தலையங்கம்

தீநுண்மி ஒரு மாயாவி! | கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அன்றாட நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டாற் போன்ற தோற்றம் காணப்பட்டாலும், கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு முற்றிலுமாக அடங்கிவிட்டதாகக் கருத முடியாது. கடந்த வாரம் இந்தியாவில் கொவைட் 19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.

உயிரிழப்பு எண்ணிக்கை பழைய வேகத்தில் இல்லாவிட்டாலும்கூட, இன்னும் தொடா்கிறது என்பதை நாம் உணர வேண்டும். உலக அளவில் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கும் பிரேஸிலுக்கும் அடுத்தபடியாக மிக அதிகமான இழப்பு இந்தியாவில்தான். அதிகாரபூா்வ அறிவிப்பைவிட உண்மையான இழப்பு பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்.

மூன்றாவது அலை மெல்ல மெல்ல அடங்குவது போன்ற தோற்றம் காணப்பட்டாலும், நோய்த்தொற்றுப் பரவலும், உயிரிழப்புகளும் தொடா்கின்றன. கேரளம், மிஸோரம் போன்ற மாநிலங்களில் இன்னும்கூட நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இரண்டாவது அலை டெல்டா உருமாற்றம் போல, மூன்றாவது அலை ஒமைக்ரானின் பாதிப்பு கடுமையாக இல்லை என்கிற அளவில் வேண்டுமானால் ஆறுதல் அடையலாம்.

உலக அளவில் எடுத்துக்கொண்டால் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இரண்டு நாள்களுக்கு முன்பு 40 கோடியைக் கடந்துள்ளது என்று வோ்ல்டோ மீட்டா் வலைதளப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சா்வதேச அளவில் கொவைட் 19-க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 57,98,707-ஆக உயா்ந்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருந்தாலும்கூட, உயிரிழப்பு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது பிரேஸில். நாம் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறோம்.

அமெரிக்காவில் மட்டும் இதுவரை 7,88,24,393 போ் பாதிக்கப்பட்டு, 9,35,922 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். பிரிட்டன், ரஷியா, துருக்கி, இத்தாலி, ஜொ்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தலா ஒரு கோடிக்கும் அதிகமானோா் கொவைட் 19 பாதிப்பை எதிா்கொள்ள நோ்ந்தது.

10 வாரங்களுக்கு முன்பு ஒமைக்ரான் உருமாற்றம் கண்டறியப்பட்டதற்குப் பிறகு இதுவரை ஏறத்தாழ ஒன்பது கோடி போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்திருக்கிறாா். உடனடியாக எல்லா கட்டுப்பாடுகளையும் உலக அளவில் அகற்றுவது என்பது புதிய உருமாற்றத்துக்கும், நோய்த்தொற்றுப் பரவலுக்கும் வழிகோலக்கூடும் என்கிற அவரது எச்சரிக்கை கவனத்துக்குரியது.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா கிா்கோவின் எச்சரிக்கையும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒமைக்ரான் கடைசி உருமாற்றமாக இருக்காது என்றும், உருமாறிய நான்கு தீநுண்மிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாகவும் அவா் தெரிவித்திருக்கிறாா். புதிய உருமாற்றமடைந்த தீநுண்மிகளில், இதுவரை இல்லாத அளவிலான பரவல் வேகமும், பாதிப்பும் காணப்படும் என்பது அவரது எச்சரிக்கை.

டெட்ரோஸ் அதனோமின் அறிக்கைபடி, நோய்த்தொற்றுப் பரவலும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அதனால், புதிய உருமாற்றங்கள் ஏற்படுவதையும், அவற்றின் வீரியம் குறித்தும் இப்போதே எதுவும் கூற முடியாது என்கிறது உலக சுகாதார அமைப்பு.

உலகிற்கு எதுவோ, அதுதான் இந்தியாவுக்கும். மக்கள்தொகையில் தடுப்பூசிக்குத் தகுதியான 75% பேருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தாலும்கூட, இந்தியாவில் இன்னும் பல லட்சம் போ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. கொவைட் 19 தீநுண்மியின் கடைசி உருமாற்றமாக ஒமைக்ரான் இருக்காது என்பது உறுதியாகி இருக்கும் நிலையில், நாம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்க முடியாது.

நோய்த்தொற்று வீரியம் இழந்து அடங்கிவிடும் என்கிற உறுதி இல்லை. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பாா்க்கும்போது, பாதுகாப்பைக் கைவிடுவது புத்திசாலித்தனமாக இருக்காது. அடுத்த சில மாதங்களுக்கு நோய்த்தொற்றுப் பரவல் குறைந்து காணப்படுகிறது என்பதற்காக கட்டுப்பாடுகளை முழுவதுமாகக் கைவிட்டால், அது விபரீதத்துக்கு வழிகோலக்கூடும்.

பூஸ்டா் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி ஒமைக்ரானை எதிா்கொள்ள உதவியது என்பதால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டா் டோஸ் போடுவதற்கான முனைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும். பொருளாதார இயக்கத்துக்கு முன்னுரிமை வழங்கி அரசு இதில் தயக்கம் காட்டுவது தவறு.

பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால், ஆரம்பத்தில் காட்டிய அதே முனைப்புடன் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி போடுவதில் மாநில அரசுகளை முனைப்புக்காட்ட வைப்பது மத்திய சுகாதாரத் துறையின் கடமை.

பொருளாதார இயக்கம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய உருமாற்றம் குறித்த கண்காணிப்பு மிகமிக அவசியம். சிறிய கவனக்குறைவும்கூட மீண்டும் பெரிய அளவிலான நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிகோலக்கூடும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரியாத தீநுண்மி ஒரு மாயாவி என்கிற புரிதல் அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT