தலையங்கம்

"பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்கள்!

ஆசிரியர்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகையே உலுக்கிய, "பனாமா பேப்பர்ஸ்' என்று பரவலாக அறியப்பட்ட இணைய பூகம்பத்தின் தொடர்ச்சியாக இப்போது "பாரடைஸ் பேப்பர்ஸ்' வெளியாகியிருக்கிறது.
 2,16,488 தனிநபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த 1.15 கோடி ஆவணங்கள் அவர்களது வழக்குரைஞர்கள், நிதி ஆலோசகர்கள் ஆகியோரிடமிருந்து திருடப்பட்டு இணையத்தில் வெளிக்கொணரப்பட்டதைத்தான் "பனாமா பேப்பர்ஸ்' என்று கூறுகிறார்கள். இந்த ஆவணங்கள் பனாமா என்கிற நாட்டிலுள்ள கார்ப்பரேட் நிதி ஆலோசனை நிறுவனமான மொசக் போனஸ்கா என்ற நிறுவனத்திலிருந்து களவாடப்பட்டவை என்று கூறப்படுகிறது. நிழல் நிறுவனங்களின் பெயரில் லஞ்சமாகவும், தவறானவழியிலும், வரி ஏய்ப்பின் மூலமும், சட்டத்திற்கு விரோதமாகவும் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்தது குறித்த விவரங்கள்தான் இந்த ஆவணங்கள்.
 உலகின் சில நாடுகள் "வரி சொர்க்கங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம், இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் அல்லது வரியே இல்லாத சூழல் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படுகின்றன. அதனால், உலகெங்கிலுமுள்ள பல பணக்காரர்கள் தவறான முறையில் ஈட்டிய பெரும் பணத்தை அல்லது தங்களது நாடுகளில் வரி ஏய்ப்பு செய்த பணத்தை இங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் அல்லாமல், பல தீவு நாடுகளும் வரி ஏய்ப்பு செய்பவர்களின் சொர்க்க பூமியாகக் கருதப்படுகின்றன.
 "பனாமா பேப்பர்ஸ்' கசிவில் 19 வரிச் சொர்க்கங்களில் பதுக்கிவைக்கப்பட்ட 1.34 கோடி ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளிப்பட்டன. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்களில் 714 இந்தியப் பிரமுகர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
 "பனாமா பேப்பர்ஸ்' கசிவு வெளிப்பட்டவுடன் உடனடியாக அதன் மீது விசாரணை நடத்துவதாக அரசு அறிவித்தது. இப்போது "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, கசிவான ஆவணங்கள் குறித்தும், வரிச் சொர்க்கங்களில் பணத்தை சட்ட விரோதமாக முதலீடு செய்திருக்கும் இந்தியர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார். இதுபோன்ற விசாரணைகள் அறிவிப்புடன் நின்று விடுகின்றனவே தவிர, அவை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதில்லை என்பதுதான் நமது கடந்த கால அனுபவம்.
 "பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் 426 நபர்கள் குறித்து கடந்த 18 மாதங்களாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கத்தக்கவை என்று 147 நபர்கள்தான் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அந்த 147 நபர்களின் மொத்த முதலீடே ரூ.792 கோடி. அதாவது, சராசரி ரூ.5 கோடி. ரூ.5 கோடியை பாதுகாப்பதற்காகவோ, வரி ஏய்ப்பதற்காகவோ வரிச் சொர்க்கங்களை நாடுவார்கள் என்பது நகைப்பை ஏற்படுத்துகிறது.
 வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணம் அனைத்துமே வரி ஏய்ப்பு மூலம் சம்பாதித்த பணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. "பனாமா பேப்பர்ஸ்' மற்றும் "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பலர் வரி ஏய்ப்பில் சம்பந்தப்பட்டவர்களாகத் தெரியவில்லை. "பனாமா பேப்பர்ஸ்' குறித்து நடத்திய விசாரணையில், 279 பதிவுகள் எந்தவித சட்டமீறலிலும் ஈடுபடவில்லை என்று தெரியவந்திருக்கிறது. ஆகவே, "பாரடைஸ் பேப்பர்'ஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே ஒருவரை வரி ஏய்ப்பவர், பதுக்கல்காரர் என்றெல்லாம் வகைப்படுத்துதல் நியாயமல்ல.
 தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வெளிநாடுகளில் வணிகம் செய்யவும், தொழில் நடத்தவும் சட்டம் அனுமதிக்கிறது. அவர்கள் வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை அங்கே முதலீடு செய்திருக்கலாம். இன்று பல இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாக மாறியிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை வரிச் சொர்க்கங்களில் முதலீடு செய்திருந்தால், அதை நாம் குற்றமாகக் கருதிவிட முடியாது.
 எந்தவொரு தேசமும் முறையான, திறமையான வரி விதிப்பு அடிப்படையில்தான் செயல்படுகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் வரி செலுத்துபவர்கள் குறித்த தரவுகளை ஆவணப்படுத்துவது எளிது. குறைந்த வரி விதிப்பும், அதிகமான வரி செலுத்துபவர்களும் என்கிற முறைதான் திறமையான வரிவிதிப்பு முறையாக இருக்கும் என்று உலகம் புரிந்துகொண்டிருக்கிறது.
 ஜி.எஸ்.டி. வரி விதிப்பையே எடுத்துக்கொண்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருள்களுக்கும் 5 சதவீதம்தான் வரி என்று நிர்ணயித்திருந்தால் சிக்கலும் இருந்திருக்காது, வரி வருவாயும் கணிசமாக இருந்திருக்கும். குறைந்த வரி விதிப்பை மேற்கொள்வதும், முறையாக வரி வசூலிப்பதும்தான், வெளிநாடுகளில் பணம் பதுக்குவதை தடுப்பதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.
 அதேநேரத்தில், வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் லஞ்சப் பணமும், தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் நிதியுதவியும் முற்றிலுமாக வேரறுக்கப்படுவது என்பதில் அரசு குறியாக இருந்தாக வேண்டும். இதுதான் "பனாமா பேப்பர்ஸ்', "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்கள் நமக்கு உணர்த்தும் பாடம்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT