்த நிலையில், எதற்காக 1965 போர் வெற்றியின் பொன் விழாக் கொண்டாட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது? புரியவில்லை!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT